கொரோனா தொற்று கட்டுப்படுத்துவதும், தடுப்பு மருந்து தயாரிப்பு பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், தற்போது மருந்து மற்றும் மருத்துவ நிறுவனங்கள் முதலீட்டாளர்களின் மிகப்பெரிய முதலீட்டு இலக்காக மாறியுள்ளது.
இந்தியா உட்பட உலகின் பல நாடுகளில் மருந்து மற்றும் மருத்துவ நிறுவனங்களின் முதலீடு குவிந்து வரும் காரணத்தால் இதன் பங்கு மதிப்பு தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
இதேவேளையில் பல முன்னணி பார்மா நிறுவனங்கள் புதிய வர்த்தகத்தில் நுழைய வேண்டும் எனத் திட்டமிட்டுக் கையில் இருக்கும் பங்குகள் அல்லது சொத்துக்களை விற்பனை செய்யத் துவங்கியுள்ளனர்.\
அஸ்ட்ராஜெனெகா - மார்டனா
இதன்படி பிரிட்டன் - ஸ்வீடன் பார்மா நிறுவனமான அஸ்ட்ராஜெனெகா நிறுவனம் மார்டனா நிறுவனத்தில் வைத்திருந்த பங்குகளை விற்பனை செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு மற்றும் தயாரிப்பில் முக்கிய இடத்தைப் பிடித்திருக்கும் இவ்விரு நிறுவனங்கள் மத்தியிலான பங்கு விற்பனை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.
1 பில்லியன் டாலர்
அமெரிக்கப் பார்மா நிறுவனமான மார்டனா-வில் அஸ்ட்ராஜெனெகா வைத்திருந்த சுமார் 7.7 சதவீத பங்குகளைச் சுமார் 1 பில்லியன் டாலருக்கு விற்பனை செய்துள்ளதாகத் தி டைம்ஸ் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இருநிறுவனங்களிடம் இருந்து வெளிவரவில்லை.
வர்த்தக ஒப்பந்தத்தில் பாதிப்பு இல்லை
இந்தப் பங்கு விற்பனைக்குப் பின்பும் அஸ்ட்ராஜெனெகா / ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் இணைந்து தயாரித்த கொரோனா தடுப்பு மருந்தை மார்டனா நிறுவனம் தொடர்ந்து வர்த்தக ஒப்பந்தம் மூலம் விற்பனை செய்யும். இதனால் இரு தரப்பு மத்தியில் இருக்கும் வர்த்தகத்தில் எவ்விதமான மாற்றமும் இருக்காது.
அமெரிக்காவில் ஒப்புதல்
சமீபத்தில் மார்டனா நிறுவனம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பு மருத்தை அமெரிக்க மக்களுக்குப் பயன்படுத்த அவசரக் காலத் திட்டத்தின் கீழ் அமெரிக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் மார்டனா இந்த வருடம் மட்டும் இப்புதிய கொரோனா தடுப்பு மருந்து விற்பனை மூலம் 18.4 பில்லியன் டாலர் அளவிலான வர்த்தகத்தைப் பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.