லோக் பால் அமைப்பை மறந்து இருக்க மாட்டீர்கள் என நம்புகிறேன். பல கட்ட போராட்டங்கள், வாதங்கள், விவாதங்கள், சட்ட ரீதியிலான நடவடிக்கைகளுக்குப் பிறகு இந்தியாவில், கடந்த மார்ச் 2019-ல் கொண்டு வரப்பட்டது.
இந்திய அரசின் பிரதமர் தொடங்கி சாதாரண குரூப் டி அரசு பதவியில் இருக்கும் உதவியாளர் வரை யாரை வேண்டுமானாலும், ஊழல் புகார்களுக்காக விசாரிக்கும் அதிகாரம், இந்த லோக் பால் அமைப்புக்கு உண்டு.
அத்தனை பலம் பொருந்திய அரசு அமைப்பு தான் இந்த லோக் பால்.
உறுப்பினர்கள்
இந்த லோக் பால் அமைப்பில் 1 தலைவர், 4 நீதித் துறை பிரதிநிதிகள், 4 நீதித் துறை சாராத பிரதிநிதிகள், என மொத்தம் 9 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். இவர்கள் நியமிக்கப்பட்டதில் இருந்தே, லோக் பால் அமைப்பு இயங்கத் தொடங்கிவிட்டது. ஆனால் எங்கிருந்து இயங்குகிறது என்பது தான் தற்போது அனைவராலும் பேசப்படுகிறது.
எப்போதில் இருந்து
கடந்த 22 மார்ச் 2019 முதல் இன்று வரை, இந்த லோக்பால் அமைப்பு ஒரு 5 ஸ்டார் ஹோட்டலில் தான் செயல்பட்டுக் கொண்டு இருக்கிறது என்றால் நம்புவீர்களா..? ஆச்சர்யமாகத் தான் இருக்கிறது, ஆனால் அது தான் உண்மை. லோக் பால் அமைப்பு, பிரபலமான, டெல்லியின் ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் ஒன்றான அசோகா ஹோட்டலில் தான் இயங்கிக் கொண்டு இருக்கிறது. இந்த ஹோட்டலும் அரசுக்கு சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது.
12 அறைகள்
Oudh Corridor, Ashoka Hotel, New Delhi - 110021 (India) தான் லோக் பால் அமைப்பின் விலாசம் என, லோல் பால் வலை தளமே சொல்கிறது. இந்த சொகுசு ஹோட்டலில் இரண்டாம் தளத்தில் இருந்து தான் லோக் பால் அமைப்பு இயங்கிக் கொண்டு இருக்கிறார்களாம்.
12 அறைகள்
ஊழல் புகார்களை விசாரிக்க வேண்டிய லோக் பால் அமைப்பு செயல்படுவதற்கு, அசோகா 5 ஸ்டார் ஹோட்டலின் இரண்டாம் தளத்தில் மட்டும் 12 அறைகளை மொத்தமாக ஒதுக்கி இருக்கிறார்களாம். இந்த 12 அறைகளுக்கு மாதா மாதம் சுமார் 50 லட்சம் ரூபாய் வாடகை கொடுத்துக் கொண்டு இருக்கிறார்களாம்.
இதுவரை 3.85 கோடி
கடந்த மார்ச் 22, 2019 தொடங்கி அக்டோபர் 31, 2019 வரையான காலத்துக்கு 3.85 கோடி ரூபாய் வாடகையாக மட்டும் செலுத்தி இருக்கிறார்களாம். இந்த தகவல்கள் எல்லாம் சுபம் கத்ரி என்பவர், லோக் பால் அமைப்பிடம், ஆர் டி ஐ வழியாக கேட்ட கேள்விகளுக்கு கிடைத்த பதில்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆர் டி ஐ
சுபம் கத்ரியின் ஆர்டிஐ-ல் கேட்டிருந்த கேள்விகளுக்கு தான் மேலே சொன்ன வாடகை விவரங்கள் எல்லாம் தெரிய வந்து இருக்கிறது. இந்த ஆர்டிஐயில், மேலும் சில கேள்விகளைக் கேட்டு இருக்கிறார். அந்த கேள்விகளுக்கு இன்னும் பலத்த அதிர்ச்சி கொடுக்கும் பதில்கள் நமக்கு கிடைத்து இருக்கின்றன.
அந்த கேள்விகள்
இதுவரை லோக் பால் அமைப்புக்கு எத்தனை புகார்கள் வந்து இருக்கின்றன. அதில் எத்தனை புகார்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு இருக்கிறது எனவும் கேள்வி கேட்டு இருக்கிறார். இந்த கேள்விகளுக்கு தான், நாம் எதிர்பார்க்காத, அதி அதிர்ச்சிகரமான பதில்களைக் கொடுத்து இருக்கிறது லோக் பால் அமைப்பு.
நோ விசாரணை
இதுவரை லோக் பால் அமைப்புக்கு சுமாராக 1,160 புகார்கள் வந்திருக்கின்றனவாம். அதில் 1,000-த்துக்கும் மேற்பட்ட புகார்களை லோக் பால் அமைப்பினர் பரிசீலித்து இருக்கிறார்கள். அதில் ஒன்று கூட விசாரணைக்குப் போகவில்லை என பதில் கொடுத்து இருக்கிறார்கள். லோக் பால் அமைப்புக்குத் தேவை என்றால் விசாரணைக்கு சிபிஐ-யை கூட உதவிக்கு அழைக்க அனுமதி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஹோட்டல் அறைகள்
மேலும் பேசிய நீதிபதி சந்தோஷ், டெலிகாம் தீர்பாயத்தின் தலைவராக அவர் இருந்த போது, அசோகா ஹோட்டலின் அருகில் இருக்கும் சாம்ராட் ஹோட்டலில் தான் தன் அலுவலகம் இயங்கியதாகவும் சொல்லி இருக்கிறார். அதோடு லோக் பால் இந்தியாவில் இயங்க ஒரு சரியான இடம் தேவை எனவும் சொல்லி இருக்கிறார்.