இந்தியாவின் முக்கிய உற்பத்தித் துறையாக விளங்கும் ஆட்டோமொபைல் துறையில் ஒரு முக்கியப் பிரிவுக்குக் கொரோனா தொற்று மற்றும் லாக்டவுன் காரணமாகச் சுமார் 1 பில்லியன் டாலர் அதாவது 7500 கோடி ரூபாய் அளவிலான முதலீடு வீணாகியுள்ளது.
கொரோனா பாதிப்பு நாட்டின் அனைத்து உற்பத்தித் துறையைக் கடுமையாகப் பாதித்துள்ள நிலையில், ஆட்டோமொபைல் துறையையும் சற்றுக் கூடுதலாகப் பாதித்துள்ளது. குறிப்பாக ஆட்டோமொபைல் உதிரிப்பாகங்கள் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் வர்த்தகம் இல்லாமல் தவித்து வருகிறது.
ஆட்டோமொபைல் உதிரிப்பாகங்கள்
இந்தியாவின் ஆட்டோமொபைல் உதிரிப்பாகங்கள் தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யவும், வளரும் சந்தைக்குத் தேவையான உற்பத்தி அளவீட்டை ஈடு செய்ய 2019ஆம் நிதியாண்டில் சுமார் 1 பில்லியன் டாலர் அளவிலான முதலீட்டைச் செய்தது.
1 பில்லியன் டாலர் முதலீடு
இந்த 1 பில்லியன் டாலர் முதலீடு மூலம் ஆட்டோமொபைல் உதிரிப்பாகங்கள் தயாரிப்பு சந்தையின் வர்த்தகம் 2019ஆம் நிதியாண்டில் 14.5 சதவீதம் அதிகரித்து அதன் உச்ச அளவான 57 பில்லியன் டாலர் அளவீட்டை அடைந்தது.
2 வருடம் சரிவு
ஆனால் கொரோனா பாதிப்புக் காரணமாகக் கடந்த இரண்டு வருடத்தில் 12 சதவீதம் மற்றும் 3 சதவீதம் என அடுத்தடுத்த ஆண்டுகள் சரிந்து 2021ஆம் நிதியாண்டில் இச்சந்தையின் மொத்த வர்த்தக மதிப்பு 45.9 பில்லியன் டாலராகக் குறைந்துள்ளது.
CAGRல் பெரும் சரிவு
இதுமட்டும் அல்லாமல் கடந்த 2 வருடம் ஆட்டோமொபைல் உதிரிப்பாகங்கள் தயாரிப்புச் சந்தையில் ஏற்பட்ட சரிவு 2017 முதல் 2021 வரையிலான காலகட்டத்தில் இத்துறையின் வருடாந்திர வளர்ச்சி விகிதம் (CAGR) 4 சதவீதமாகக் குறைந்துள்ளது.
தீபக் ஜெயின்
கொரோனா பாதிப்பு நிறைந்த கடந்த 2 வருடத்தில் ஆட்டோமொபைல் உதிரிப்பாகங்கள் தயாரிப்பு சந்தையின் வளர்ச்சி 15 சதவீதம் சரிந்துள்ளது, இதன் மூலம் 2019ல் செய்த புதிய முதலீடுகளின் வாய்ப்புகள் முழுமையாகப் பாதிப்பு அடைந்துள்ளது என ACMA அமைப்பின் தலைவர் தீபக் ஜெயின் தெரிவித்துள்ளார்.
தொழில்நுட்ப மேம்பாடு
மேலும் தீபக் ஜெயின் கூறுகையில் ஆட்டோமொபைல் உதிரிப்பாகங்கள் தயாரிப்பு நிறுவனங்கள் செய்த முதலீடுகள் உற்பத்தி மேம்படுத்துவதில் இல்லை. இதற்கு மாறாக உற்பத்தியில் தொழில்நுட்ப மேம்பாட்டில் முதலீடு செய்யப்பட்டு உள்ளது. இதனால் இந்த முதலீட்டுக்கான லாபம் எப்போது பெற்று, வளர்ச்சிப் பாதைக்கு இத்துறை திரும்பும் என்பது தான் தற்போது அனைவரின் கேள்வியாக உள்ளது.
