கச்சா எண்ணெய் விலையானது தொடர்ந்து உச்சம் தொட்டு வரும் நிலையில், மறுபுறம் மின்சார வாகனங்கள் மீதான ஆர்வமானது அதிகரித்துள்ளது.
சர்வதேச அளவில் மின்சார வாகனங்களுக்கான சந்தை என்பது பெரியளவில் விரிவடைந்திருந்தாலும், இந்தியாவில் தற்போது தான் வளர்ச்சி காணத் தொடங்கியுள்ளது.
குறிப்பாக பல வாகன உற்பத்தி நிறுவனங்களும் தங்களின் சந்தை பங்கினை தக்க வைத்து கொள்ள, மின்சார வாகன உற்பத்தியிலும் கவனம் செலுத்த தொடங்கியுள்ளன. இதற்கு சிறப்பான எதிர்காலம் உள்ளது என்பதை உணர்ந்து கொள்ள ஆரம்பித்துள்ளன.
மின்சார வாகன உற்பத்தியில் கவனம்
அதோடு பெட்ரோல் டீசலுக்கான மாற்றமாகவும் மின்சார வாகனங்கள் பார்க்கப்படுகின்றன. இந்தியாவில் தற்போது வரையில் பெரியளவில் மின்சார வாகனங்களுக்கான கட்டமைப்புகள் இல்லாத நிலையில், அதில் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளன. இதற்கிடையில் தான் பல்வேறு வாகன நிறுவனங்களும் மின்சார வாகன உற்பத்தி குறித்து கவனம் செலுத்த தொடங்கின.
மின்சார வாகனம்
குறிப்பாக எரிபொருள் நிரப்பிய காரை நீங்கள் வேண்டுமானாலும் ஓட்டிச் செல்லலாம். ஆனால் மின்சார கார் அப்படி இல்லை. ஆக மின்சார வாகன உற்பத்திக்கு முன்பு அதற்காக கட்டமைப்புகளும் வேண்டும் என்பதால், நிறுவனங்கள் அதில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளன.
இந்த நிலையில் தான் பல முன்னணி வாகன நிறுவனங்களும், மின்சார வாகனத்தில் தற்போது கவனம் செலுத்த தொடங்கியுள்ளன.
மின்சார வாகன உற்பத்தி ஆலை
அந்த வகையில் தற்போது ஹிந்துஜா குழுமத்தினை சேர்ந்த அசோக் லேலண்ட் நிறுவனம், மின்சார வாகன உற்பத்திக்காக புதிய ஆலை ஒன்றை நிறுவ திட்டமிட்டுள்ளது.
சென்னையை தலைமையிடமாகக் கொண்ட இந்த நிறுவனம், இதற்காக 500 கோடி ரூபாய் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகின்றது. ஏற்கனவே நிறுவனம் இங்கிலாந்து நிறுவனத்துடன் இணைந்து, 1500 கோடி ரூபாய் முதலீடு செய்யவும் திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
யுக்தியினை மாற்ற திட்டம்
ஏற்கனவே இந்தியாவில் வணிக வாகன பிரிவில் முன்னணி வாகன விற்பனையாளராக இருக்கும் அசோக் லேலாண்ட் நிறுவனம், கொரோனாவுக்கு பின் பெரும் விற்பனை வீழ்ச்சியினை பதிவு செய்தது. எனினும் தற்போது கால நிலைக்கு ஏற்ப தனது வாகன உற்பத்தி யுக்தியினை மாற்ற திட்டமிட்டு வருகின்றது. சர்வதேச சந்தையில் தொடர்ந்து விரிவாக்கம் செய்து வரும் அசோக் லேலாண்ட், இந்தியாவில் விரிவாக்கம் செய்ய திட்டமிட்டிருப்பது, அதன் சந்தையை தக்க வைத்துக் கொள்ள எடுத்துள்ள நடவடிக்கையாகவும் பார்க்கப்படுகிறது.
LCV வாகனங்கள்
நடப்பு நிதியாண்டின் 4ம் காலாண்டில் மின்சார LCV வாகனங்களை உற்பத்தியில் கவனம் செலுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது அதன் உள்நாட்டு சந்தையில் உற்பத்திகாக 500 - 700 கோடி ரூபாய் முதலீட்டினை செய்யவுள்ளது. அதோடு அதன் புதிய தயாரிப்புகள் மற்றும் மேம்பாட்டிற்காக 200 மில்லியன் டாலர் முதலீடு செய்யலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.