இந்தியாவில் மருத்துவம் மற்றும் மருந்து செலவுகள் கடந்த 5 ஆண்டுகளில் மிகப்பெரிய அளவில் உயர்ந்துள்ளது. குறிப்பாகக் கொரோனா தொற்றுக்குப் பின்பு பெரும்பாலான மருத்து உபகரணங்களின் விலை புதிய உச்சத்தைத் தொட்டு உள்ளது.
இந்தச் சூழ்நிலையில் இந்தியாவில் மிகப்பெரிய மருத்துவமனை நிறுவனங்களாக விளங்கும் அப்போலோ மற்றும் ஃபோர்டிஸ் முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அப்போலோ மற்றும் ஃபோர்டிஸ்
அப்போலோ மற்றும் ஃபோர்டிஸ் நிறுவனங்கள் இந்தியா முழுவதும் இருக்கும் தனது மருத்துவமனைகளில் அளிக்கப்படும் சிகிச்சைக்கான கட்டணத்தை 5 முதல் 10 சதவீதம் வரையில் உயர்த்த உள்ளதாக அறிவித்துள்ளது. மேலும் இந்தப் புதிய கட்டண உயர்வு 2021-22 நிதியாண்டின் முடிவிற்குள் நடைமுறைப்படுத்தப்படும் என மருத்துவமனை நிர்வாகங்கள் அறிவித்துள்ளது.
செலவுகள் அதிகரிப்பு
மருத்துவச் சிகிச்சையில் பயன்படுத்தும் அனைத்து பொருட்களின் கட்டணமும் அதிகரித்துள்ள நிலையில் overhead cost-ஐ சமாளிக்கும் வகையில் இந்தக் கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டு உள்ளதாக அப்போலோ மற்றும் ஃபோர்டிஸ் நிறுவனத்தின் நிர்வாகங்கள் அறிவித்துள்ளது.
ஃபோர்டிஸ் ஹெல்த்கேர்
2019 முதல் கொரோனா தொற்றுப் பாதிப்பு அதிகமாக இருந்த வேளையில் ஊழியர்களின் சம்பளம், ஆப்ரேட்டிங் செலவுகள் அதிகமாகியது. ஆனாலும் கொரோனா அல்லாத அனைத்து நோயாளிகளுக்கு எவ்விதமான கட்டணமும் உயர்த்தாமல் தொடர்ந்து பழைய கட்டணத்தில் இதுநாள் வரையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தோம். இதனால் பெரிய வருவாய் இழப்பை எதிர்கொண்டு உள்ளோம் என ஃபோர்டிஸ் ஹெல்த்கேர் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
அப்போலோ
பொதுவாக மருத்துவச் சிகிச்சைக்கான பேகேஜ் கட்டணம் ஒவ்வொரு ஆண்டும் 5 சதவீதம் வரையில் உயர்த்தப்படும், ஆனால் இந்த ஆண்டுச் சற்றுக் கூடுதலாக உயர்த்தப்பட்டு உள்ளது. மருத்துவச் சிகிச்சைக்கான அனைத்து பொருட்களின் விலையும் பெரிய அளவில் உயர்ந்துள்ளதால் இந்த வருடம் கூடுதலாகக் கட்டணத்தை உயர்த்தப்பட்டு உள்ளது என அப்போலோ சிஎப்ஓ கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
பிற மருத்துவமனைகள்
இந்தியாவில் மிகப்பெரிய மருத்துவமனை நிறுவனங்களாக விளங்கும் அப்போலோ மற்றும் ஃபோர்டிஸ் அறிவித்துள்ள இந்தக் கட்டண உயர்வு மூலம் சிறிய மற்றும் நடுத்தர மருத்துவமனைகளும் தங்களின் கட்டணத்தை உயர்த்த அதிகளவிலான வாய்ப்புகள் உண்டு.
மருத்துவக் காப்பீடு
சிறந்த மருத்துவச் சிகிச்சை தனக்கும் தன் குடும்பத்திற்கும் அளிக்க வேண்டும் என்பதற்காக எப்போது இல்லாத வகையில் இந்திய மக்கள் தற்போது அதிகளவில் மருத்துவக் காப்பீடுகளைப் பெற்று வருகின்றனர். இது லைப் இன்சூரன்ஸ் போல இந்திய குடும்பங்களுக்குக் கூடுதல் பாதுகாப்பை அளிக்கிறது.
நடுத்தரக் குடும்பங்கள்
கொரோனா-வுக்குப் பின்பு மருத்துவக் காப்பீடுகள் அத்தியாவசியமாக மாறியுள்ள நிலையில், மருத்துவச் சிகிச்சைக்கான கட்டணம் 10 சதவீதம் வரையில் உயரப்போகும் நிலையில் நடுத்தரக் குடும்பங்களின் நிதிநிலை மற்றும் பட்ஜெட்-ல் பெரிய ஓட்டை விழுந்துள்ளது.