டெல்லி: வாராக்கடனால் தத்தளித்து வரும் பொதுத்துறை வங்கிகளை மேம்படுத்த அரசு பல்வேறு துரித நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்த நிலையில் சிபிஐ நாடு முழுவதும் 187 இடங்களில், 42 வங்கிகளில் நடந்த மோசடி குறித்து செவ்வாய்கிழமை முதல் விசாரணை நடத்தி வருகிறது.
இந்த 42 வங்கிகளில் சுமார் 7,200 கோடி ரூபாய் மோசடி நடந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
ரெய்டு எங்கு நடத்தப்பட்டது?
குறிப்பாக ஆந்திரபிரதேசம், சண்டிகர், டெல்லி, குஜராத், ஹரியானா, கர்நாடகா, கேரளா, மத்திய பிரதேசம், மஹாராஷ்டிரா, பஞ்சாப், தமிழ்நாடு, தெலுங்கானா, உத்திர பிரதேசம், உத்தரகாண்ட், தாத்ரா & நாகர் ஹவேலி உள்ளிட்ட இடங்களில் இந்த சிபியை ரெய்டு செவ்வாய்கிழமை நடத்தப்பட்டது. இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவெனில் செவ்வாய்கிழமை காலையில் ஒரே நேரத்தில் இந்த 187 இடங்களில் ரெய்டு நடத்தப்பட்டதாக சிபிஐ அதிகாரிகள் வட்டாரத்தில் கூறப்படுகிறது.
எந்தெந்த வங்கிகளில் மோசடி
இந்த மோசடியானது ஆந்திர வங்கி, ஓரியண்டல் பேங்க் ஆப் காமர்ஸ், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, அலகாபாத் வங்கி, கனரா வங்கி, தேனா பேங்க், பஞ்சாப் & சிந்த் பேங்க், பஞ்சாப் நேஷனல் பேங்க், சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா, யூனியன் பேங்க் ஆப் இந்தியா, ஐ.டி.பி.ஐ வங்கி, பேங்க் ஆப் பரோடா, பேங்க் ஆப் மஹாராஷ்டிரா, பேங்க் ஆப் இந்தியா உள்ளிட்ட வங்கிகளில் நடந்திருப்பதாக விசாரணை நடந்ததாகவும் கூறப்படுகிறது. சம்பந்தப்பட்ட இதே போன்ற தேடல்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பும் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பெரிய அளவில் மோசடி
இவ்வாறு 42 வங்கி மோசடி வழக்குகளில் நடத்தப்பட்ட விசாரணையில் 4 பேர் 1,000 கோடி ரூபாய்க்கு மேல் சம்பந்தப்பட்டிருப்பதாகவும், இதே 11 மோசடி வழக்குகள் 100 கோடி ரூபாய் முதல் 1000 கோடி ரூபாய் வரை உள்ளதாகவும் சிபிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனியார் நிறுவனம் மீது வழக்கு
பதிவு செய்யப்பட்ட இந்த வழக்குகளில், போபாலை தளமாகக் கொண்ட ஒரு தனியார் நிறுவனத்தின் 5 இயக்குனர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது தான் மிகப் பெரிய வழக்காக கருதப்படுகிறது. இவர்கள் வேளாண் பொருட்கள் சம்பந்தமான மொத்த வர்த்தகத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் நிலையில், இதில் சில அரசு ஊழியர்களும், வங்கி அதிகாரிகளும் இந்த மோசடியில் சம்பந்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் இவர்கள் மோசடி செய்து எஸ்.பி.ஐயில் 6,000 கோடி ரூபாய் கடன் பெற்றிருப்பதும் தெரியவந்துள்ளது.
பொய்யான தகவல்கள் மற்றும் மோசடி ஆவணங்கள்
அதிலும் இந்த 6,000 கோடி ரூபாய் கடனுக்காக பொய்யான தகவல்கள் மற்றும் தவறான ஆவணங்கள் காட்டப்பட்டுள்ளதாகவும், மேலும் பொருட்கள் குறித்த பொய்யான அறிக்கையையும் மற்றும் பொய்யான நிதியறிக்கை காண்பித்தும் கடன் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நிலுவைத் தொகையை இந்த நிறுவனம் சரியான நேரத்தில் செலுத்த தவறியதாகவும், ஏன் செலுத்துவதையே நிறுத்தி விட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் எஸ்.பி.ஐ வங்கிக்கு 1,266.63 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
பி.எம்.சியின் எதிரொலியா?
சமீபத்தில் பி.எம்.சி வங்கியில் நடந்த மோசடி சம்பவம், இன்று வரை பிரச்சனை தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில், தற்போது மீண்டும் இப்படி ஒரு மோசடி மற்றும் பல வங்கி மோசடி வழக்குகள், மக்கள் மத்தியில் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. மேலும் இது போன்ற தொடர்ச்சியான சம்பவங்கள் வங்கிகளின் மீதுள்ள நம்பிக்கையை குறைத்துள்ளது என்றே கூறப்படும் நிலையில், பி.எம்.சி வங்கியின் மோசடி எதிரொலியாகவே இந்த விசாரணை நடத்திருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.