இந்திய பொருளாதாரம்
இந்திய பொருளாதாரம் 2025ஆம் நிதியாண்டுக்குள் 5 டிரில்லியன் டாலர் அளவிலான உயரத்தை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ஆட்டோமொபைல் உதிரிப்பாகங்கள் தயாரிப்புத் துறை மீண்டும் 18-19 சதவீத CAGR வளர்ச்சி அடைய வேண்டும் என்றால் புதிதாக முதலீடு பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம் எனத் தெரிவித்துள்ளார் தீபக் ஜெயின்.
உற்பத்தித் துறை
மோடியின் 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரக் கணக்கில் உற்பத்தித் துறையில் மட்டும் கட்டாயம் 1 டிரில்லியன் டாலர் பங்கு இருக்கும். அதில் 40 முதல் 45 சதவீதம் ஆட்டோமொபைல் துறையைச் சார்ந்துள்ளது.
ஊழியர்கள்
இந்திய ஆட்டோமொபைல் உதிரிப்பாகங்கள் தயாரிப்பு நிறுவனங்கள் தற்போது கொரோனா தொற்றுப் பாதிப்புக் காரணமாக 65-70 சதவீத ஊழியர்களை வைத்து மட்டுமே இயங்கி வருகிறது. இந்த நேரத்தில் 3வது கொரோனா அலை வரும் நிலையில் ஊழியர்கள் எண்ணிக்கை கூடுதலாகக் குறைக்க அதிக வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.
பல பிரச்சனை
மேலும் இந்திய ஆட்டோமொபைல் துறை தற்போது அதீத மூலப்பொருட்கள் விலை, வரி விதிப்பு, எரிபொருள் விலை, ஆட்டோமொபைல் சிப் பற்றாக்குறை எனப் பல பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகிறது. இதனால் கார் என்பது தற்போது காஸ்ட்லியான ஒன்றாக மாறியுள்ளது.
எலக்ட்ரிக் பைக் மற்றும் எலக்ட்ரிக் கார்
இதேவேளையில் இந்தியாவில் அனைத்து முன்னணி நிறுவனங்களும் எலக்ட்ரிக் கார் தயாரிப்புக்குத் தயாராகி வருகிறது. எலக்ட்ரிக் பைக் மற்றும் எலக்ட்ரிக் கார் பயன்படுத்த மக்கள் மத்தியிலும் அதிகளவிலான வரவேற்பு உள்ளது. இதோடு மத்திய அரசு எலக்ட்ரிக் வாகனங்களுக்கு அதிகளவிலான சலுகைகள் வழங்கப்படுகிறது. இதனால் ஆட்டோமொபைல் துறையின் பயணம் நடுக் கிணற்றில் உள்ளது.
முதலீடுகள் தேவை
எலக்ட்ரிக் கார் மற்றும் பைக் தயாரிக்கப் புதிதாக முதலீடுகள் தேவை, தற்போது இருக்கும் நிலையில் ஆட்டோமொபைல் துறை நிறுவனங்கள் புதிய முதலீட்டை ஈர்த்து, உற்பத்தியை மேம்படுத்துவது சாத்தியமற்ற ஒன்று.
எளிய வழி
இந்தப் பிரச்சனையைச் சமாளிக்க ஆட்டோமொபைல் நிறுவனங்கள் ஹைப்ரிட் கார்கள், ICE மற்றும் EV இணைந்தபடி வாகனங்களை உருவாக்க முயற்சிகளில் ஈடுபட்டால் பெரிய அளவிலான முதலீட்டை ஈர்க்க தேவையில்லை, இதேபோல் ஏற்கனவே இத்துறையில் இருக்கும் நிறுவனங்கள் வர்த்தகத்தையும் இழக்காது என ACMA அமைப்பின் தலைவர் தீப்க் ஜெயின் தெரிவித்துள்ளார்.
மின்சாரம் உள்ளதா..?
ஆனால் எவ்வளவு வேகமாக எலக்ட்ரிக் கார் மற்றும் பைக் பக்கம் இந்தியா செல்கிறதோ அந்த அளவிற்கு நாட்டின் வர்த்தகப் பற்றாக்குறை அளவை குறைக்கவும், சுற்றுச்சூழல் பாதிப்பைக் குறைக்க முடியும்.
எல்லாம் சரி இந்திய மக்கள் அனைவரும் எலக்ட்ரிக் வாகனங்கள் பயன்படுத்தும் அளவிற்கு மின்சாரம் உள்ளதா..? வீட்டுக்கே 24 மணிநேரம் முழுசா கரன்ட் சப்ளை இல்லை.