லண்டன்: ஒரு காலத்தில் உலகின் ஆறாவது பெரிய பணக்காரராக இருந்த அனில் அம்பானி இப்போது, பெரும் கடனாளியாக வலம் வந்து கொண்டு இருக்கிறார்.
அனில் அம்பானியின் நிறுவனங்களை எல்லாம் அனில் திருபாய் அம்பானி குழுமம் (ADAG - Anil dhirubai Ambani Group) என்று சொல்வார்கள்.
இந்த குழுமத்தில் இருக்கும் பெரும்பாலான கம்பெனிகள் தொடர்ந்து அடி மேல் அடி வாங்கிக் கொண்டே இருக்கிறது. இந்த குழும நிறுவனங்களில் ஆர் காம் என்று சொல்லப்படும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் தொடர்ந்து பல சிக்கல்களை உண்டாக்கிக் கொண்டே இருக்கிறது.
அண்ணன் உதவி
அவ்வளவு ஏன்..? கடந்த பிப்ரவரி 20, 2019 அன்று, அடுத்த நான்கு வார காலத்துக்குள் எரிக்ஸன் நிறுவனத்துக்கு அனில் அம்பானியின் ஆர் காம் நிறுவனம் செலுத்த வேண்டிய பணத்தைச் செலுத்த வேண்டும் அல்லது 3 மாதம் சிறை தண்டனை எதிர் கொள்ள வேண்டி இருக்கும் என உச்ச நீதிமன்ற கெடு விதித்தது. இந்த சூழலில் அண்ணன் முகேஷ் அம்பானி 458.77 கோடி ரூபாயை தம்பிக்கு கொடுத்து உதவினார். மயிரிழையில் ஜெயில் தண்டனையில் இருந்து தப்பினார் தம்பி.
கொடுமையிலும் கொடுமை
இப்போது வரை, தம்பி அனில் அம்பானியின் சூழ்நிலை சரியானதாகத் தெரியவில்லை. தொடர்ந்து புதுப் புது பிரச்னைகள் வந்து கொண்டே இருக்கின்றன. தற்போது புதிதாக, ரிலையன்ஸ் பவர் நிறுவனத்தின் துணை நிறுவனங்களில் ஒன்றான விதர்பா இண்டஸ்ட்ரீஸ் பவர் லிமிடெட் நிறுவனம் சமீபத்தில் கடன் சிக்கலில் தவித்துக் கொண்டு இருக்கிறதாம். சரி மீண்டும் ஆர் காம் பிரச்னைக்கு வருவோம்.
ஆர் காம் சனி
அண்ணன் முகேஷ் அம்பானி இந்திய டெலிகாம் வியாபாரத்தில் தட்டித் தூக்கிக் கொண்டு இருக்கிறார் என்றால், தம்பி அனில் அம்பானியின் டெலிகாம் வியாபாரத்தால் மேலும் மேலும் கடனில் மூழ்கிக் கொண்டு இருக்கிறார். ஆர் காம் எனப்படும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் சீனாவின்
1. Industrial and Commercial Bank of China Ltd
2. China Development Bank
3. Export-Import Bank of China என மூன்று வங்கிகளிடமும் கடன் வாங்கி இருக்கிறது.
எவ்வளவு தொகை
கடந்த 2012-ம் ஆண்டு இந்த மூன்று சீன வங்கியும், அனில் அம்பானியின் ஆர் காம் நிறுவனத்துக்கு, சுமாராக $925 மில்லியன் டாலர் கடன் கொடுத்து இருக்கிறார்களாம். இந்த கடனுக்கு அனில் அம்பானி தனிப்பட்ட முறையில் கேரண்டி (Personal Guarantee) கொடுத்து இருப்பதாகச் சொல்கிறது சீன வங்கிகள்.
