சென்னை உள்பட இந்தியாவின் 8 முக்கிய நகரங்களில் 5% முதல் 10% வரை வீட்டின் விலை இந்த காலாண்டில் உயர்ந்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு பின்னர் தற்போது வீடுகளின் தேவை அதிகரித்துள்ளதன் காரணமாக வீடுகளின் விலை உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமின்றி சிமெண்ட், செங்கல், இரும்பு உள்பட கட்டுமான பொருட்களின் விலையும் மிக அதிகமாக உயர்ந்துள்ளதால் வீடுகளின் விலையும் 5 முதல் 10 சதவீதம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
வீடுகளின் விலை
டெல்லி என்சிஆர், கொல்கத்தா, ஐதராபாத், சென்னை, பெங்களூர், ஐதராபாத், புனே, மற்றும் அகமதாபாத் ஆகிய 8 நகரங்களில் வீடுகளின் தேவை அதிகரித்துள்ளதால் 5% முதல் 10% வரை வீடுகளின் விலை அதிகரித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
வீடுகளின் தேவை அதிகரிப்பு
கடந்த 2021 - 22ஆம் நிதியாண்டில் விற்கப்படாமல் இருந்த வீடுகள் தற்போது விற்பனையாகி வருவதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. இருப்பினும் தொற்று நோய்க்கு முந்தைய காலகட்டத்தை விட வீடுகளின் விலை தற்போது அதிகரித்துள்ளதாகவும் இதற்கு வீடுகளின் தேவை அதிகரிப்பு மட்டுமின்றி கட்டுமான பொருட்களின் மிக அதிகமான விலை உயர்வும் காரணம் என்றும் கூறப்படுகிறது.
10 சதவீதம் விலையுயர்வு
டெல்லி என்சிஆர் பகுதிகளில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு வீடுகளின் விலை 10 சதவீதம் உயர்ந்துள்ளது என்றும் அதேபோல் அகமதாபாத்தில் 9 சதவீதம், ஐதராபாத், கொல்கத்தாவில் 8 சதவீதம், பெங்களூரு, புனே, சென்னை ஆகிய பகுதிகளில் 5% வீடுகளின் விலை உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையில் வீடுகளின் விலை
சென்னையை பொறுத்தவரை வீட்டின் விலை உயர்வுக்கு முழுக்க முழுக்க கட்டுமான பொருட்களின் விலை உயர்வே காரணம் என்று கூறப்படுகிறது. சென்னையில் தற்போது கடந்த இரண்டு ஆண்டுகளாக விற்பனையாகாமல் இருந்த வீடுகள் விற்பனையாகி வருவதாக கூறப்படுகிறது.
ரெப்போ வட்டி விகிதம்
ஆனால் அதே நேரத்தில் சென்னை உள்பட 8 நகரங்களிலும் இன்னும் விற்பனை செய்யப்படாத வீடுகளின் எண்ணிக்கை சற்று அதிகம் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இந்திய ரிசர்வ் வங்கி அவ்வப்போது ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தி வருவதால் வீடுகளுக்கு வழங்கப்படும் கடனுக்கு வட்டி விகிதம் உயர்ந்து வருகின்றன. இதன் காரணமாக கடன் வாங்கி வீடு வாங்குவோரின் எண்ணிக்கை குறைந்து வருவதாகவும் அதனால் வீடுகள் விற்பனையில் தேக்க நிலை ஏற்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
வீடுகளின் விற்பனை
ஆனால் அதே நேரத்தில் வீடுகளின் தேவை அதிகம் இருப்பதால் ஒரு சிலர் துணிந்து வீடுகளை வாங்கி வருவதால் வீடுகளின் விற்பனை தற்போது இயல்பு நிலைக்கு வந்து உள்ளதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன.
ஒரு சதுர அடி விலை என்ன?
பெங்களூரு பகுதியில் ஒரு சதுர அடி ரூ.7,848 ஆகவும், சென்னையில் சதுர அடி ரூ.7,129 ஆகவும் விற்பனையாகி வருகிறது. ஐதராபாத்தில் ஏப்ரல்-ஜூன் மாதங்களில் சதுர அடியின் விலை ரூ.9,218 ஆக உயர்ந்துள்ளது. இது முந்தைய ஆண்டை விட 8 சதவீதம் அதிகமாகும். கொல்கத்தாவில் குடியிருப்புகளின் விலையும் 8 சதவீதம் அதிகரித்து ஒரு சதுர அடிக்கு ரூ.6,362 ஆக உள்ளது. டெல்லி-என்.சி.ஆர் பகுதியில் வீட்டின் விலைகள் ஒரே ஆண்டில் 10 சதவீதம் அதிகரித்து ஒரு சதுர அடி ரூ.7,434 என உயர்ந்துள்ளது.
வேறு வழியில்லை
வீடுகள் விலை உயர்வு குறித்து AIPL இன் குழும நிர்வாக இயக்குனர் பங்கஜ் பால் அவர்கள் கூறியபோது, 'கடந்த 10 ஆண்டுகளில் வீட்டு விலைகள் பெரிதாக உயரவில்லை. பில்டர்கள் மிகக் குறைந்த அளவிலேயே விற்பனை செய்து வருகின்றனர். முக்கிய கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வால், ரியல் எஸ்டேட் டெவலப்பர்கள் வாடிக்கையாளர்களுக்கு விலையை உயர்த்தி விற்பனை செய்வதை தவிர வேறு வழியில்லை' என்று கூறினார்.


Click it and Unblock the Notifications