டெல்லி: கொரோனா வைரஸ் தொற்று நோய் உலகம் முழுக்க தனது விஸ்வரூபத்தினை காட்டி வரும் நிலையில், உலகம் பொருளாதாரம் எந்த அளவுக்கு பேரழிவினை எதிர்கொள்ள போகிறதோ தெரியவில்லை.
ஏனெனில் அந்தளவுக்கு சில நாடுகளில் தாக்கம் அதிகரித்து வருகிறது. இது இந்தியாவினையும் விட்டு வைக்கவில்லை எனலாம்.
வளர்ந்த நாடுகளே கொரோனாவினால் ஆட்டம் கண்டு வரும் நிலையில், இந்தியா என்ன செய்யப்போகிறதோ தெரியவில்லை.
வறுமைக்கு செல்லக்கூடும்
இதற்கிடையில் சர்வதேச தொழிலாளர் அமைப்பு உலகளவில் உள்ள தொழிலாளர்களில் 81% பேர் கொரோனாவினால் பாதிக்கப்படலாம் என்றும் தெரிவித்துள்ளது. இது இரண்டாவது உலகப் போரிலிருந்து ஒப்பிடும்போது இது மோசமான நிலையை சந்தித்துள்ளது. இந்தியாவில் வேலையின்மையால் 400 மில்லியன் மக்கள் வறுமைக்கு செல்லக்கூடும் என்றும் சர்வதேச தொழிலாளர் அமைப்பு தெரிவித்துள்ளது.
தற்போதைக்கு மீண்டு வர வாய்ப்பில்லை
தற்போது இந்தியாவில் தனது ஆதிக்கத்தினை செலுத்த தொடங்கியுள்ள கொரோனாவினால், 2020ம் ஆண்டின் பிற்பாதியில் நிலைமை சீரடைய வாய்ப்பில்லை என்றும் கூறியுள்ளது. அதே நேரம் இது ஜூலை - டிசம்பர் காலத்தில் உலகளவில் 6.7% பணி நேரங்கள் உலகளவில் அழிக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. இது கடந்த 2008 - 09 ஆண்டுகளில் ஏற்பட்ட இழப்பினை விட அதிகம் என்றும் சர்வதேச தொழிலாளர் அமைப்பு தெரிவித்துள்ளது.
முழு நேர ஊழியர்கள் பாதிப்பு
சர்வதேச தொழிலாளர் அமைப்பு 195 மில்லியன் முழு நேர தொழிலாளர்கள் தங்களது வேலையினை இழக்கலாம் என்றும் கணித்துள்ளது. கொரோனா தற்போது உலகளாவிய அளவில் பரவியுள்ள நிலையில் தற்போது பல நாடுகள் ஊரடங்கினை அமல்படுத்தியுள்ளன. இந்த நடவடிக்கை தற்போது கிட்டத்தட்ட 2.7 பில்லியன் தொழிலாளர்களை பாதித்துள்ளது. இது உலக தொழிலாளர்களின் 81% குறிக்கிறது என்றும் ஐஎல்ஓ தெரிவித்துள்ளது.
இந்தியாவுக்கு பாதிப்பு அதிகம்
முறைசாரா தொழிலாளர்கள் அதிக விகிதத்தில் உள்ள இந்தியாவில், மில்லியன் கணக்கான ஊழியர்கள் வறுமைக் கோட்டிற்கு கீழ் செல்லக்கூடும். இந்தியா நைஜீரியா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளில் லாக்டவுன் செய்யப்பட்டுள்ள நிலையில், முறைசாரா பொருளாதாரத்தில் கணிசமான அளவு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
வறுமை நிலை
இந்தியாவில் முறைசாரா பொருளாதாரத்தில் கிட்டதட்ட 90% மக்கள் உள்ளனர். சுமார் 400 மில்லியன் தொழிலாளர்களின் நெருக்கடியின் போது வறுமை நிலைக்கு செல்லக்கூடும் என்றும் எச்சரித்துள்ளது. இது கடந்த மூன்று வாரங்களுக்குள் நகர்புற இந்தியா மற்றும் கிராமப்புற நிலப்பகுதியில் வேலையின்மை அதிகரித்துள்ளது என்பதையே காட்டுகிறது.
அதிகரிக்கும் வேலையின்மை விகிதம்
ஏப்ரல் 5ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் வேலையின்மை விகிதம் 23.4% என்று CMIE தெரிவித்திருந்தது. இதில் நகர்புற வேலையின்மை விகிதம் 30.9% ஆகவும், இதே கிராமப்புற வேலையின்மை விகிதம் 20% ஆகவும் கூறப்படுகிறது. இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் மிகவும் கடுமையான நெருக்கடியை தொழிலாளர்கள் எதிர்கொண்டு வருவதாகவும், வேலை இழப்புகள் உலகம் முழுவதும் அதிகரித்து வருவதாகவும் உலகளாவிய அமைப்பு தெரிவித்துள்ளது.