இந்திய ஐடி சேவை துறை நிறுவனங்கள் இந்த ஏஐ யுகத்தில் தங்களுடைய வர்த்தகத்தையும், சேவை மற்றும் திறனையும் மேம்படுத்திக்கொள்ள போட்டி நிறுவனங்களையும், ஒரு தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கும் நிறுவனங்களையும் வாங்கி வருகிறது.
இந்திய ஐடி சேவை நிறுவனங்கள் பொதுவாக வெளிநாட்டு நிறுவனங்களை தான் அதிகளவில் ஆர்வம் கொண்டு வாங்கும், ஆனால் மிகவும் அரிதாகவே உள்நாட்டு நிறுவனத்தை வாங்கும். அப்படியொரு சம்பவம் தான் தற்போது நடந்துள்ளது. மிட் டையர் பிரிவில் மிகவும் பிரபலமாக இருக்கும் Happiest Minds Technologies நிறுவனத்தின் நிறுவனரான அசோக் சூட்டா-விடம் இருக்கும் 22.1 சதவீத பங்குகளை ஐடிசி குழுமத்தின் ஐடி சேவை பிரிவான ஐடிசி இன்போடெக் நிறுவனம் வாங்க முடிவு செய்துள்ளது.
இதன் மூலம் Happiest Minds Technologies நிறுவனம் ஐடிசி இன்போடெக் நிறுவனத்துடன் இணைக்கப்பட உள்ளது.

விப்ரோ நிறுவனத்தின் பணியாற்றிய அசோக் சூட்டா 1999ஆம் ஆண்டு Mindtree நிறுவனத்தை உருவாக்கினார். இதை L&T குழுமம் கைப்பற்றியது. இதை தொடர்ந்து தனது 68 வயதில் 2011ஆம் ஆண்டு Happiest Minds Technologies நிறுவனத்தை ஒரு முழுக்க முழுக்க டிஜிட்டல் சேவை அளிக்கும் நிறுவனமாக உருவாக்கினார். இதை தற்போது ஐடிசி இன்போடெக் நிறுவனத்திற்கு விற்கிறார். இதை தாண்டி 2022ல் Happiest Health என்ற நிறுவனத்தையும் உருவாக்கியுள்ளார் அசோக் சூட்டா.
தற்போது அசோக் சூட்டா பெயரிலும் மற்றும் Ashok Soota Medical Research LLP நிறுவனத்திடமும் இருக்கும் சுமார் 22.1 சதவீத பங்குகளை சுமார் 1329.72 கோடி ரூபாய்க்கு ஐடிசி இன்போடெக் வாங்கியுள்ளது.
இதற்கான பங்கு கொள்முதல் ஒப்பந்தம் கையெழுத்தானதாகவும், 2 கட்டத்தில் சுமார் 3.366 கோடி பங்குகளை வாங்க ஐடிசி இன்போடெக் முடிவு செய்துள்ளது. இந்த பங்கு விற்பனை முடிந்தால் Happiest Minds Technologies நிறுவனம் ஐடிசி இன்போடெக் நிறுவனத்துடன் இணைக்கப்படும். இந்த இணைப்பிற்கு இரு நிறுவனத்தின் நிர்வாகமும் ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த இணைப்பு திட்டத்தின் படி ஒவ்வொரு 81 Happiest Minds Technologies பங்குகளுக்கு 25 ஐடிசி இன்போடெக் பங்குகள் அளிக்கப்பட உள்ளது. இதன் மூலம் இணைக்கப்பட்ட நிறுவனத்தில் தொடர்ந்து அசோக் சூட்டா பங்குகளை வைத்திருப்பார்.


Click it and Unblock the Notifications