உலகின் மிகப் பெரிய, டெக்னாலஜி நிறுவனங்களில் ஒன்றான ஆப்பிள் நிறுவனத்தின் செப்டம்பர் 2019 காலாண்டு முடிவுகள் வெளியாகி இருக்கின்றன.
இந்த செப்டம்பர் 2019 காலாண்டில் ஆப்பிள் நிறுவனம் 64 பில்லியன் டாலர் வருவாயை ஈட்டி இருப்பதாகச் சொல்லி இருக்கிறார்கள். ஆனால் பங்குச் சந்தையோ ஆப்பிள் நிறுவனம் 63.01 பிள்ளியன் டாலர் வருவாய் ஈட்டினாலே பெரிய விஷயம் எனச் சொல்லிக் கொண்டிருந்த நேரத்தில் கூடுதலாக ஒரு பில்லியன் டாலர் வருவாய் ஈட்டி இருப்பது தான் ஆப்பிள் நிறுவனத்தின் காலாண்டு முடிவுகளைப் பற்றி நம்மைப் பேச வைக்கிறது.
இந்த 64 பில்லியன் டாலர் என்பது கடந்த செப்டம்பர் 2018 காலாண்டை விட 2 சதவிகிதம் அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் நல்ல வளர்ச்சி கண்டிருப்பதாகவும் சொல்லி இருக்கிறார்கள். இந்தியா உடன் கனடா, ஜெர்மனி, அமெரிக்கா, பிரேசில் மலேசியா போன்ற நாடுகளில் ஆப்பிள் நிறுவனம் இதுவரை காணாத செப்டம்பர் காலாண்டு முடிவுகளைக் கண்டிருப்பதாகச் சொல்கிறார், ஆப்பிள் நிறுவத்தின் முதன்மை நிதி அதிகாரியான லுகா மெஸ்ட்ரி (Luca Maestri). அதோடு இந்தியாவிலும், அமெரிக்காவில் மேக் கம்ப்யூட்டர் விற்பனையால், ஆப்பிள் நிறுவனம் இதுவரை காணாத வருவாயைக் கண்டு இருக்கிறார்களாம்.
உலகம் முழுக்க பொருளாதார மந்த நிலை, கையில் பணம் இல்லை என்று எல்லாம் சொல்லிக் கொண்டு இருக்கிறார்களே ஐஃபோன் விற்பனை என்ன ஆயிற்று என்று கேட்கிறீர்களா..? நீங்கள் நினைத்தது போல ஐஃபோன் விற்பனை எண்ணிக்கை (வால்யூம்) அடிப்படையில் சுமாராக 9% சரிந்து இருக்கிறது. ஆனால் ஐஃபோன் வழியாக வரும் வருவாய், சந்தை எதிர்பார்ப்பான 32.25 பில்லியன் டாலரை விட சுமார் 1 பில்லியன் கூடுதலாக 33.36 பில்லியன் டாலர் ஈட்டி இருக்கிறார்களாம்.
அதோடு, ஆப்பிள் நிறுவனத்தின் ஆப்பிள் மியூசிப், ஐ க்ளவுட், ஆப்பிள் டிவி + போன்ற சேவைகள் வழியாக ஆப்பிள் நிறுவனத்துக்கு வரும் வருமானம் 18 சதவிகிதம் அதிகரித்து இருக்கிறதாம். சமீபத்தில் தான் ஆப்பிள் நிறுவனத்தின் கேமிங் சேவையான ஆப்பிள் அர்கேடின் (Apple Arcade) ட்ரயல் காலம் முடிவடைந்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது. கூடிய விரைவில், இதில் இருந்தும் ஒரு நல்ல வருமானம் வரும் என எதிர்பார்க்கலாம்.