ஆப்பிள் நிறுவனம் முதல்முறையாக மடிக்கும் வகையிலான போன்களை சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. புதிய ஐபோன் டூ (iPhone Duo) ஸ்மார்ட்போன் இந்தியாவில் சுமார் 3 லட்சம் ரூபாய் என்ற தொடக்க விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த போன் விற்பனைக்கும் வர உள்ளது.
பொதுவாகவே ஆப்பிள் நிறுவனம் ஐபோன்களை அறிமுகம் செய்து பின்னர் அது விற்பனைக்கு வரும் நாட்களில் உலகின் பல இடங்களிலும் நீண்ட வரிசையில் நின்று வாடிக்கையாளர்கள் புது மாடல் போன்களை வாங்குவதை பார்க்கலாம். இந்தியாவிலும் கூட ஆப்பிள் நேரடி விற்பனை நிலையங்களை டெல்லி, மும்பை உள்ளிட்ட நகரங்களில் திறந்துள்ளது.

கண்டிப்பாக ஆப்பிள் iPhone Duo விற்பனைக்கு வரும் முதல் நாள் இந்தியாவில் உள்ள ஐபோன் நேரடி விற்பனை நிலையங்களிலும் முந்தைய நாள் இரவு முதலே நீண்ட வரிசையில் மக்கள் காத்திருப்பதை பார்க்க முடியும். ஆனால் இந்தியாவில் யாருக்காக இந்த விலை உயர்த்த போன்களை ஆப்பிள் விற்பனைக்கு கொண்டு வருகிறது என்ற கேள்வி எழுகிறது.
3 லட்சம் ரூபாய் என்பது பெரும்பாலான இந்தியர்களின் ஆண்டு வருமானம் கூட இல்லை என்பது தான் நிதர்சனமான உண்மை. இந்தியாவின் சுமார் 80 கோடி மக்கள் மாதந்தோறும் அரசாங்கத்திடம் இருந்து இலவச ரேஷன் அரிசி மற்றும் உணவு பொருட்களைப் பெற்று வருகின்றனர் என்கிறார் currently.club நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மிதேஷ் சேத்வாலா.
இந்தியாவில் ஒரு நபரின் சராசரி ஆண்டு வருமானம் தோராயமாக 2.5 லட்சம் ரூபாய் மட்டுமே என்கிறது ஒரு புள்ளிவிவரம். அப்படி பார்த்தால் இந்த ஒரு ஃபோனின் விலை ஒரு சராசரி இந்தியனின் முழு ஆண்டு வருமானத்தை விட அதிகம். அதே போல இந்தியாவில் ஒரு இன்ஜினியரிங் பட்டதாரி தனது முதல் வேலைக்கு செல்லும்போது வாங்கும் ஆண்டு சம்பளமே சுமார் 3.5 லட்சம் ரூபாய் தான். அதாவது, ஒரு வருடம் முழுவதும் கோடிங் செய்து உழைக்கும் சம்பளம் ஒரு ஃபோனை வாங்குவதற்கே சரியாக போய்விடும் என்கிறார்.
இந்தியாவின் ஒரு சராசரி விவசாயியின் மாத வருமானம் சுமார் 10,000 ரூபாய் தான். அப்படியென்றால், இந்த ஃபோனை வாங்க ஒரு விவசாயி இரண்டரை ஆண்டுகள் முழுமையாக விவசாயம் செய்ய வேண்டும். அதே போல மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் தினக்கூலி 300 ரூபாய். இந்த விலையுயர்ந்த ஃபோனை வாங்க ஒரு தொழிலாளி 1,000 நாட்கள் அதாவது கிட்டத்தட்ட 3 ஆண்டுகள் உழைக்க வேண்டும் என தனது லிங்குடின் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

உணவு மற்றும் இதர பொருட்களை டெலிவரி செய்யும் ஒருவரின் மாத வருமானம் தோராயமாக 20,000 ரூபாய். கடுமையான போக்குவரத்து நெரிசலிலும், வெயில் மற்றும் மழையிலும் 15 மாதங்கள் தொடர்ச்சியாக கடினமாக உழைத்தால் மட்டுமே இந்த தொகையை அவரால் சம்பாதிக்க முடியும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
அப்படி என்றால் இந்தியாவில் யாரை குறி வைத்து இப்படி விலை உயர்ந்த போன்களை ஆப்பிள் அறிமுகம் செய்கிறது என்ற கேள்வி எழுகிறது. ஐபோன் வைத்திருந்தாலே அந்தஸ்து என கருதும் நபர்கள் தான் ஆப்பிளின் இலக்கு. அதாவது ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் ஒரு மொபைல் போனை விற்கவில்லை; மாறாக, அது ஒரு உறுப்பினர் அட்டையை விற்கிறது என கூறியுள்ளார்.
இந்த ஃபோனை வாங்குபவர்களுக்கு அதன் கேமரா சிறப்பம்சங்களோ அல்லது தொழில்நுட்ப அம்சங்களோ பெரிதாக தேவையிருக்காது. இந்தியாவில் இருக்கும் டாப் 1% பணக்காரர்கள் மற்றும் பணக்காரர்களை போல காட்டி கொள்பவர்களுக்கு தான் இது என்கிறார். ஒரு மீட்டிங், வீட்டு விசேஷம் போன்றவற்றில் பாக்கெட்டில் இருந்து இந்த போனை சும்மா கையில் எடுத்தாலே போதும் பெரிய ஆளுபா இந்த போன் யூஸ் பண்றாரு என்ற பெயர் கிடைக்கும் என்பதற்காகவே பலர் வாங்குவார்கள் என்கிறார்.
அதாவது இந்தியாவில் 3 லட்சம் ரூபாய் என்பது வெறும் போனுக்காக கொடுக்கப்படும் விலை அல்ல, சமுதகத்தில் அந்தஸ்துக்கு கொடுக்கப்படும் விலை என்கிறார். இந்தியாவிற்கு இரண்டு முகங்கள் உள்ளன, ஒன்று ரேஷனில் அரசு வழங்கும் 5 கிலோ இலவச கோதுமைக்காக வரிசையில் காத்திருக்கும் இந்தியா , மற்றொன்று மறுபுறம், சமூக அந்தஸ்துக்காகவும் கெத்துக்காகவும் 3 லட்சத்தை செலவிட காத்திருக்கும் மற்றொரு இந்தியா உள்ளது என தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications


