தமிழ்நாட்டில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசின் வழங்கப்பட்டு வரும் அரசு பதவிகள் எல்லாமே விவாதப் பொருளாக மாறிவருகின்றன. குறிப்பாக தன்னுடைய திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு விஜய் முக்கிய பொறுப்புகளை வழங்குகிறார் என்ற விமர்சனங்கள் எழுந்த வண்ணம் உள்ளன.
அந்த வகையில் தமிழகத்தில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் வரும் கோயில்களுக்கு அறங்காவலர்களை நியமிக்க மயிலம் பொம்மபுரம் ஆதீனம் தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் திரைப்படத் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரம் இடம்பெற்றுள்ளார். இது குறித்து இந்து சமய அறநிலையத் துறை செயலர் ஜெ.குமரகுருபரன் வெளியிட்ட அரசாணையில், தமிழக அரசின் கட்டுப்பாட்டில் வரும் கோயில்களுக்கு தகுதியான பரம்பரை முறை வழி சாரா அறங்காவலர்களை தேர்வு செய்து அரசுக்கு பரிந்துரைப்பதற்காக புதிய குழு அமைக்கப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.

இதன் தலைவராக மயிலம் பொம்மபுரம் ஆதீனம் தவத்திரு சிவஞான பாலய சுவாமிகள், துணைத் தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி கே.இராமநாதன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், குழுவின் உறுப்பினர் செயலராக அறநிலையத் துறை ஆணையர் திகழ்வார். இந்த குழுவின் உறுப்பினர்களாக ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி ப.ரா.சம்பத், திரைப்பட தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரம், பின்னணி பாடகர் த.வேல்முருகன், ஆன்மிக பேச்சாளர் மா.சுமதி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இந்த குழு ஆண்டுக்கு 10 லட்சம் ரூபாய்க்கு மேல் வருவாய் வரும் கோயில்களுக்கு தகுதியான அறங்காவலர்களை தேர்வு செய்து அரசுக்கு உரிய பரிந்துரை பட்டியலை தயாரித்து வழங்கும் பணிகளை மேற்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் திரைப்படட் தயாஇரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி இடம்பெற்றிருப்பது விவாதப் பொருளாக மாறியுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி படத் தயாரிப்பு நிறுவனம் ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் (AGS Entertainment). இதன் தலைமை செயல் அதிகாரியாக இருப்பவர் அர்ச்சனா கல்பாத்தி. 2019ஆம் ஆண்டில் விஜய் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படத்தை தயாரித்து சினிமா உலகில் புகழ்பெற தொடங்கினார். சினிமா பின்னணி கொண்ட குடும்பத்தில் இருந்து வந்த அவர், தமிழ் சினிமாவில் பிரதான தயாரிப்பாளராக இருக்கிறார். சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக செயல்படும் ஒரு நபர்.
முதலமைச்சர் விஜய்யின் பிகில் மற்றும் கோட் ஆகிய இரண்டு படங்களை இவர் தயாரித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் லவ் டுடே, டிராகன் போன்ற சூப்பர் ஹிட் படங்களை தயாரித்துள்ளார். புது முகங்களுக்கு வாய்ப்பளிப்பதில் ஆர்வம் காட்டும் ஒரு நபர். விஜய்க்கு நெருக்கமான வட்டங்களில் இவரும் ஒருவர் என சொல்லப்படுகிறது. விஜய் முதலமைச்சரக பதவியேற்கும் நிகழ்ச்சிக்கும் இவர் வருகை தந்திருந்தார்.
அர்ச்சனா கணினி அறிவியல் மற்றும் வெல்த் மேனேஜ்மென்ட்டில் முதுகலை பட்டம் பெற்றவர். திரைப்பட தயாரிப்ப மட்டுமின்றி, ஏஜிஎஸ் குழுமத்திற்குச் சொந்தமான ஏஜிஎஸ் சினிமாஸ் திரையரங்கு நிறுவனத்தை நிர்வகிப்பதிலும் அர்ச்சனா முக்கிய பங்கு வகிக்கிறார். அர்ச்சனா கல்பாத்தியின் கணவர் மற்றும் மகன் பொதுவெளியில் அதிகம் வருவதில்லை. இவருக்கு சுமார் 70 கோடி ரூபாய் சொத்து இருப்பதாக சொல்லப்படுகிறது. அது மட்டுமில்லாமல் இவர் நிர்வகிக்கும் ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் பல கோடி மதிப்பு கொண்டது.


Click it and Unblock the Notifications

