இந்தியா ஆட்டோமொபைல் துறையில் நடந்து கொண்டு இருக்கும் அவலத்தைப் பார்த்து வருத்தப்படாத ஆட்கள் மிகக் குறைவு தான். இதில் ஒரு தொழில் அதிபர் தற்கொலை வேறும் கண் முன் வந்து போகிறது. அந்த அளவுக்கு தொடர் விற்பனை வீழ்ச்சி.
அதிலும் குறிப்பாக வணிக வாகனங்களைத் தயாரிக்கும் அசோக் லேலண்டுக்குச் சொல்லவே வேண்டாம். கடந்த நவம்பர் 2019-ல் கூட சுமார் 26 சதவிகித (உள் நாட்டு விற்பனை + ஏற்றுமதி) விற்பனையில் வீழ்ச்சி கண்டது அசோக் லேலண்ட்.
இப்போது இந்த விற்பனை வீழ்ச்சி பிரச்னைகளை எல்லாம் கடந்து, ஊழியர்களுக்கும், முதலீட்டாளர்களுக்கும் சேர்த்து ஒரு பெரிய குண்டைத் தூக்கிப் போட்டு இருக்கிறது.
வேலை இல்லை
அது தான் வேலை இல்லா நாட்கள். அசோக் லேலண்ட் ஏற்கனவே கூடுதலாக உற்பத்தி செய்து வைத்திருக்கும் வாகனங்களை எல்லாம் விற்றுத் தீர்த்துக் கொள்வதற்கும், சந்தையில் வாகன தேவையைப் பொறுத்து தன் உற்பத்தியை சரி செய்து கொள்வதற்கும் வேலை இல்லா நாட்களை அறிவித்து இருக்கிறார்கள்.
எத்தனை நாள்
அசோக் லேலண்ட் நிறுவனத்தின் பல்வேறு உற்பத்தி ஆலைகளில், டிசம்பர் 2019-ல் இரண்டு நாள் முதல் பன்னிரண்டு நாள் வரை வேலை இல்லா நாட்களாக அறிவித்து இருக்கிறார்களாம். இந்த விவரங்களை அசோக் லேலண்ட் நிறுவனம், அரசு அமைப்புகளிடம் சமர்பிக்கும் சில ஃபைலிங்களில் அறிவித்து இருக்கிறது.
கடந்த காலம்
இந்திய ஆட்டோமொபைல் துறையின், கடந்த மோசமான மாதங்களில் மாருதி சுசூகி, ஹீரோ மோட்டோ கார்ப் லிமிடெட், டிவிஎஸ் மோட்டார்ஸ், சுந்தரம், க்ளேடன் என பல ஆட்டோமொபைல் நிறுவனங்களும், பொருளாதார மந்த நிலையை தாங்க முடியாமல் வேலை இல்லா நாட்களை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
அசோக் லேலண்ட் தகவல்
அசோக் லேலண்ட் தன் வலை தளத்தில் கொடுத்து இருக்கும் விவரங்கள் படி
--மீடியம் மற்றும் ஹெவி கமர்ஷியல் ட்ரக்குகள் விற்பனை 54 சதவிகிதம் சரிவைக் கண்டு இருக்கிறது.
--மீடியம் மற்றும் ஹெவி கமர்ஷியல் ட்ரக்குகள் விற்பனை 196 சதவிகிதம் அதிகரித்து இருக்கிறது.
--லைட் கமர்ஷியல் வாகனங்களின் விற்பனை 25 சதவிகிதம் சரிவைக் கண்டு இருக்கிறது.
எதிர் கொள்ள வேண்டும்
இப்படி சகட்டு மேனிக்கு உள் விற்பனையில் சரிவைக் கண்டால், உற்பத்தியை குறைக்கத் தானே செய்வார்கள். பொருத்திருந்து பார்ப்போம், எப்படியாவது இந்திய ஆட்டோமொபைல் துறை, இந்த பொருளாதார மந்த நிலையில் இருந்து மீண்டும் வந்தால் பரவாயில்லை. அதுவரை இன்னும் இப்படி எத்தனை வேலை இல்லா நாட்களை எதிர் கொள்ள வேண்டுமோ தெரியவில்லை.
பங்கு விலை
கடந்த நவம்பர் 28, 2019 அன்று 81.45 ரூபாய்க்கு வர்த்தகம் நிறைவடைந்த அசோக் லேலண்ட் பங்குகள், இன்று 77 ரூபாய் 40 பைசாவுக்கு வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது. தொடர்ந்து விற்பனை சரிவு போன்ற செய்திகளால் இந்த நிறுவனத்தின் பங்கு விலை கடந்த 3 மாதங்களில் பெரிய ஏற்ற இறக்கங்களைக் காணாமலேயே தேங்கிக் கிடக்கிறது.