கொரோனா மருத்துச் சர்ச்சையில் சிக்கியுள்ள பாபா ராம்தேவ்-வின் பதஞ்சலி நிறுவனம் மிகப்பெரிய போட்டிக்கு மத்தியில் கைப்பற்றிய நிறுவனம் தான் ருசி சோயா. FMGC பிரிவில் முன்னணி நிறுவனமாகத் திகழும் இந்த நிறுவனம் கொரோனாவால் ஏற்பட்ட பாதிப்பில் சிக்காமல் ராக்கெட் வேகத்தில் வளர்ச்சி அடைந்து வருகிறது.
ருசி சோயா நிறுவனம் கனவிலும் நினைத்துப்பார்க்க முடியாத அளவிற்கு வெறும் 5 மாத காலத்தில் இந்நிறுவனப் பங்குகள் சுமார் 8,800 சதவீதம் வளர்ச்சி அடைந்து முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.
இதே காலகட்டத்தில் மும்பை பங்குச்சந்தை சுமார் 14.15 சதவீதம் வரையில் சரிந்தது குறிப்பிடத்தக்கது.
ருசி சோயா
திவாலான நிலையிலும், பங்குச்சந்தை வர்த்தகத்தில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் இருந்த ருசி சோயா நிறுவனத்தைப் பல்வேறு போட்டிக்கு மத்தியில் வென்ற பதஞ்சலி, இந்நிறுவனத்தின் கடன் மற்றும் இதர பிரச்சனைகளுக்குத் தீர்வு கண்டு மீண்டும் பங்குச்சந்தையில் 2020 ஜனவரி மாதம் 27ஆம் தேதி வர்த்தகத்திற்காகப் பட்டியலிட்டது.
மும்பை பங்குச்சந்தையில் ருசி சோயா ஒரு பங்கு 16.9 ரூபாய் விலையில் பட்டியலிட்டது.
ஜனவரி டூ ஜூன்
பல்வேறு சிக்கல்களுக்கு மத்தியில் நிதி திரட்ட பதஞ்சலி, ருசி சோயா நிறுவனத்திற்குப் பங்குச்சந்தையில் பட்டியலிடுவதற்காக செபியிடம் அனுமதி பெற்றுப் பட்டியலிடப்பட்டது.
ஜனவரி 27ஆம் தேதி வெறும் 16.7 ரூபாய்க்குப் பட்டியலிடப்பட்ட நிலையில் ஜூலை 26ஆம் தேதி வர்த்தகத்தின் முடிவில் சுமார் 8819 சதவீதம் வளர்ச்சி அடைந்து உச்சக்கட்ட விலையான 1519.65 ரூபாயை அடைந்து ஆச்சரியத்தைக் கொடுத்துள்ளது.
டாப் 100
இந்த அதிரடி வளர்ச்சி மூலம் ருசி சோயா நிறுவனத்தின் சந்தை மதிப்பு 44,592 கோடி ரூபாயாக உயர்ந்து இந்தியாவின் டாப் 100 நிறுவனங்கள் பட்டியலில் சேர்ந்துள்ளது.
இதன் மூலம் 44,482 கோடி ரூபாய் மதிப்புடைய மாரிகோ நிறுவனத்தைப் பின்னுக்குத் தள்ளியுள்ளது.
பதஞ்சலி நிறுவனம்
பதஞ்சலி நிறுவனம் கடந்த வருடம் பல முன்னணி நிறுவன போட்டிக்கு மத்தியில் இந்நிறுவனத்தை 4,350 கோடி ரூபாய்க்கு கைப்பற்றியது. இதில் 4,235 கோடி ரூபாய் தொகையை இந்நிறுவனத்திற்குக் கடன் கொடுத்தவர்களுக்குக் கொடுக்கப்பட்ட நிலையில் 115 கோடி ரூபாயை வர்த்தக விரிவாக்கம் மற்றும் மூலதனத்திற்காக முதலீடு செய்தது பதஞ்சலி நிறுவனம்
பங்கு இருப்பு
இதன் மூலம் ருசி சோயா நிறுவனத்தின் 98.87 சதவீத பங்குகள் பாபா ராம்தேவ்-ன் பதஞ்சலி ஆயுர்வேத கட்டுப்பாட்டிற்குக் கீழ் உள்ளது. பொதுச் சந்தையில் மீதமுள்ள 1.13 சதவீத பங்குகள் மட்டுமே இருப்பதால் ருசி சோயா பங்குகள் மீதான வர்த்தகம் அதிகமாக நடக்கிறது.