சிட்டி குழுமத்தின் இந்திய வணிகத்தினை, இந்தியாவினை சேர்ந்த முன்னணி தனியார் வங்கியான ஆக்ஸிஸ் வங்கி கையகப்படுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளது.
இது குறித்து வெளியான அறிக்கையின் படி ஆக்ஸிஸ் வங்கி தனது சேவையினை விரிவாக்கம் செய்யும்பொருட்டு 1.6 பில்லியன் டாலர் முதலீடு செய்யவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
அமெரிக்க வங்கியான இது 13 சந்தைகளில் இருந்தும் அதன் சில்லறை செயல்பாடுகளில் இருந்தும் வெளியேறவுள்ளதாக முன்னதாக அறிவித்திருந்தது.
என்ன சேவை அடங்கும்
இந்த கையகப்படுத்தலில் சிட்டி வங்கியின் நுகர்வோர் வங்கி சேவையும் அடங்கும். மேலும் கிரெடிட் கார்டு சேவை, சொத்து மேலாண்மை, சில்லறை வாடிக்கையாளர்களின் கணக்கு மற்றும் நுகர்வோர் கடன் உள்ளிட்டவை அடங்கும். இந்த பரிவர்த்தனையில் சிட்டி வங்கியின் வங்கி சாரா நிதி நிறுவனமான சிட்டிகார்ப் ஃபைனான்ஸ் இந்தியா உள்ளிட்ட சேவைகளும் அடங்கும்.
ஊழியர்களின் நிலை
மேலும் வணிக வாகனம் மற்றும் தனி நபர் கடன்கள், கட்டுமான உபகரண கடன், பர்சனல் லோன் என பலவும் இந்த கையகப்படுத்தலில் அடங்கும். இதற்கிடையில் இந்த கையகப்படுத்தலின் மூலம் சிட்டி வங்கியின் 3600 ஊழியர்களும் ஆக்ஸிஸ் வங்கிக்கு மாற்றுவதும் அடங்கும். இந்த ஒப்பந்தத்திற்கு பிறகு ஒதுக்கப்பட்ட 800 மில்லியன் டாலர் பங்குகளை சிட்டி குழுமம் வெளியிடலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
பாதிப்பு ஏதும் இருக்காது
இவ்வங்கிகளின் பரிவர்த்தனையானது 2023ம் ஆண்டின் முதல் பாதியில் முடிவடையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கையகப்படுத்தலினால் இந்தியாவில் உள்ள சிட்டி வங்கி வாடிக்கையாளர்களுக்கு எந்த பாதிப்பும் இருக்காது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கி மறுசீரமைப்பு
சிட்டி வங்கியானது 13 நாடுகளில் இருந்து அதன் சில்லறை வணிகத்தில் இருந்து வெளியேறி, அதன் அதிக லாபம் தரும் நிறுவன மற்றும் சொத்து மேலாண்மை வணிகங்களில் கவனம் செலுத்தும். இதன் மூலம் நிறுவனம் மறுசீரமைக்கப்படும் என்றும் அதன் தலைமை செயல் அதிகாரி ஜேன் ஃப்ரோசரின் கூறியிருந்த நிலையில், அதன் ஒரு பகுதியாக இந்த கையகப்படுத்தல் பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் எப்போது தொடக்கம்
இது குறித்து இவ்வங்கி கடந்த ஏப்ரல் மாதத்திலேயே அறிவித்திருந்தது. தற்போது சிட்டி குழுமம் இந்தியாவில் 25 கிளைகளைக் கொண்டுள்ளது. இவ்வங்கியின் நுகர்வோர் வங்கி வணிகத்தில் 4000 பேர் பணியாற்றியும் வருகின்றனர். சிட்டி குழுமம் 1902ல் இந்தியாவில் நுழைந்தது. 1985ல் நுகர்வோர் வங்கி வணிகத்தினையும் தொடங்கியது.