வாரத்தின் முதல் நாளான இன்று ஆசியச் சந்தைகள் மிகவும் எச்சரிக்கையுடன் தனது வர்த்தகத்தைத் துவங்கியுள்ளது என்றால் மிகையில்லை. இதற்கு முழுக் காரணம் அமெரிக்கச் சந்தையும், அமெரிக்க முதலீட்டாளர்கள் தான்.
இன்று ஆசிய சந்தையில் இந்தியச் சந்தையைத் தவிர அனைத்து முக்கியமான சந்தைகளுக்கு 100 புள்ளிகளுக்குக் குறைவாகவும், 1 சதவீதத்திற்கும் குறைவாகவுமே வர்த்தகத்தைத் துவங்கியுள்ளது. இதனால் முதலீட்டாளர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் செயல்படத் துவங்கியுள்ளனர் என்பது இதன் மூலம் வெளிப்படுகிறது.
அப்படி என்ன ஆச்சு..?!
அமெரிக்கச் சந்தை
அமெரிக்காவில் அதிகரித்து வரும் பணவீக்கத்தின் காரணமாகப் பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் வாயிலாக முதலீட்டாளர்கள் குழப்பத்தில் உள்ளனர், இதற்கு முக்கியக் காரணம் பணவீக்கம் அதிகமாகும் போது வர்த்தகங்கள் குறையும். இதனால் முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் முதலீடு செய்வதைக் குறைத்துள்ளனர்.
பிட்காயின் வீழ்ச்சி
இதேபோல் அமெரிக்க முதலீட்டாளர்கள் கடந்த சில மாதங்களாகச் சிலாகித்து வந்த பிட்காயின் மற்றும் இதர கிரிப்டோகரன்சிகளின் மதிப்பு என்பது பெரிய அளவில் குறைந்துள்ளது. கிரிப்டோகரன்சியின் வீழ்ச்சிக்கு இரு முக்கியக் காரணங்கள் உள்ளது.
டெஸ்லா முடிவு
டெஸ்லா நிறுவனத்தின் தலைவரான எலான் மஸ்க் பிட்காயின் உற்பத்தி செய்யச் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்ட மின்சாரத்தைப் பயன்படுத்தும் காரணத்தால் டெஸ்லா பிட்காயினைப் பேமெண்ட் ஆக ஏற்றுக்கொள்ளாது எனத் தனது டிவிட்டரில் தெரிவித்தார். இவரின் முடிவுக்குச் சாதகமாகப் பல தரவுகளை முன்வைத்தார்.
சீன அரசின் முடிவு
சீன அரசு சமீபத்தில் தனது டிஜிட்டல் நாணயத்தை மக்களின் பயன்பாட்டுக்கு அறிமுகம் செய்துள்ள நிலையில், கிரிப்டோ வர்த்தகத்திற்கும் கிரிப்டோ தயாரிப்புக்கும் முழுமையான தடை விதித்துள்ளது. இதன் வாயிலாகச் சீன முதலீட்டாளர்கள் கையில் இருக்கும் கிரிப்டோவை விற்கவும் முடியாமல், வர்த்தகமும் செய்ய முடியாமல் முடங்கியுள்ளது.
முதலீட்டுச் சந்தை
டெஸ்லா பிட்காயின்-ஐ பேமெண்டாக ஏற்க உள்ளதாக அறிவித்த போது இதன் மதிப்பில் பெரும் வளர்ச்சியை எதிர்கொண்டது, இந்நிலையில் எலான் மஸ்க்-ன் முடிவும், சீன முதலீட்டாளர்கள் அதிகளவில் கிரிப்டோ சந்தையில் முதலீடு செய்து வரும் வேளையில் சீன அரசின் தடையும், முதலீட்டுச் சந்தையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
எச்சரிக்கையுடன் செயல்படும் முதலீட்டாளர்கள்
இதன் வாயிலாகவே இன்று சர்வதேசச் சந்தையில் முதலீட்டாளர்களின் மிகவும் எச்சரிக்கையுடன் செயல்படத் துவங்கியுள்ளனர். ஆனால் இந்திய சந்தையில் சில தடுமாற்றம் இருந்தாலும் தொடர்ந்து 150 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.
முக்கிய ஆசிய சந்தைகள்
9.35 மணி அளவில் ஆஸ்திரேலிய சந்தை 35 புள்ளிகள் வளர்ச்சியுடனும், சீன சந்தை 38.78 புள்ளிகள் வளர்ச்சியுடனும், ஹாங்காங் சந்தை 79.71 புள்ளிகள் சரிவுடனும், ஜப்பான் நிக்கி 500 குறியீடு 2.44 புள்ளிகள் சரிவுடனும், தென்கொரியாவின் KOSPI குறியீடு 3.72 புள்ளிகள் சரிவுடனும், தைவான் நாட்டின் TAIEX குறியீடு 23 புள்ளிகள் வளர்ச்சியுடனும் வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.