இந்தியா ஆட்டோமொபைல் துறை பல போராட்டங்களுக்குப் பின்பு நிலையான வர்த்தகத்தைப் பெற்று வரும் இந்தச் சூழ்நிலையில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றுக் காரணமாக நாடு முழுவதும் மாநில அரசுகள் அறிவிக்கப்பட்டு வரும் லாக்டவுன் கட்டுப்பாடுகள் ஆட்டோமொபைல் துறையின் வர்த்தகத்தைப் பெரிய அளவில் பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
லாக்டவுன் கட்டுப்பாடுகள்
2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் அறிவிக்கப்பட்ட லாக்டவுன் கட்டுப்பாடுகள் ஆட்டோமொபைல் வர்த்தகத்தைப் பெரிய அளவில் பாதித்தது. குறிப்பாகச் சுமார் 5 மாதம் எவ்விதமான வர்த்தகமும் இல்லாமல் ஆட்டோமொபைல் துறை முடங்கியது, இதில் உற்பத்தித் துறையும் அடக்கம்.
ஆட்டோமொபைல் நிறுவனங்கள்
இந்நிலையில் ஆகஸ்ட் மாதம் முதல் லாக்டவுன் கட்டுப்பாடுகள் தளர்வு அளிக்கப்பட்டு வர்த்தகச் சந்தை வளர்ச்சிப் பாதைக்கு அடியெடுத்து வைத்த போது ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தான் அதிகளவிலான வர்த்தகத்தைப் பெற்று அசத்தியது.
பெட்ரோல் மற்றும் டீசல் விலை
ஆனால் கடந்த சில மாதங்களாகப் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வால் கார் மற்றும் பைக் விற்பனை மந்தமானது மட்டும் அல்லாமல் ஆட்டோமொபைல் நிறுவனங்களின் உற்பத்தி செலவுகள் பெரிய அளவில் அதிகரித்தது. இதன் காரணமாக நாட்டின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனங்கள் கார் விலையை உயர்த்த முடிவு செய்தது.
144 தடை உத்தரவு
தற்போது நாடு முழுவதும் 2வது கொரோனா அலையைக் கட்டுப்படுத்த லாக்டவுன் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் வர்த்தகச் சந்தை பெரிய அளவிலான பாதிப்பை எதிர்கொள்ள உள்ளது. குறிப்பாக மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா தொற்று அதிகமான காரணத்தால் அடுத்த 15 நாட்கள் அத்தியாவசிய பொருட்களுக்கு மட்டுமே விலக்கு அளிக்கப்பட்டு 144 தடை உத்தரவுடன் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு உள்ளது.
20 சதவீத வர்த்தகம்
ஏற்கனவே இந்தியா முழுவதும் கிட்டதட்ட அனைத்து மாநிலங்களிலும் லாக்டவுன் அறிவிப்புகள் நடைமுறைக்கு வந்துள்ள நிலையில் ஏப்ரல் மாதம் ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்குச் சுமார் 20 சதவீத வர்த்தகம் பாதிக்கும் என்று கணிப்புகள் வெளியாகியுள்ளது.
ஒரு கார் கூட விற்பனை செய்யவில்லை
கடந்த 2 வாரத்தில் புதிய கார் வாங்க வருவோர் எண்ணிக்கை 2019ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் சுமார் 20 சதவீதம் சரிந்துள்ளது எனப் பல ஆட்டோமொபைல் டீலர்கள் தெரிவித்துள்ளனர். சில ஆட்டோமொபைல் நிறுவனங்கள் ஏப்ரல் மாதத்தில் இதுவரை ஒரு கார் கூட விற்பனை செய்யாமலும் உள்ளது.