திருப்பிச் செலுத்தவில்லை
அந்தக் கடனை ஒழுங்காகத் திருப்பிச் செலுத்தவில்லை. இப்போது ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனமும் முழுமையாக திவாலாகிவிட்டது. இந்தியாவில் Bankruptcy-க்கு எப்போதோ விண்ணப்பித்துவிட்டது அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ். எனவே தற்போது சீன வங்கிகள், கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்கிறார்கள். அனில் அம்பானி, இந்த கடனுக்கு பர்சனல் கேரண்டி கொடுத்தது நினைவிருக்கலாம்.
எவ்வளவு கேட்கிறார்கள்
இந்த மூன்று சீன வங்கிகளும் தங்களுக்கு அனில் அம்பானி $680 மில்லியன் டாலர் திருப்பிக் கொடுக்க வேண்டும் என லண்டன் நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்திருக்கிறார்கள். லண்டன் நீதி மன்றமோ, அடுத்த ஆறு வாரத்தில் 100 மில்லியன் டாலரை 3 சீன வங்கிகளுக்குச் செலுத்தச் சொல்லிக் கேட்டு இருக்கிறது.
நான் ஒரு ஜீரோ
ஆனால் அனில் அம்பானியோ "என் முதலீடுகளின் மதிப்பு பெரிய அளவில் சரிந்துவிட்டது. என் நிரக மதிப்பு (Net Worth) ஜீரோவாகி விட்டது. பணத்தைத் திரட்ட என்னிடம் சொத்துக்கள் கூட இல்லை. என்னால் வேறு எந்த இடத்தில் இருந்தும் பணத்தை திரட்ட முடியவில்லை" எனச் சொல்லி இருக்கிறார். ஒரு காலத்தில் உலக பணக்காரர்களில் ஒருவராக இருந்த அனில் அம்பானி, இப்படி ஒரு நீதிமன்றத்தில் சொல்வதைப் பார்த்து பலரும் அதிர்ச்சிக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.
நீதிபதி
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வாக்ஸ்மேன் (waksman) "அனில் அம்பானியிடம் நிறைய சொத்துக்களோ அல்லது வருமானமோ இருக்கிறது. அனில் அம்பானியின் உறவினர்கள், அனில் அம்பானிக்கு 100 மில்லியன் டாலரைக் கொடுத்து உதவ முடியும். அதை அனில் அம்பானி நீதிமன்றத்திடம் செலுத்த வேண்டும்" என காரசாரமாகச் சொல்லி இருக்கிறார்.
அபத்தம்
மேலும் பேசிய நீதிபதி வாக்ஸ்மேன் "அனில் அம்பானியின் அண்ணன், முகேஷ் அம்பானி வைத்திருக்கும் சொத்து பத்துகளுக்கு 100 மில்லியன் டாலரைத் திரட்ட முடியாது எனச் சொன்னால், அது முற்றிலும் அபத்தமானது. அம்பானி குடும்பம் மிகப் பெரிய அளவில் பணம் படைத்த குடும்பம். கடந்த காலங்களில் ஒருவருக்கு ஒருவர் உதவி இருக்கிறார்கள். எனவே, நான் அனில் அம்பானியின் வாதத்தை ஏற்க முடியாது" எனச் சொல்லி இருக்கிறார்.
உதவுவாரா..?
மீண்டும் அண்ணன் முகேஷ் அம்பானி, தம்பி அனில் அம்பானிக்கு கை கொடுப்பாரா..? ஏற்கனவே எரிக்ஸன் பிரச்சனையில் பணத்தைக் கொடுத்ததைச் சுட்டிக் காட்டி தான் இந்த முறையும் அண்ணனிடம் இருந்து பணத்தை வாங்கி வரச் சொல்கிறது நீதிமன்றம். எனவே இந்த முறையும் தம்பியின் பிரச்சனைக்கு பணம் கொடுத்து உதவுவாரா அல்லது அது அவர் பிரச்சனை என கை கழுவிவிடுவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். வெல்லப் போவது பாசமா.. பணமா..?