இந்தியாவில் உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சந்தை குறித்து நிதி ஆயோக் வெளியிட்டுள்ள புதிய அறிக்கை கல்லூரி மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக BA, BSc, BCom போன்ற பொதுவான பட்டப்படிப்புகள் தொடர்பான அறிக்கையை ஒவ்வொரு பெற்றோரும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்.
நிதி ஆயோக் அமைப்பு Reimagining Skilling for Viksit Bharat @2047 என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் பட்டப்படிப்பு முடித்தவர்களில் வெறும் 8.25% பேர் மட்டுமே தாங்கள் படித்த கல்வி தகுதிக்கு ஏற்ற வேலைகளில் அமர்த்தப்பட்டுள்ளனர். அதாவது, 90 சதவீதத்திற்கும் அதிகமான பட்டதாரிகள் தாங்கள் படித்த துறைக்கும் செய்யும் வேலைக்கும் எந்த சம்பந்தமும் இல்லாத துறைகளில் தான் இருக்கின்றனர் என தெரிவித்துள்ளது.

நாட்டின் ஒட்டுமொத்த வேலையின்மை விகிதம் 3.2% ஆக உள்ள நிலையில், பட்டதாரிகள் மத்தியில் வேலையின்மை 13% என மிக அதிகமாக உள்ளது என கூறியுள்ளது. குறிப்பாக பெண் பட்டதாரிகளிடையே இந்த வேலையின்மை விகிதம் 20.4% ஆக உயர்ந்துள்ளதாக கவலை தெரிவித்துள்ளது. இவர்கள் பலர் BA, BSc, BCom போன்ற பொதுவான பட்டப்படிப்புகளை முடித்தவர்களாம்.
நாட்டில் இளநிலை படிப்புகளில் சேர்ந்துள்ள மொத்தம் 3.4 கோடி மாணவர்களில், பி.ஏ , பி.எஸ்சி , மற்றும் பி.காம் ஆகிய மூன்று படிப்புகளில் மட்டும் சேர்ந்துள்ள மாணவர்களின் மொத்த எண்ணிக்கை 2 கோடியை தாண்டியுள்ளது. ஆனால் இந்த படிப்புகள் வேலைவாய்ப்புகளை உறுதி செய்பவையாக இல்லை என தெரிவித்துள்ளது.
பல மாணவர்கள் இந்த எளிய பட்டப்படிப்புகளை தேர்ந்தெடுப்பதற்கு முக்கிய காரணம் அரசின் போட்டி தேர்வுகளுக்கு தயாராக வேண்டும் என்பதுதான். இப்படி ஒவ்வொரு ஆண்டும் வேலைக்கான திறன்களை பெறாமல் லட்சக்கணக்கான இளைஞர்கள் அரசு பணிகளை குறிக்கோளாக கொண்டு வருகிறார்கள். ஆனால் அரசு பணி சொற்பமான எண்ணிக்கையிலான நபர்களுக்கே கிடைக்கிறது என்கிறது. மற்றவர்கள் வேலைவாய்ப்பு கிடைக்காமல் திண்டாடுகின்றனர் என்கிறது.
இந்தியாவில் வகுப்பறைகளில் கற்றுக்கொடுக்கும் கல்விக்கும், தொழில்துறை தேவைகளுக்கும் இடையே தொடர்பே இல்லாமல் இருக்கிறது என நிதி ஆயோக் சுட்டிக்காட்டியுள்ளது. பெரும்பாலான கல்வி நிறுவனங்களின் பாடத்திட்டங்கள் காலாவதியானவை ஆகவும், மாறிவரும் தொழில்துறை தேவைகளுக்கு ஏற்ப மாற்றமில்லாமலும் உள்ளன. இதனால் பட்டங்கள், டிப்ளமோக்கள் வெறும் காகிதங்களாகவே உள்ளனவே தவிர, அவை வேலைவாய்ப்பை உறுதி செய்வதில்லை என சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த நெருக்கடியில் இருந்து மீள நிதி ஆயோக் சில கட்டமைப்பு மாற்றங்களை பரிந்துரைத்துள்ளது. BA, BSc, BCom போன்ற பொதுவான படிப்புகளுக்கு பதில், தொழில்துறைக்கு தேவையான சிறப்பு படிப்புகளாக அவற்றை மாற்றியமைக்க வேண்டும். உதாரணமாக, B.A. Hospitality, B.Com. Analytics , B.Sc. Applied Technology போன்ற தொழிற்கல்வி சார்ந்த பட்டப்படிப்புகளை அறிமுகப்படுத்தலாம் என்கிறது.
மாணவர்கள் வெறும் தியரி படித்துவிட்டு வேலைக்கு செல்வதற்கு பதிலாக, படிக்கும் காலத்திலேயே செய்முறை அனுபவத்தையும், தொழிற்பயிற்சியையும் பெறும் வகையில் Apprenticeship முறையை விரிவுபடுத்த வேண்டும் என யோசனை கூறுகிறது. கல்வி நிறுவனங்களும் தனியார் நிறுவனங்களும் இணைந்து செயல்படுவதன் மூலம், நவீன காலத்திற்கேற்ற பாடத்திட்டங்களை வகுக்கவும், மாணவர்களுக்கு எளிதில் வேலைவாய்ப்பை உறுதி செய்யவும் முடியும் என தெரிவித்துள்ளது.
இந்தியா விக்சித் பாரத் இலக்கை அடைய வேண்டுமெனில், கல்விமுறையில் பெரும் சீர்த்திருத்தம் கொண்டு வர வேண்டும் என தெரிவித்துள்ளது. கல்லூரி மாணவர்களுக்கு தொழில்துறை கோரும் உண்மையான திறன்களை வழங்கும் வகையிலும், கல்வியை வேலைவாய்ப்போடு இணைக்கும் வகையிலும் உயர்கல்வி முறையில் உடனடியாக பெரும் மாற்றங்களை கொண்டுவர வேண்டும் என அரசை கேட்டு கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications


