இந்தியா முழுக்க ஒரு பக்கம் குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதா பற்றி விவாதிப்பது தொடங்கி போராட்டம் வரை தீவிரமாக நடந்து கொண்டு இருக்கிறது.
ஆனால் மறு பக்கம், இந்தியப் பொருளாதாரத்தின் நிலை மேம்பட்டதாகத் தெரியவில்லை.
தொடர்ந்து சர்வதேச அமைப்புகளும், தரகு நிறுவனங்களும் இந்த 2019 - 20 நிதி ஆண்டுக்கான பொருளாதார ஜிடிபி வளர்ச்சி சுமாராக 5 சதவிகிதத்துக்குள் தான் இருக்கும் என ஆரூடம் சொல்லத் தொடங்கிவிட்டார்கள்.
தரவுகள்
அதை எல்லாம் உறுதி செய்யும் விதத்தில் இந்திய பொருளாதாரம் சார்ந்த தரவுகளும் வந்து கொண்டு இருக்கின்றன. மத்திய அரசு என்ன எல்லாமோ செய்து பார்த்தும் பொருளாதாரம், தன் போக்கில் சரிந்து கொண்டே இருக்கிறது. இந்த சரிவுக்கு எப்போது பிரேக் போடுவார்கள், எப்போது இந்தியப் பொருளாதாரம் பழைய படி, மேல் நோக்கி நல்ல வளர்ச்சி காணும் என்று தெரியவில்லை.
பணவீக்கம்
கடந்த நவம்பர் 2019-ம் மாதத்துக்கான Consumer Price Inflation என்று அழைக்கப்படும் நுகர்வோர் பணவீக்கம் வெளியானது. கடந்த 40 மாதங்களில் இல்லாத அளவுக்கு நவம்பர் 2019-ம் மாதத்தில் நுகர்வோர் பணவீக்கம் 5.54 சதவிகிதமாக அதிகரித்து இருக்கிறது. அதே போல நவம்பர் 2019-ம் மாதத்துக்கு உணவுப் பணவீக்கம் 10.01 சதவிகிதமாக அதிகரித்து இருக்கிறது.
தொழில் துறை உற்பத்தி
கடந்த அக்டோபர் 2019 மாதத்துக்கான Index of Industrial Production என்று அழைக்கப்படும் தொழில் துறை உற்பத்தி தரவுகளும் வெளியாயின. அக்டோபர் 2019 மாதத்துக்கான தொழில் துறை உற்பத்தி -3.8 சதவிகிதமாக சரிந்து இருக்கிறது. கடந்த நவம்பர் 2019-ம் மாதத்துக்கான மொத்த விலைக் குறியீடு (Wholesale Price Index) 0.58 சதவிகிதம் அதிகரித்து இருக்கிறது.
செப்டம்பர் காலாண்டு ஜிடிபி
இதற்கு எல்லாம் முன்பே வந்த ஜிடிபி தரவுகள், இன்று வரை இந்திய பொருளாதாரம் தொடர்பான மேக்ரோ செய்திகளில் பெரிய பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டு இருக்கிறது. செப்டம்பர் 2019 காலாண்டில், இந்தியப் பொருளாதாரத்தின் ஜிடிபி 4.5 சதவிகிதமாக வளர்ச்சி சரிந்து இருப்பதை மறக்க முடியாது.
மோசமான கடன்
உலகின் டாப் 10 பொருளாதாரங்களைக் கொண்ட நாடுகளில், இந்தியாவில் தான் அதிக அளவில் மோசமான கடன் இருக்கின்றன. இந்திய நிதி நிறுவனங்கள் 100 ரூபாய் கடன் கொடுத்து இருக்கிறது என்றால், அதில் 9.3 ரூபாய் மோசமான கடனாக இருக்கின்றன. இப்படி இந்தியப் பொருளாதாரத்தைத் தொட்டு பேச வேண்டும் என்றால், எங்கு தொட்டாலும் நெகட்டிவ் செய்தி தான்.
அர்விந்த் சுப்ரமணியன்
பாஜக ஆட்சியிலேயே, முதன்மைப் பொருளாதார ஆலோசகராக இருந்த அர்விந்த் சுப்ரமணியன் "இந்தியாவில் பொருளாதாரம் மோசமாக இருக்கும் போது, பங்குச் சந்தைகள் மட்டும் ஏற்றம் காண்பது புரியாத புதிராக இருக்கிறது" எனச் சொல்லி இருக்கிறார். இவர் கேட்கும் கேள்வி நியாயமாகத் தானே இருக்கிறது.
ஐஐஎம் அஹமதாபாத்
சமீபத்தில், ஐஐஎம் அஹமதாபாத் கல்லூரியில், தேசிய பங்குச் சந்தையின் 'NSE Centre for Behavioral Science in Finance, Economics and Marketing' மையத்தின் தொடக்க விழாவில் தான், அர்விந்த் சுப்ரமணியன், இந்தியப் பொருளாதாரம் மற்றும் இந்தியப் பங்குச் சந்தைகளைக் குறித்துக் கேள்வி எழுப்பினார்.
முதல் ப்ராஜெக்ட்
"இந்தியப் பொருளாதாரம் மேலும் மேலும் தரை தட்டிக் கொண்டிருக்கும் போது, இந்திய பங்குச் சந்தைகள் மேலும் மேலும் புதிய உச்சங்களைத் தொட்டுக் கொண்டு இருப்பது ஏன்..? என்பதே, NSE Centre for Behavioral Science in Finance, Economics and Marketing மையத்தின் முதல் ப்ராஜெக்ட்டாக இருக்கும் என நம்புகிறேன்" என ஒரு விதமாக உசுப்பி விட்டு இருக்கிறார்.
வருவேன்
மேலும் "நீங்கள் மட்டும் இந்த புதிருக்கு விடை கண்டு பிடித்து விட்டால், விடையை புரிந்து கொள்ள, நான் அமெரிக்காவில் இருந்து நிச்சயம் இங்கு நேரடியாக வருவேன். இது போல எனக்கு இன்னும் பல விஷயங்கள் புரியவில்லை" என பொது வெளியில் இந்தியப் பொருளாதாரத்தை நேரடியாக விமர்சித்து இருக்கிறார் அர்விந்த் சுப்ரமணியன்.
பங்குச் சந்தை
சென்செக்ஸ் 30 இண்டெக்ஸ், கடந்த நான்கு நாட்களாக தொடர்ந்து புதிய உச்சங்களைத் தொட்டே வர்த்தகம் நிறைவு அடைந்து கொண்டு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 41,681 புள்ளிகளுக்கு, புதிய வரலாற்று உச்சம் தொட்டு நிறைவு அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.