உலகின் முன்னணி எலக்ட்ரானிக்ஸ் மற்றும் டெக் சேவை நிறுவனமான ஆப்பிள் தனது உற்பத்தியை இந்தியாவில் அதிகரிப்பது மட்டும் அல்லாமல் விற்பனையை அதிகரிக்கவும் திட்டமிட்டு உள்ளது.
ஒருபக்கம் சீனாவில் பல்வேறு பிரச்சனை காரணமாக ஆப்பிள் தனது ஐபோன், ஐபேட் உற்பத்தியை இந்தியாவுக்குத் திருப்பி வருகிறது.
மறுபக்கம் விற்பனையிலும் இந்தியா-வை முக்கிய டார்கெட் ஆக மாற்றியுள்ளது.
சீனா - ஆப்பிள்
வரி ஏய்ப்பு மற்றும் பல வழக்குகள் கீழ் சீன ஸ்மார்ட்போன் நிறுவனங்களின் கணக்குகளை இந்திய அமைப்புகள் முடக்கியுள்ளது. இதனால் அடுத்த வருடம் இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் பல வருடமாகச் சீனாவின் சியோமி வைத்திருந்த நிலையில் சம்சாங் கைப்பற்றும் எனக் கணக்கிடப்பட்டு உள்ளது.
இந்த வாய்ப்பை ஆப்பிள் நிறுவனமும் கைப்பற்ற வேண்டும் என்பதற்காக இந்திய சந்தையை முக்கிய டார்கெட் ஆக மாற்றியுள்ளது ஆப்பிள்.
இந்திய ரீடைல் சந்தை
இந்திய ரீடைல் சந்தையில் ஆப்பிள் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யவும், மக்களை நேரடியாக அணுகுவதை மேம்படுத்த டாடா குழுமத்துடன் இணைந்து ஆப்பிள் நிறுவனம் தனது எக்ஸ்க்ளூசிவ் ஸ்டோர்களைத் திறக்க முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
டாடா-வின் Infiniti Retail
அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு உலகம் முழுவதும் வர்த்தகத்தை வைத்திருக்கும் ஆப்பிள் நிறுவனம், டாடா குழுமத்தின் க்ரோமா ஸ்டோர்களை இயக்கும் Infiniti Retail நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் தனது ரீடைல் விற்பனை கடைகளைத் திறக்க உள்ளது.
100 ரீடைல் கடைகள்
இந்தக் கூட்டணி மூலம் இந்தியாவில் Infiniti Retail நிறுவனம் ஆப்பிள்-ன் பிரான்சைசி ஆக இருக்கப் போகிறது. இந்தக் கூட்டணியில் இந்தியாவில் இருக்கும் மால்கள், முக்கிய வர்த்தகப் பகுதிகளில் நாடு முழுவதும் சுமார் 100 ரீடைல் கடைகளைத் திறக்க உள்ளது.
1000 சதுரடி கடைகள்
பொதுவாக Apple Authorised Reseller கடைகள் அனைத்தும் 1000 சதுரடிக்குக் குறைவில்லாமல் இருக்கும். ஆனால் டாடா - ஆப்பிள் கூட்டணியில் திறக்கப்படும் 100 கடைகளும் 500 - 600 சதுரடியில் அமைய உள்ளது.
சிறிய கடைகள்
இந்தச் சிறிய கடைகள் மூலம் ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன், ஐபேட், ஐவாட்ச் ஆகியவற்றை முக்கிய டார்கெட் பொருட்களாகக் கொண்டு வர்த்தகம் செய்ய உள்ளது. பெரிய கடைகளில் மேக்புக் உட்பட அனைத்து தயாரிப்புகளும் விற்பனை செய்யப்பட உள்ளது.
முக்கியக் கண்டிஷன்
இந்தியாவில் தற்போது சுமார் 160 ஆப்பிள் Premium Reseller கடைகள் உள்ளது, இந்த நிலையில் டாடா கூட்டணியில் திறக்கப்படும் கடைகள் கட்டாயம் ஏற்கனவே இருக்கும் கடைகளுக்கு அருகில் இருக்கக் கூடாது என்பதில் ஆப்பிள் இக்கூட்டணி ஒப்பந்தத்தில் முக்கியக் கண்ஷனாக வைத்துள்ளது.
ஆப்பிள் - மும்பை
ஆப்பிள் நிறுவனம் மும்பையில் நேரடியாகத் தனது முதல் கடையை மும்பையில் மிகவும் பிரம்மாண்டமான முறையில் திறக்க உள்ள நிலையில் ஆப்பிள் - டாடா கூட்டணியில் சுமார் 100 கடைகளைத் திறக்கும் திட்டத்தை அறிவித்துள்ளது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
ஆப்பிள் உற்பத்தி
ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் ஏற்கனவே அதன் ஆஸ்தான உற்பத்தி கூட்டணி நிறுவனங்களான பாக்ஸ்கான், பெக்ட்ரான், விஸ்ட்ரான் ஆகியவை இந்தியாவில் உற்பத்தி தளத்தை அமைத்து ஐபோன் தயாரிக்கும் பணியில் உள்ளது.
ஐபேட்
தற்போது அதன் முக்கிய வர்த்தகப் பொருளாக இருக்கும் ஐபேட்-ஐயும் இந்தியாவில் தயாரிக்க முடிவு செய்து இந்திய நிறுவனங்களுடனும், இந்திய அரசுடனும் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.