கொரோனா மனிதர்களின் உடல் நலத்தையும், இளைஞர்களின் பொருளாதார வாழ்கையையும் கொத்து பரோட்டா போட்டுக் கொண்டு இருக்கிறது.
அந்த வைரஸுக்கு மனிதர்களின் கஷ்ட நஷ்டங்கள் தெரியுமா? கடன் தவணைகளைச் செலுத்த வேண்டிய பிரச்சனைகள் புரியுமா?
இப்போதும் இந்த கொரோனாவால், படித்து முடித்த கல்லூரி இளைஞர்களில் 66 சதவிகிதம் பேருக்கு வேலை கிடைக்கவில்லை என ஒரு அதிர்ச்சிகரமான தகவலைச் சொல்லி இருக்கிறது நாக்ரி நிறுவனம்.
நாக்ரி சர்வே
நாக்ரி கம்பெனி, சுமாராக 1,300 கல்லூரி மாணவர்களிடம், வேலை வாய்ப்பு தொடர்பாக ஒரு சர்வே நடத்தி இருக்கிறது. அதில், சுமாராக 34 சதவிகிதம் பேருக்கு தான் வேலை வாய்ப்புகள் கிடைத்து இருப்பதாக சர்வே முடிவுகள் சொல்கிறது. மீதமுள்ள 66 சதவிகித கல்லூரி மாணவர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்கிறது நாக்ரி.
கொஞ்சம் அதிர்ச்சி தான்
சரி, வேலை கிடைத்த 33 சதவிகித இளைஞர்களாவது நிம்மதியாக வேலைக்குச் சென்றார்களா என்றால் இல்லை. இந்த 33 சதவிகிதம் பேரை 100 பேர் என கணக்கு வைத்துக் கொள்வோம். அவர்களில், 44 சதவிகிதம் பேர் வேலைக்குத் தேர்வானாலும், வேலைக்குச் சேர வேண்டிய தேதியை ஒத்தி வைத்து இருக்கிறார்களாம். அதிலும் 9 சதவிகிதம் பேருக்கு வழங்கிய வேலை வாய்ப்புகளை திரும்ப பெற்று இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
மற்ற வழிகள்
அதே போல, 17 சதவிகித இளைஞர்கள், தங்கள் கல்லூரியில் படித்த முன்னாள் மாணவர்கள் மூலம் வேலை பெற முயற்சித்துக் கொண்டு இருக்கிறார்களாம். இன்னும் சில கல்லூரி இளைஞர்களோ, Freelancing-ஐ ஒரு நல்ல வாய்ப்பாகவும், எதிர்காலம் இருப்பதைப் பார்ப்பதாகவும் நாக்ரி கம்பெனி சொல்லி இருக்கிறது.
82 % கல்லூரிகள்
இந்த கொரோனா வைரஸ் பிரச்சனையால், 2020-ம் ஆண்டு தங்கள் கல்லூரி படிப்பை முடித்தவர்களுக்கு வேலை கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டு இருக்கிறதாம். சுமாராக 82 சதவிகித கல்லூரிகளில் ப்ளேஸ்மெண்ட் விவகாரங்கள் பாதிக்கப்பட்டு இருப்பதாக நாக்ரி சொல்லி இருக்கிறது. ஏகப்பட்ட கம்பெனிகள் கல்லூரிகளுக்கு வந்து ஆட்களை எடுத்துக் கொள்வதே கணிசமாக குறைந்து இருக்கிறதாம்.