சாதாரணமாக காலையில் பல் விலக்க பயன்படுத்தும் டூத் பேஸ்ட் தொடங்கி, ஆடி பென்ஸ் கார்களை விற்பது வரை எல்லாமே சில்லறை வணிகம்.
இந்தியாவின் சில்லறை வர்த்தகம் சுமாராக 60 லட்சம் கோடி ரூபாய் மதிப்புடையது என்கிறார்கள்.
இந்த துறையை நம்பி கோடிக் கணக்கான வியாபாரிகளும், அந்த வியாபாரிகளைச் சார்ந்து கோடிக் கணக்கான ஊழியர்களும் வாழ்ந்து வருகிறார்கள்.
பிரச்சனை
இப்போது இந்த கொரோனா வைரஸ் பிரச்சனையால், இந்தியாவின் சில்லறை வர்த்தகமே ஆட்டம் கண்டுவிட்டது. இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, வர்த்தக சங்கங்களே இப்போது சில ஷாக்கிங் செய்திகளைச் சொல்லி நம்மை கலங்கடிக்கத் தொடங்கி இருக்கிறார்கள். அந்த விவரங்களைத் தான் இந்த கட்டுரையில் விரிவாகப் பார்க்க இருக்கிறோம்.
வியாபாரம் காலி
இப்போது மக்கள் கையில் போதுமான பணம் இல்லாததால், அத்தியாவசியப் பொருட்களைத் தவிர மற்ற பொருட்களை மக்கள் வாங்கவில்லை. அதோடு, கடந்த 45 நாட்களுக்கு மேல் கடைகளையும் திறக்க முடியாமல் தவித்துக் கொண்டு இருக்கிறார்கள். இதெல்லாம் போக இன்னொரு பிரச்சனை தற்போது வியாபாரிகள் மத்தியில் தலைவிரித்து ஆடிக் கொண்டு இருக்கிறது.
வாடகை
அந்த பிரச்சனையின் பெயர் கடை வாடகை. இந்தியாவில் சில முக்கிய வணிக வீதிகள் இருக்கின்றன. டெல்லியில் கான் மார்க்கெட்டைக் கேள்விப்பட்டு இருப்போம். அங்கு 1000 சதுர அடி கடைக்கு, மாதம் சுமாராக 5 லட்சம் வரை வாடகை வசூலிப்பார்களாம். அதே போல மும்பையில் ப்ரீச் கேண்டி பகுதியில் அதே 1,000 சதுர அடி கடைக்கு சுமாராக 3 லட்சம் ரூபாய் வசூலிப்பார்கள்.
வழி இல்லை
இப்போது வியாபாரமே நடக்காததால், வாடகைக்கு கடை நடத்திக் கொண்டு இருக்கும் கடைக்காரர்கள், வாடகையைக் கொடுக்க முடியாமல் தவித்துக் கொண்டு இருக்கிறார்கள். மேலே சொன்ன கொரோனா பிரச்சனையால் வியாபாரம் நடக்காதது, விற்பனை சரிவு போன்ற பிரச்சனைகளுடன் இந்த வாடகை பிரச்சனையும் ஒன்று சேர்ந்து வியாபாரிகளை ஒரு வழி ஆக்கிக் கொண்டு இருக்கிறது.
30 % கடைகள் காலி
மேலே சொன்ன பிரச்சனைகளால், வியாபாரங்களில் கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டு இருக்கிறது. இதனால் கொரோனா லாக் டவுன் காலத்துக்குப் பிறகு கூட 20 % இந்திய சில்லறை வியாபாரிகள் மற்றும் அவர்களைச் சார்ந்து வியாபாரம் செய்யும் 10 % சில்லறை வியாபாரிகள் என மொத்தம் 30 % சில்லறை வியாபாரிகள் கடையை இழுத்து மூடும் அபாயம் இருப்பதாக, அனைத்து இந்திய வியாபாரிகள் சம்மெளனத்தின் பொதுச் செயலர் ப்ரவீன் சொல்கிறார்.
3 - 5 வயது கடைகள்
குறிப்பாக, கடந்த 3 - 5 வருடத்துக்குள் கடை போட்ட வியாபாரிகள் தான், அதிகம் தங்கள் கடைகளை மூட வாய்ப்பு இருக்கிறது எனவும் சொல்லி இருக்கிறார் ப்ரவீன். இப்படி சில்லறை வியாபாரிகள் கடையை சாத்திவிட்டுப் போனால் என்ன ஆகும்..? இதனால் இந்திய பொருளாதாரத்துக்கு என்ன பிரச்சனை வரும்..? ஏதாவது எதிர் வினை இருக்கிறதா..?
வேலை காணாமல் போகும்
ஏற்கனவே சொன்னது போல, இந்த வியாபாரிகளை நம்பி வேலை பார்க்கும், மாத சம்பளம் வாங்கும் ஊழியர்களின் வேலை பறிபோகும். அதோடு இந்த 30 % வியாபாரிகளால் கடந்த சில ஆண்டுகளில் உருவான கோடிக் கணக்கான வேலை வாய்ப்புகள் மொத்தமாக பறி போய்விடும். இது தான். 30 % வியாபாரிகள் கடையை மூடுவதால், இந்தியப் பொருளாதாரம் சந்திக்க வேண்டிய் மிகப் பெரிய எதிர் வினை.
அரசுக்கு நெருக்கடி
அதோடு சில்லறை வியாபாரிகளிடம் வேலை இழந்தவர்களுக்கு வேறு எங்கு வேலை கிடைக்கும்..? சில்லறை வியாபாரியிடம் வேலை பார்த்த ஊழியர்களின் குடும்பம் எப்படி தங்கள் வாழ்கையை நடத்துவார்கள்..? கோடிக்கணக்கான ஊழியர்கள் சில்லறை வியாபாரிகள் கடையை மூடுவதால், திடீரென வேலை இழந்தால், அது அரசுக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தாதா..? இப்படி எதிர்வினைகள் எகிறிக் கொண்டே போகிறது.
கொரோனாவுக்குப் பின்
கொரோனா வைரஸ் எல்லாம் சரியான பின், மீண்டும் பொருளாதாரத்தை மீட்டு எடுக்க, இந்திய பொருளாதாரத்தில் பொருட்களை வாங்க டிமாண்ட் இருக்க வேண்டும். அப்போது தான் உற்பத்தி பெருகும். உற்பத்தியைப் பெருக்க, நிறைய பேரை வேலைக்கு எடுப்பார்கள், வேலைக்கு போகும் ஊழியர்கள் தங்களுக்கு கிடைக்கும் சம்பளத்தை செலவழிப்பார்கள் நுகர்வு அதிகரிக்கும்.
கேள்விக் குறி தான்
ஒருவேளை தொடர்ந்து வேலை இழப்புகள் நடந்து கொண்டிருந்தால், இந்தியப் பொருளாதாரத்தில் இப்போது இருப்பது போல, மக்கள் கையில் பணம் இல்லாமல் அத்தியாவசியப் பொருட்களை மட்டுமே வாங்கிக் கொண்டு இருக்கிறார்கள் என்றால், டிமாண்ட் அதிகரிக்காது. இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சியும், மீண்டும் பழைய நிலைக்கு வருவது எல்லாம் கேள்விக் குறி தான்.