2026ஆம் ஆண்டு இப்போது தான் தொடங்கியது போல இருக்கிறது. ஆனால் 7 மாதங்கள் முடிய போகின்றன. ஜூலை மாதம் முடிந்து ஆகஸ்ட் மாதமே தொடங்க போகிறது. இந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து பல மாற்றங்கள் நடைமுறைக்கு வருகின்றன. இவை நம் அன்றாட செலவுகளிலேயே தாக்கத்தை ஏற்படுத்த போகின்றன.
எல்பிஜி சிலிண்டர் விலை: ஒவ்வொரு மாதத்தின் முதல் தேதியிலும் எண்ணெய் நிறுவனங்கள் எல்பிஜி சிலிண்டர் விலையை மாற்றம் செய்யும். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மற்றும் அந்நிய செலாவணி மாற்றங்களின் அடிப்படையில் விலை ஏறலாம் அல்லது இறங்கலாம். ஈரான் போர் காரணமாக வணிக பயன்பாடு மற்றும் வீட்டு உபயோக சிலிண்டர் விலைகள் கடந்த சில மாதங்களில் உயர்த்தப்பட்டன. தற்போது பதற்றம் தணிந்திருப்பதால் சிலிண்டர் விலை குறையுமா என்ற எதிர்ப்பார்ப்பு நிலவுகிறது. நாளை காலை இது தெரிந்து விடும்.

ரயில்வே தட்கல் டிக்கெட்: தட்கல் டிக்கெட் முன்பதிவில் முக்கியமான ஒரு மாற்றம் நடைமுறைக்கு வர உள்ளது. ரயில் நிலையங்களில் உள்ள முன்பதிவு கவுன்டர்களில் தட்கல் டிக்கெட் எடுக்கும் பயணிகளுக்கு ஆகஸ்ட் 1 முதல் டோக்கன் அடிப்படையில் தான் டிக்கெட் பதிவு செய்ய முடியும். இதுவரை தட்கல் டிக்கெட் எடுக்க நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியிருந்தது. இனி, காலையிலேயே டோக்கன் விநியோகம் செய்யப்படும். எனவே பயணிகள் காலை முதலே காத்திருக்க வேண்டிய தேவை இல்லை.
பிஎஃப் : நம்முடைய பிஎஃப் கணக்கில் இருக்கும் பணத்தை யுபிஐ மற்றும் ஏடிஎம் மூலம் எடுக்கும் வசதி ஈபிஎஃப்ஓ 3.0 திட்டத்தின் மூலம் கொண்டு வரப்பட உள்ளது. ஆகஸ்ட் மாதத்திலேயே இந்த வசதி நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அது வந்துவிட்டால் பிஎஃப் பணத்தை எடுப்பது மிகவும் எளிதான ஒன்றாக மாறிவிடும்.
விரைவு தபால் கட்டணம்: விரைவு தபால்களுக்கான கட்டணங்கள் மாற்றப்பட்டுள்ளன. இவை ஆகஸ்ட் 1 முதல் நடைமுறைக்கு வருகின்றன. பார்சல் மற்றும் ஆவணங்கள் எப்படி வரையறை செய்யப்பட வேண்டும் எவ்வளவு கட்டணம் விதிக்கப்பட வேண்டும் என புதிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. எனவே ஸ்பீடு போஸ்ட் அனுப்புவோர் கவனமாக இருப்பது நல்லது.
வருமான வரி தாக்கல் : வருமான வரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடு ஜூலை 31ஆம் தேதியுடன் முடிகிறது. செய்ய தவறியவர்கள் ஆகஸ்ட் 1 முதல், காலதாமதமாக வருமான வரி தாக்கல் (Belated ITR) செய்யலாம். ஆனால் உடன் அபராதம் செலுத்த வேண்டி இருக்கும். தொழில்கள் மூலம் வருமானம் ஈட்டுபவர்கள் ஆகஸ்ட் 31க்குள் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும்.
கேஒய்சி : நிதி நிறுவனங்கள் ஆகஸ்ட் மாதம் முதல் மேம்படுத்தப்பட்ட மத்திய கேஒய்சி (CKYC 2.0) முறையை விரிவுபடுத்தவுள்ளன. இதன் மூலம் வங்கி, காப்பீடு மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களில் மீண்டும் மீண்டும் கேஒய்சி ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டிய அவசியம் இருக்காது. ஒருமுறை சரிபார்க்கப்பட்ட தகவல்களை அனைத்து நிறுவனங்களும் பயன்படுத்திக்கொள்ள முடியும்.


Click it and Unblock the Notifications

