இந்தியாவில் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வரும் காரணத்தால் வர்த்தகமும் வேலைவாய்ப்பு சந்தையும் மீண்டும் பாதிக்கப்பட்டு வருகிறது.
ஜூலை மாதம் இந்தியாவின் வேலைவாய்ப்பு இல்லாதோர் அளவு 7 சதவீதமாக இருந்த நிலையில் ஆகஸ்ட் மாதம் அதிகரித்து வந்த கொரோனா தொற்றுக் காரணமாக 8.3 சதவீதமாக அதிகரித்துள்ளது.
இதன் மூலம் ஆகஸ்ட் மாதம் மட்டும் இந்தியாவில் சுமார் 19 லட்சம் பேர் வேலைவாய்ப்புகளை இழந்துள்ளனர் என CMIE அமைப்பு தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்று
இந்தியாவில் கொரோனா தொற்று எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து வந்த நிலையில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் குறைக்கப்பட்டு அதிகளவிலான தளர்வுகள் அளிக்கப்பட்டது. ஆனால் இதேவேளையில் மக்களுக்குப் போதுமான வேக்சின் பாதுகாப்பு அளிக்கப்படாத காரணத்தால் தொற்று எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
பல தொற்றுகள்
இதுமட்டும் அல்லாமல் இந்தியாவில் தற்போது பரவி வரும் கொரோனா தொற்றில் எண்ணிக்கையில் அதிகமானோர் உருமாறிய கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதோடு நிபா வைரஸ், இன்று மாலை வெளியாகியுள்ளது உருமாறிய டெங்கு வைரஸ் எனப் பல பிரச்சனைகள் சந்தித்து வரும் வேளையில் வர்த்தகமும், பொருளாதாரமும் கடுமையாகப் பாதிக்கப்படுகிறது.
வேலைவாய்ப்பின்மை விகிதம்
இந்தச் சூழ்நிலையில் தான் நாட்டின் வேவைவாய்ப்பு சந்தை கடுமையாகப் பாதிக்கப்பட்டது உள்ளது. ஆகஸ்ட் மாதம் நாட்டின் வேலைவாய்ப்பின்மை 8.3 சதவீதம் அதிகரித்த நிலையில், வேவைவாய்ப்பு விகிதம் 37.5 சதவீதத்தில் இருந்து 37.2 சதவீதமாகக் குறைந்தது. இதுமட்டும் அல்லாமல் வேலைவாய்ப்பில் இருப்போர் எண்ணிக்கை 399.7 மில்லியனில் இருந்து 397.8 மில்லியனாகக் குறைந்துள்ளது.
விவசாயத் துறை
ஆகஸ்ட் மாதம் வேலைவாய்ப்பின்மை-க்கு அதிகரிக்க மிக முக்கியக் காரணம் விவசாயத் துறை தான். இந்த வருடம் பருவமழை காலம் பெரிய அளவில் மாற்றம் கண்டுள்ள காரணத்தால் வேலைவாய்ப்பு எண்ணிக்கை பாதிக்கப்பட்டு உள்ளது.