ஜன் தன் யோஜனா கணக்குகள், அரசின் நேரடி பண விநியோகம் ஆகியவற்றின் காரணமாக இந்தியக் கிராமங்களில் மக்கள் ஏடிஎம்-ஐ அதிகளவில் பயன்படுத்து வருகிறார்கள். இந்தியக் கிராமங்களில் அதிகளவில் இருக்கும் வையிட் லேபிள் ஏடிஎம் பரிவர்த்தனை அளவீடு மூலம் இந்தத் தகவல் தற்போது கிடைத்துள்ளது.
2014ஆம் ஆண்டு நாட்டின் மொத்த ஏடிஎம் பரிவர்த்தனைகளில் 2 சதவீதம் மட்டுமே இருந்த வையிட் லேபிள் ஏடிஎம் பரிவர்த்தனைகள் தற்போது 12 சதவீதமாக உயர்ந்துள்ளது.
டெபிட் கார்டு
இந்தியாவில் கடந்த 7 வருடத்தில் இந்திய வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் விநியோகம் செய்துள்ள டெபிட் கார்டுகளின் எண்ணிக்கை மட்டும் 86 கோடி. இது கடந்த 7 வருடத்தில் 2 மடங்கு அதிகரித்துள்ளது.
இதில் கிட்டதட்ட 35 சதவீதம் அதாவது 30 கோடி டெபிட் கார்டுகள் ஜன் தன் யோஜனா கணக்குகள் திறக்கப்பட்ட போது மக்களுக்கு அளிக்கப்பட்ட ருபே (Rupay) கார்டுகள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏடிஎம் பரிமாற்றம்
மேலும் இந்தியாவில் டிஜிட்டல் பேமெண்ட்கள் அதிகரித்து வரும் காரணத்தால் 2018ஆண்டில் இருந்து நாட்டின் மொத்த ஏடிஎம் பரிமாற்றங்களின் எண்ணிக்கையில் பெரிய அளவிலான சரிவு ஏற்பட்டுள்ளது. 2018ஆம் ஆண்டு இந்தியாவில் 43.7 கோடி ஏடிஎம் பரிமாற்றங்கள் செய்யப்பட்ட நிலையில் 2019ல் 43.4 கோடியாகக் குறைந்தது. தற்போது 2020ஆம் ஆண்டில் இதன் எண்ணிக்கை 38 கோடியாகக் குறைந்துள்ளது.
வையிட் லேபிள் ஏடிஎம்
இதேவேளையில் தான் இந்தியக் கிராமங்களில் மட்டுமே அதிகளவில் பயன்பாட்டில் இருக்கும் வையிட் லேபிள் ஏடிஎம் சந்தை அளவு 2018 முதல் 8.2 சதவீதம், 9.5 சதவீதம், 12.2 சதவீதம் என 2020 வரையில் அதிகளவிலான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
கொரோனா பாதிப்பு
இதேபோல் கொரோனா பாதிப்பு நிறைந்த 2020ஆம் ஆண்டில் மக்கள் ஏடிஎம் பயன்படுத்துவதை அதிகளவில் குறைத்தி ருந்தாலும், கிராமங்களில் எவ்விதமான சரிவும் இல்லாமல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது என வையிட் லேபிள் ஏடிஎம் நிறுவனமான BTI பேமெண்ட்ஸ் நிறுவனத்தின் சிஇஓ கே.ஸ்ரீநிவாஸ் தெரிவித்துள்ளார்.
2.5 லட்ச ஏடிஎம் இயந்திரங்கள்
மேலும் செப்டம்பர் மாத தரவுகள் படி இந்தியாவில் 2.5 லட்ச ஏடிஎம் இயந்திரங்கள் உடன் ஏடிஎம் வர்த்தகத் துறை 3 சதவீத வளர்ச்சி அடைந்துள்ளது. இதேநேரத்தில் வையிட் லேபிள் ஏடிஎம் எண்ணிக்கை 24,195 ஆக உயர்ந்து 14 சதவீத வளர்ச்சி பதிவு செய்துள்ளது.