இந்தியாவில் டிஜிட்டல் வங்கி சேவைகள் மற்றும் டிஜிட்டல் நிதி பரிமாற்றங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துள்ள நிலையில் ஏடிஎம் பரிமாற்றங்கள் தேவையைப் பெரு நகரங்களில் பெரிய அளவில் குறைந்துள்ளது.
ஆனால் சிறு கிராமம் மற்றும் டவுன் பகுதிகளில் இன்னும் டிஜிட்டல் பேமெண்ட் சேவைகள் பெரிய அளவில் மக்கள் பயன்பாட்டுக்கு வராத காரணத்தால் ஏடிஎம் மற்றும் ஏடிஎம் டெபாசிட் மெஷின் பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்துகிறது.
இந்தச் சூழ்நிலையில் மக்களின் ஏடிஎம் பணப் பரிமாற்றமும் மூலம் வருமானத்தை அதிகரித்த ரிசர்வ் வங்கி தனது கட்டணத்தை ஜனவரி 2022 முதல் அதிகரிக்க உள்ளதாக அறிவித்துள்ளது.
ஹெச்டிஎப்சி வங்கி
ரிசர்வ் வங்கி அறிவிப்பின் படி ஹெச்டிஎப்சி வங்கி வெளியிட்டுள்ள நோட்டீஸ்-ல் 2022 ஜனவரி 1 முதல் ஏடிஎம் பணப் பரிமாற்றத்திற்கு 20 ரூபாய் + வரியாக இருந்த கட்டணம் 21 ரூபாய் + வரியாக உயர்த்தப்பட உள்ளது என அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் இனி ஒவ்வொரு ஏடிஎம் பணப் பரிமாற்றத்திற்கும் கட்டணத்தை 1 ரூபாய் அதிகரித்து 21 ரூபாய் + வரியாக உயர்த்தப்பட உள்ளது.
இதே அறிவிப்பை ஆக்சிஸ் வங்கியும் வெளியிட்டுள்ளது.
வங்கி இன்டர்சேஞ்ச் கட்டணம்
ரிசர்வ் வங்கி வணிக வங்கிகளின் இண்டர்சேஞ்ச் கட்டணம் அதிகரித்துள்ள நிலையிலும், ஏடிஎம் சேவை அளிக்கும் நிறுவனங்களின் அதிகரித்துள்ள செலவுகளை ஈடுகட்டவும் ஏடிஎம் பயன்பாட்டுக் கட்டணத்தை 1 ரூபாய் அதிகரிக்கப்பட்டு உள்ளது. இந்தக் கட்டணம் ஏற்கனவே பயன்பாட்டில் இருக்கும் ஏடிஎம் சலுகை முறைகளைத் தாண்டி தான் நடைமுறைப்படுத்த உள்ளது.
21 ரூபாய் கட்டணம்
அதாவது தற்போது நடைமுறையில் இருக்கும் இலவச நடைமுறைகளில் எவ்விதமான மாற்றமும் இல்லை, இலவச ஏடிஎம் பயன்பாட்டுக்குத் தாண்டி பயன்படுத்தும் ஏடிஎம் பணப் பரிமாற்றத்திற்கு மட்டுமே இந்த 21 ரூபாய் கட்டணம் விதிக்கப்பட உள்ளது.
5 முறை இலவச ஏடிஎம் சேவை
அனைத்து வங்கி வாடிக்கையாளர்களுக்கும் தங்களது சொந்த வங்கி ஏடிஎம்களில் மாதம் 5 முறை இலவச ஏடிஎம் சேவையும், பெரு நகரங்களில் இருக்கும் மற்ற வங்கி ஏடிஎம்களில் 3 இலவச பரிமாற்றங்களும், பெரு நகரங்கள் அல்லாத பிற வங்கி ஏடிஎம்களில் 5 முறையும் இலவசமாகப் பயன்படுத்திக்கொள்ள முடியும்.
ஜனவரி 1, 2022
இந்த இலவச அளவீடுகளைத் தாண்டினால் மட்டுமே 21+வரி என்ற கட்டணம் வசூலிக்கப்படுகிறது, இப்புதிய கட்டணம் வருகிற ஜனவரி 1, 2022 முதல் நடைமுறைக்கு வருகிறது. நடுத்தர மக்கள் தங்களது தினசரி பயன்பாட்டுக்காக ஏடிஎம் மூலம் பணம் வித்டிரா செய்பவர்களுக்கு இந்தக் கட்டண உயர்வு பெரும் சுமையைத் தரும்.