மும்பை: தனியார் துறையை சேர்ந்த வங்கியான ஆக்ஸிஸ் பேங்க் லிமிடெட் கடந்த செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த இரண்டாவது காலாண்டில் நிகரலாபம், 1,683 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாக இவ்வங்கி தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு இதே செப்டம்பர் காலாண்டில் நிகர நஷ்டமாக 112 கோடி ரூபாயினை கண்டிருந்த நிலையில், நடப்பு ஆண்டில் நல்ல லாபம் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அதோடு இவ்வங்கியின் லாபம் 1,616.7 கோடி ரூபாயாக இருக்கும் என்று சிஎன்பிசி - டிவி18 மதிப்பீடு செய்திருந்தது. இந்த நிலையில் இந்த கணிப்பினையும் தாண்டி இவ்வங்கி லாபம் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது..
இவ்வங்கியின் செயல்பாட்டு லாபம் இரண்டாவது காலாண்டில், கடந்த ஆண்டோடு ஒப்பிடும்போது 16 சதவீதம் அதிகரித்தும், இதே கடந்த காலாண்டுடன் ஒப்பிடும்போது 18 சதவீதம் அதிகரித்தும் 6,898 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இதே இவ்வங்கியின் நிகரவட்டி வருமானம், கடந்த ஆண்டோடு ஒப்பிடும்போது 20 சதவீதம் அதிகரித்து, 7,326 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலாண்டில் 6,102 கோடி ரூபாயாக இருந்தது. நிகர வட்டி மார்ஜின் 3.58% ஆகவும், இது முந்தைய ஆண்டில் 3.51% ஆகவும் இருந்துள்ளது.
கட்டண வருமானம் கடந்த காலாண்டோடு ஒப்பிடும்போது 67 சதவீதமும், இதே கடந்த ஆண்டோடு ஒப்பிடும்போது 4 சதவீதம் அதிகரித்துள்ளது. இதே சில்லறை கட்டண வருமானது கடந்த காலாண்டோடு 82 சதவீதமும், கடந்த ஆண்டோடு ஒப்பிடும்போது 0.5 சதவீதமும் அதிகரித்துள்ளது. கார்ப்பரேட் மற்றும் வணிக வங்கி கட்டணம் கடந்த காலாண்டோடு ஒப்பிடும்போது 46 சதவீதம் அதிகரித்தும், கடந்த ஆண்டோடு ஒப்பிடும்போது 10 சதவீதமும் வளர்ச்சி கண்டுள்ளது.
இந்த செப்டம்பர் காலாண்டில் மொத்த டெபாசிட் விகிதம் கடந்தாண்டோடு ஒப்பிடும்போது, 13 சதவீதம் அதிகரித்துள்ளதாக இவ்வங்கி வெளியிட்டுள்ள தரவில் தெரிவித்துள்ளது.
இதில் சேமிப்பு கணக்குக்கு டெபாசிட் விகிதம் 15 சதவீதம் மற்றும் நடப்பு கணக்கு டெபாசிட் விகிதம் 18 சதவீதம் அதிகரித்துள்ளது. சில்லறை கால வைப்பு காலாண்டு சராசரி அடிப்படையில் 25 சதவீதம் அதிகரித்துள்ளது.
இவ்வங்கியின் வாராக்கடன் மற்றும் நிகர வாரக்கடன் விகிதம் செப்டம்பர் காலாண்டில் முறையே, 4.18%மும், 098%மும் ஆக குறைந்துள்ளது. இது கடந்த ஜூன் காலாண்டில் முறையே 4.72% மற்றும் 1.23% ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.