தமிழக அரசியல் களம் இளைஞர் சக்தியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இந்த சட்டமன்ற தேர்தலிலேயே நாம் அதனை காண முடிந்தது. பெருவாரியான முதல் தலைமுறை வாக்காளர்கள், இளைஞர்களின் வாக்குகள் இந்த முறை திரளாக தவெகவுக்கு சென்றதே அந்த கட்சி முதல் தேர்தலிலேயே வென்று ஆட்சி அமைக்கும் அளவுக்கு உயர காரணம்.
இனி தமிழக அரசியல் களம் , அரசியல்வாதிகள் என அனைத்துமே இளைஞர்களை சுற்றியே சுழல போகிறது. அந்த வகையில் விஜய் ஏற்கனவே இளசுகளின் வாக்குகளையும் பெண்களின் வாக்குகளையும் அள்ளி விட்டார். அவருக்கு போட்டியாக திமுக ஜென் ஸீ கூட்டம், உதயநிதியை முன்னிலைப்படுத்துவது என நடவடிக்கை எடுத்து வருகிறது. அதிமுகவில் இளைஞர்களுக்கு வழி விட வேண்டும் என குரல்கள் எழ தொடங்கிவிட்டன.

தமிழ்நாட்டு அரசியலில் விஜய் வருகைக்கு முன்பாகவே இளைஞர்களிடம் நன்மதிப்பை பெற்றவராக உருவாகி வந்தவர் அண்ணாமலை. ஆனால் கடந்த ஓராண்டு காலமாக பாஜக அவரை ஓரம்கட்டியது. இந்நிலையில் தமிழக பாஜகவின் முன்னாள் தலைவராக இருந்த அண்ணாமலை, அந்தக் கட்சியிலிருந்து விலகி, இன்று இது நம்ம இயக்கம் (We the leader) என்ற அமைப்பை அறிவித்தார். இந்த இயக்கம் தனி கட்சியாக செயல்பட்டு தேர்தலில் போட்டியிடும் என கூறினார்.
அண்ணாமலை இது நம்ம இயக்கம் என்ற அறிவிப்பை வெளியிட்ட முதல்நாளிலேயே 5 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் அதில் இணைந்துவிட்டனர். தொடர்ந்து பலர் இணைந்து வருகின்றனர். அண்ணாமலை, தன்னுடைய இயக்கம் பெயர் 'இது நம்ம இயக்கம்' என்று பெயரை அறிவித்து லிங்க்கை வெளியிட்டபோது 14 ஆயிரம் பேர் மட்டுமே இணைந்திருந்தனர். தே, ஆயிரக்கணக்கானோர் தங்களை இணைத்துக் கொண்டேயிருக்கிறார்கள். 4.51 மணி அளவில் இது 5.5 லட்சத்தை கடந்தது.
முதலில் இயக்கமாக அனைவரையும் உள்ளே கொண்டுவந்து, பிறகு அரசியல் சொல்லிக்கொடுத்து கட்சியாக மாற்றுவேன். தமிழ்நாட்டின் அரசியல் மொழி, இலக்கணத்தை மாற்ற வேண்டும் என்பதே நோக்கம் நான் தொடங்கியுள்ள தனி இயக்கம் தமிழகத்தில் அடுத்து நடக்கும் பொதுத் தேர்தலில் போட்டியிடும் என அண்ணாமலை அறிவித்துள்ளார்.
அண்ணாமலை ஏற்கனவே ரஜினிகாந்த் தொடங்கப்பட இருந்த கட்சியில் சேர்வதற்காக ரஜினியாலேயே அழைப்பு விடுக்கப்பட்டவர். ஆனால் ரஜினியின் அழைப்பை மறுத்து பாஜகவில் சேர்ந்தார். அண்ணாமலையின் உரை, ஐபிஎஸ் பதவியில் இருந்து அரசியலுக்கு வந்தது என அவருக்கு என தனி இளைஞர் பட்டாளம் உண்டு.ஆனால் தமிழ்நாட்டில் அவர் பாஜகவில் இருந்தது முழுமையான இளைஞர்கள் ஆதரவை கிடைக்க விடாமல் தடுத்தது. மேலும் பாஜகவில் அவரால் தனித்து சுதந்திரமாக செயல்பட முடியவில்லை.
தமிழ்நாட்டில் அடுத்த பல ஆண்டுகளுக்கு இளைஞர்களின் நம்பிக்கையை பெறுபவரே தலைவராக முடியும் என்பது சட்டமன்ற தேர்தலில் நிரூபணம் ஆகிவிட்டது. இந்த சூழலில் தான் அண்ணாமலை தனிக்கட்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இனி வரும் தேர்தலில் தவெக , திமுக மட்டுமில்லாமல் இளைஞர்களின் வாக்குகளை பெற அண்ணாமலை கட்சியும் செம போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் தற்போது 1.18 கோடி இளைஞர்கள் வாக்களிக்க தகுதி பெற்றவர்களாக உள்ளனர். இவர்களின் நம்பிக்கையை அண்ணாமலை பெற்றுவிட்டால் விஜய்க்கும் தவெகவுக்கும் பெரிய செக் வைத்ததாக இருக்கும். அதே வேளையில் சாமானிய மக்களின் கவனம் பெற ரஜினிகாந்தின் வெளிப்படை ஆதரவை பெற அண்ணாமலை முயற்சி செய்ய வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. இவற்றை வைத்து பார்க்கும் போது விஜய், அண்ணாமலை, உதயநிதி என அரசியல் தலைமைகளும் போட்டியும் மாற போகிறது.


Click it and Unblock the Notifications

