இந்தியாவில் டிஜிட்டல் பேமெண்ட் மற்றும் டிஜிட்டல் பணப் பரிமாற்றங்கள் ராக்கெட் வேகத்தில் வளர்ந்து வரும் இந்த நிலையில் மக்கள் எப்போதும் இல்லாமல் அதிகளவிலான பணத்தை ஏடிஎம் இயந்திரத்தில் எடுத்து வருகின்றனர். இதனால் பேமெண்ட் நிறுவனங்களும் வங்கிகளும் குழப்பத்தில் உள்ளது.
கொரோனா வந்த பின்பும் மக்கள் அதிகளவில் டிஜிட்டல் பணப்பரிமாற்றத்தைச் செய்யத் துவங்கியுள்ளனர் என ஆய்வு வெளிவரும் இதே வேளையில் ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து அதிகளவிலான பணத்தை எடுத்துள்ளனர்.
ஆகஸ்ட் மாதம் இந்திய மக்கள் ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து அதிகளவில் எடுத்த பணத்தின் மூலம் நாட்டின் பணப் புழக்கத்தின் அளவு சுமார் 26 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
ஏடிஎம் பணம்
இந்திய மக்கள் ஆகஸ்ட் மாதத்தில் தங்களது டெபிட் கார்டு மூலம் ஏடிஎம் இயந்திரத்தில் எடுக்கும் பணத்தின் அளவு எப்போதும் இல்லாமல் அதிகரித்துள்ளது. சராசரியாக ஒரு பரிமாற்றத்திற்கு எடுக்கப்பட்ட தொகையின் அளவு 4,959 ரூபாய் வரையில் அதிகரித்துள்ளது.
இதன் மூலம் ஆகஸ்ட் மாதத்தில் நாட்டின் பணப் புழக்கத்தின் அளவு சுமார் 26 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இந்த 26 லட்சம் கோடி ரூபாய் என்பது நாட்டின் 12 சதவீத ஜிடிபி.
ஏடிஎம் மற்றும் டிஜிட்டல் பணப் பரிமாற்றம்
2019 ஆண்டு நவம்பர் மாதம் ஏடிஎம் மூலம் செய்யப்பட்ட பணப் பரிமாற்றங்களின் சராசரி மதிப்பு 4,507 ரூபாயாக இருந்த நிலையில் ஆகஸ்ட் மாதம் இது 4,959 ரூபாயாக உயர்ந்து 10 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
இதே காலகட்டத்தில் யுபிஐ பணப் பரிமாற்றத்தின் அளவு 1,549 ரூபாயில் இருந்து 1,850 ரூபாயாக உயர்ந்து 20 சதவீதமாக உயர்ந்துள்ளது.
லாக்டவுன்
கொரோனா தொற்றின் காரணமாக அறிவிக்கப்பட்ட லாக்டவுன் காலத்தில் ஏடிஎம் பணப் பரிமாற்றங்கள் அதிகளவில் குறைந்தது. ஆனால் அதன் பின்பு ஏடிஎம் பரிமாற்றங்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரிக்கத் துவங்கியுள்ள என ஏடிஎம் சேவை நிறுவனங்கள் தெரிவித்துள்ளது.
பணம் தான் கெத்து
இந்தியாவில் டிஜிட்டல் பேமெண்ட் மற்றும் யூபிஐ பரிமாற்றங்களின் எண்ணிக்கை புதிய உச்சங்களை அடைந்து வரும் இந்த நிலையிலும் மக்கள் அதிகளவில் பணத்தை ஏடிஎம் இயந்திரத்தில் எடுத்து வருவது மக்கள் மத்தியில் பணத்தின் மீதான ஆதிக்கத்தைக் காட்டுகிறது.