அமெரிக்காவைச் சேர்ந்த செயற்கை நுண்ணறிவு (AI) நிறுவனமான ஆந்த்ரோபிக், தனது செயல்பாடுகளை இந்தியச் சந்தையில் வேகமாக விரிவாக்கி வரும் நிலையில், பெங்களூரைச் சேர்ந்த ஒரு உள்ளூர் மென்பொருள் நிறுவனத்துடன் கடுமையான சட்டப் போராட்டத்தில் சிக்கியுள்ளது. இரு நிறுவனங்களும் ஒரே 'ஆந்த்ரோபிக்' என்ற பெயரைக் கொண்டிருப்பதால் பிராண்ட் குழப்பம் ஏற்படுவதாக இந்திய நிறுவனம் வாதிடுகிறது.
டெக் க்ரஞ்ச் அறிக்கையின்படி, பெங்களூரைச் சேர்ந்த ஆந்த்ரோபிக் மென்பொருள், ஜனவரி மாதம் கர்நாடகா வர்த்தக நீதிமன்றத்தில் ஒரு புகாரைப் பதிவு செய்துள்ளது. அமெரிக்க ஏஐ நிறுவனம் இந்திய வட்டாரத்தில் நுழைவதற்கு முன்பே, 2017 ஆம் ஆண்டு முதல் 'ஆந்த்ரோபிக்' என்ற பெயரைத் தாங்கள் பயன்படுத்தி வருவதாக அது கூறுகிறது. இந்நிறுவனம் தனது பெயரின் முந்தைய பயன்பாட்டிற்கு முறையான அங்கீகாரம், வாடிக்கையாளர் குழப்பத்தைத் தடுப்பதற்கான பாதுகாப்பு மற்றும் ரூ1 கோடி இழப்பீடு கோரியுள்ளது.

இந்திய 'ஆந்த்ரோபிக் மென்பொருள்' நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் இயக்குநர் முகமது அய்யாஸ் முல்லா கூறுகையில், தங்கள் நோக்கம் மோதல் அல்ல, தெளிவு பெறுவதே என்கிறார். தங்கள் தற்போதைய வாடிக்கையாளர்களுக்கு "பெரும் குழப்பத்தை" உருவாக்குவதால் இத்தகைய சட்ட நடவடிக்கை அவசியம் என டெக் க்ரஞ்ச் பத்திரிகைக்கு முல்லா தெரிவித்தார். இரு நிறுவனங்களின் பேச்சுவார்த்தை மூலம் இப்பிரச்சனையைத் தீர்க்கத் தயாராக இருந்தாலும், தங்கள் சட்ட உரிமைகளைப் பாதுகாக்க இந்த வழக்கு அவசரத் தேவை என்றார்.
அமெரிக்காவைச் சேர்ந்த ஆந்த்ரோபிக் நிறுவனத்திற்கு இச்சம்பவம் ஒரு முக்கியமான காலகட்டத்தில் வந்துள்ளது. அண்மையில், மைக்ரோசாஃப்ட் இந்தியாவின் முன்னாள் நிர்வாக இயக்குநர் இரினா கோஸை, அதன் உள்ளூர் செயல்பாடுகளுக்கு தலைமை தாங்க நியமித்தது. உலகின் வேகமாக வளர்ந்து வரும் இணையச் சந்தைகளில் ஒன்றாக இந்தியா இருப்பதால், ஆந்த்ரோபிக் மற்றும் ஓப்பன்ஏஐ போன்ற ஏஐ டெவலப்பர்களுக்கு இது ஒரு முக்கிய களமாக மாறியுள்ளது என்பதை இந்த நடவடிக்கைகள் உறுதிப்படுத்துகின்றன.
இந்த சட்டரீதியான சர்ச்சை, புது டெல்லியில் நடக்கவிருக்கும் ஏஐ இம்பாக்ட் உச்சி மாநாட்டிற்கு முன்னதாகவே வெளிவந்துள்ளது. ஆந்த்ரோபிக்கின் இணை நிறுவனர் டேரியோ அமோடி, சாட் ஜிபிடியின் சாம் ஆல்ட்மேன், கூகுளின் சுந்தர் பிச்சை போன்ற உலகத் தலைவர்களுடன் இங்கு பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜனவரி 20 அன்று கர்நாடகா நீதிமன்றம் அமெரிக்க நிறுவனத்திற்கு சம்மன் மற்றும் அறிவிப்பை அனுப்பியது. இருப்பினும், இந்த கட்டத்தில் இடைக்கால தடை உத்தரவு தர நீதிமன்றம் மறுத்துவிட்டது. வழக்கின் அடுத்த விசாரணை பிப்ரவரி 16 அன்று நடைபெறும்.


Click it and Unblock the Notifications