தமிழ்நாடு அரசியல் களம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பரபரப்பை சந்தித்து வருகிறது. தேர்தல் முடிவுகள் ஒரு புது விதமாக அமைத்து பரபரப்பை கிளப்பியது என்றால் அதன் பின்னர் அதிமுகவில் நடந்த சம்பவங்கள் அரசியல் களத்தை இன்னும் பரபரப்பாக்கின. இந்த சூழலில் புதிதாக ஒரு புயல் கிளம்பியுள்ளது.
தமிழ்நாட்டில் பாஜகவின் அடையாளமாக திகழ்ந்த அண்ணாமலை தற்போது அந்த கட்சியில் இருந்து விலகி புது கட்சி தொடங்குவதாக அறிவித்துள்ளார். கரூர் மாவட்டத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்து, கர்நாடகாவில் அதிரடி ஐபிஎஸ் அதிகாரியாக வலம் வந்தவர் அண்ணாமலை. திடீரென தன் பதவியை ராஜினாமா செய்து பாஜகவில் இணைந்தார். பின்னர் தமிழக அரசியல் களத்தில் முக்கியத் தலைவராக உருவெடுத்த அண்ணாமலையின் அரசியல் பயணம் பல சுவாரஸ்யங்களை கொண்டுள்ளது.

கரூர் மாவட்டம் தொட்டம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த குப்புசாமி - பரமேஸ்வரி தம்பதியரின் மகன் தான் அண்ணாமலை, கோவையில் பொறியியல் படிப்பை முடித்த அவர் புகழ்பெற்ற இந்திய மேலாண்மைப் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ பட்டம் பெற்றார். 2011-ஆம் ஆண்டில் சிவில் சர்வீசஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று, ஐபிஎஸ் அதிகாரியாகத் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். கர்நாடகாவின் உடுப்பி மாவட்டத்தில் காவல்துறை துணைக் கண்காணிப்பாளராகப் பணியைத் தொடங்கிய அவர், கல்வி நிறுவனங்களில் போதைப்பொருள் விற்பனையைத் தடுத்தல், இரவு நேர ரோந்து எனச் சட்டவிரோத செயல்களுக்கு எதிராக அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டார். இதனால் பொதுமக்கள் மத்தியில் "கர்நாடக சிங்கம்" என அழைக்கப்பட்டார்.
உடுப்பி மற்றும் சிக்மளூரு மாவட்ட எஸ்பி-யாகவும், பெங்களூர் தெற்கு மாவட்ட துணை ஆணையராகவும் பணியாற்றினார். ஒரு முறை கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்குச் சென்றபோது ஏற்பட்ட மனமாற்றம் மற்றும் சக அதிகாரியின் மறைவு தந்த சுயபரிசோதனை காரணமாக, மே 2019இல் தனது ஐபிஎஸ் பதவியை ராஜினாமா செய்தார். அதன் பின்னர், அரசியலைத் தூய்மைப்படுத்தும் நோக்கில் 'வீதி லீடர்' என்ற அமைப்பைத் தொடங்கிச் சமூகப் பணியாற்றினார். மேலும் இயற்கை விவசாயம், நாட்டு மாடுகள் வளர்ப்பு ஆகியவற்றிலும் ஈடுபாடு காட்டினார். ரஜினிகாந்த் கட்சி தொடங்குவதாக அறிவிக்கப்பட்ட போது அண்ணாமலையை அழைத்தார். ஆனால் அதனை ஏற்காமல் 2021-ஆம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக பாஜகவில் இணைந்து, தமிழக பாஜக தலைவராகப் பொறுப்பேற்றார்.
இவரது தலைமையிலேயே தமிழக பாஜக 2024 மக்களவைத் தேர்தலை எதிர்கொண்டது. சட்டசபை தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு பாஜக மாநிலத்தலைவர் பொறுப்பில் இருந்து அண்ணாமலை நீக்கப்பட்டார். அதிமுகவுடன் கூட்டணி வைப்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக, அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டது. இந்நிலையில் தேர்தல் களத்தில் அண்ணாமலை பட்டும்படாமலேயே இருந்தார். அவர் பாஜகவில் இருந்து விலக போகிறார் என தகவல்கள் வெளியாகின.
அதற்கேற்ப தேசிய தலைவர் நிதின் நபினை சந்தித்து 5 பக்க கடிதத்தையும் அளித்தார். தொடர்ந்து. மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவையும், தேசிய பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷையும் அவர் சந்தித்து பேசினார். இந்நிலையில் இன்றைய தினம் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்ட அண்ணாமலை, பாஜகவில் இருந்து விலகி புதிய அரசியல் கட்சி தொடங்குவதாக அறிவித்தார்.
புதிய அரசியல், புதிய பாதை, புதிய இயக்கம் இன்று முதல் தொடங்குகிறது. என்னுடைய கருத்துக்கு பாஜக தலைமை செவிசாய்க்கவில்லை. எதிர்காலத்தை நோக்கி பயணப்பட வேண்டிய நேரம் வந்துவிட்டது. எதிர்காலம் என்னை அழைத்துச் செல்லும் பாதையில் பயணிக்க வேண்டிய நேரம் இது. ஒரு புதிய அரசியலை, அடிப்படை கட்டமைப்பை மாற்றக் கூடிய அரசியலை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு பாஜகவில் இருந்து ராஜினாமா செய்தேன் என கூறியுள்ளார்.
என்னுடைய பாதை வேறு என பாஜக மேலிடத்திடம் தெரிவித்துள்ளேன். தமிழர் பண்பு என்பதால் பாஜக மேலிடம் கூற டெல்லி வந்துள்ளேன். புதிய அரசியல் இயக்கம் என முடிவெடுத்துள்ளேன். அரசியலில் புதிய பாதையை உருவாக்க 17 ஆண்டுகளாக போராடுகிறேன். தேசிய கட்சிகளின் மொழி தமிழ்நாடு மக்களுக்கு புரியவில்லை. தேசிய கட்சிகள் ஒரு போதும் தமிழ்நாட்டு மக்களுக்கு புரியும் மொழியில் பேசுவதில்லை, தமிழ்நாட்டு மக்களுக்கு புரியும் வகையில் பேச முடியும் என நான் கடுமையாக முயற்சி செய்து குறிப்பிட்ட அளவில் வெற்றி பெற்றேன்" என்று தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் அடுத்து நடக்கும் தேர்தலில் தன்னுடைய கட்சி போட்டியிடும் என அண்ணாமலை கூறியுள்ளார். 18 மாதங்களாக தனக்கும் பாஜகவுக்கும் இடையே கருத்து வேறுபாடு நீடிக்கிறது என அவர் தெரிவித்துள்ளார். தமிழக அரசியல் களத்தில் விஜய் புதுப்பாதையை வகுத்து, இளம் தலைமுறையினரின் ஆதரவுடன் ஆட்சி கட்டிலில் அமர்ந்து இருக்கிறார். இந்த சூழலில், தமிழக அரசியலில் புது சக்தியாகவும் உருவெடுத்து வந்த அண்ணாமலை தற்போது புதுக்கட்சியை தொடங்கி அரசியல் களத்தில் புதிய ஆட்டத்தை தொடங்க உள்ளார். அண்ணாமலை பொறுத்தவரை 2024 லோக்சபா தேர்தலில் போட்டியிட்ட போது தனக்கு 4.07 கோடி ரூபாய் சொத்து இருப்பதாக தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications

