டெல்லி: முன்னாள் பில்லியனரும் தொழிலதிபருமான அனில் அம்பானிக்கு கடந்த சில வருடங்களாக கெட்ட காலமாகவே உள்ளது. அதிலும் பில்லியனர் என்ற பதவியில் இருந்து நழுவி, தற்போது கோடீஸ்வரர் என்ற நிலையில் உள்ளார். ஆனால் போகிற போக்கை பார்த்தார் லட்சாதிபதியாகி விடுவார் போல.
கடன் பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன் என்ற வரிகளுக்கு ஏற்ப, கடன் பெற்று தனது சொத்துகளை இழந்து கடனால் அவஸ்தை பட்டு வருகிறார் அனில் அம்பானி.
அதிலும் குறிப்பாக கடந்த ஆறு மாதங்களில் மட்டும் அனில் அம்பானியின் பங்கு சொத்து 73.43 சதவிகிதம் சரிந்து, வெறும் 970 கோடி ரூபாய் மட்டும் தான் உள்ளது. இதுவே கடந்த ஜூன் 11 அன்றுன் 3,651 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
தொடர் வீழ்ச்சி
கடந்த 2008ம் ஆண்டு ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்ட உலகப் பணக்காரர்கள் பட்டியியலில் ஆறாவது இடத்தை பிடித்தார். அந்த நேரத்தில் அவரின் சொத்து மதிப்பு 42 பில்லியன் டாலர்களாகும். ஆனால் யார் கண்பட்டதோ தெரியவில்லை. அன்றிலிருந்து அவரின் சொத்து மதிப்பு இறங்கு முகமாகவே உள்ளது. அவரின் அத்துனை தொழில்களும் நஷ்டத்திலேயே இருந்து வருகின்றன. இதனால் நாளுக்கு கடனும் அதிகரித்து வருகிறது. இதன் பிரதிபலனே பங்கு சந்தையில் பங்கு மதிப்பும் வீழ்ச்சி கண்டு வருகிறது.
மொத்த சந்தை மதிப்பு
ரிலையன்ஸ் பவர் லிமிடெட் நிறுவனத்தின் சந்தை மதிப்பானது டிசம்பர் 18ம் தேதியின் படி, 942.52 கோடி ரூபாயாக இருந்துள்ளது. இதே காலத்தின் படி, அனில் அம்பானி மற்ற நிறுவனங்களான ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் லிமிடெட் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 583.84 கோடி ரூபாயாகவும், இதே ரிலையன்ஸ் நாவல் அன்ட் இன்ஜினியரிங் லிமிடெட் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 413.05 கோடி ரூபாயாகவும், ரிலையன்ஸ் கேப்பிட்டல் நிறுவனத்தின் சந்தை மதிப்பானது 294.41 கோடி ரூபாயாகவும் உள்ளது. இதே ரிலையன்ஸ் ஹோம் ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 126.96 கோடி ரூபாயாகவும் உள்ளது.
படு வீழ்ச்சி
கடந்த 2008ம் ஆண்டில் அனில் அம்பானியின் சந்தை மதிப்பானது 4 லட்சம் கோடி ரூபாயாக இருந்த நிலையில், தற்போது இதன் மதிப்பு வெறும் 2361 கோடி ரூபாய் மட்டுமே. இதே பட்டியிடப்பட்ட 5 நிறுவனங்களின் சந்தை மதிப்பும் கடந்த ஜூன் 11 நிலவரப்படி 7,539 கோடி ரூபாயாகவும் இருந்தது. இந்த நிலையில் விளம்பரதாரர்கள் மற்றும் விளம்பரதாரர்களின் பங்குகளின் மதிப்பு அம்பானியின் பங்கு செல்வமாகக் கருதப்படுகிறது. இந்த நிலையில் ஜூன் 11 அன்று அனில் அம்பானி பில்லியனர் கிளப்பிலிருந்து வெளியேறியதாக கூறப்பட்ட நிலையில், அன்றைய மதிப்பு வெறும் 3,651 கோடி ரூபாயாக இருந்துள்ளது.
எந்தெந்த நிறுவனங்கள்?
தற்போது அனில் அம்பானி ஐந்து நிறுவனங்கள் மட்டும் பங்கு சந்தையில் பட்டியிடப்பட்டுள்ளன. இதில் ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர், ரிலையன்ஸ் பவர், ரிலையன்ஸ் கேப்பிட்டல், ரிலையன்ஸ் நாவல் அண்ட் இன் ஜினியரிங், ரிலையன்ஸ் ஹோம் ஃபைனான்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் உள்ளன. இதில் திவாலான ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்தின் சந்தை மதிப்பினை கருத்தில் கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பங்குகள் அடமானம்
இந்த நிறுவனங்களின் பெரும்பாலான பங்குகள் அடமானம் வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. அதிலும் ரிலையன்ஸ் நாவல் நிறுவனத்தின் முழுமையாக அடமானம் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. ரிலையன்ஸ் இன்ஃப்ராவின் 98.11 சதவிகிதம் அடமானம் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. ரிலையன்ஸ் கேப்பிட்டல் 96.39 சதவிகிதமும், ரிலையன்ஸ் பவர் 82.53 சதவிகித பங்குகளும் அடமானத்தில் உள்ளதாக கருதப்படுகிறது.


Click it and Unblock the Notifications