கொரோனா 2வது அலை இந்தியாவை மிகவும் மோசமான தாக்கியுள்ள நிலையில் ஏப்ரல் மாதம் இந்தியாவில் மருந்து விற்பனை யாரும் எதிர்பார்க்காத வகையில் உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்று வேகமாக அதிகரித்து வரும் நிலையில் மக்கள் அதிகளவிலான மருந்து பொருட்களை வாங்கி வருகின்றனர்.
இதன் எதிரொலியாகக் கடந்த ஆண்டு இதே காலகட்டத்தை ஒப்பிடுகையில் இந்த வருடத்தின் ஏப்ரல் மாதத்தில் மருந்து விற்பனை 51.5 சதவீதம் வரையில் வளர்ச்சி அடைந்துள்ளது. மேலும் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் மக்கள் சுமார் 15,662 கோடி ரூபாய் மதிப்பிற்கு மருந்து பொருட்களை வாங்கியுள்ளனர்.
கொரோனா சிகிச்சைக்கு நேரடி/மறைமுகம், உடல் நலத்தைப் பாதுகாத்தல் போன்ற காரணத்திற்காக மக்கள் அதிகளவிலான மருந்து பொருட்களை வாங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும் Anti-Infectives பிரிவைச் சார்ந்த மருந்துகள் விற்பனை இந்த ஏப்ரல் மாதத்தில் கடந்த வருடத்தை ஒப்பிடுகையில் 134 சதவீதம் அதிகரித்துள்ளது. இதேபோல் ஊட்டசத்தி மருந்துகள் 76 சதவீதம் அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டு மே மாதம் முதல் லாக்டவுன் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில் மருந்து விற்பனை சராசரியாக 9 சதவீதம் குறைந்து வந்த வேளையில் மார்ச் மாத துவக்கம் முதல் மருந்து விற்பனை மீண்டும் அதிகரிக்கத் துவங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் கொரோனா தொற்றின் பாதிப்பு துவங்கிய நாள் முதல் இந்திய பார்மா நிறுவனங்கள் மருந்து உற்பத்தியை மேம்படுத்தியது மட்டும் அல்லாமல் நாடு முழுவதும் விநியோகம் செய்வதிலும் பெரிய அளவில் விரிவாக்கம் செய்துள்ளது.