இந்தியாவின் சேவை துறையில் மிகப்பெரிய துறையாக இருந்து வரும் ஐடி துறையில், கொரோனாவின் வருகைக்கு பிறகு பெரும்பாலான ஊழியர்கள் வீட்டிலிருந்து பணிபுரிந்து வருகின்றனர்.
தற்போது சர்வதேச அளவில் கொரோனாவின் தாக்கம் குறைந்து வரும் நிலையில் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளிலும், நிறுவனங்கள மீண்டும் ஊழியர்களை அலுவலகம் வந்து பணியாற்ற கூறி வருகின்றன.
குறிப்பாக இந்திய ஐடி நிறுவனங்கள் பலவும் ஊழியர்களை படிப்படியாக அலுவலகம் வர கூறி வருகின்றன.
அலுவலகங்களை திறக்க திட்டம்
19 மாதங்களுக்கு பிறகு தற்போதுதான் நிலைமை சற்றே மாறியுள்ளது. இந்த நிலையில் ஐடி நிறுவனங்கள் தங்களது அலுவலகங்களை திறக்க திட்டமிட்டு வருகின்றனர். இதற்கிடையில் நிறுவனங்களும், ஊழியர்களும் எந்த மாதிரியான சவால்களை எதிர்கொள்கின்றனர். என்னென்ன பிரச்சனைகள் உள்ளது வாருங்கள் பார்க்கலாம்.
ஊழியர்கள் என்ன விரும்புகிறார்கள்
கடந்த 19 மாதங்களாக வீட்டிலிருந்தே பணிபுரிந்து வந்த ஊழியர்கள், பெரும்பாலானவர்கள் தற்போது வீட்டிலிருந்தும் மற்றும் அலுவலகத்தில் இருந்து பணிபுரியும் கலப்பின கலாச்சாரத்தையே விரும்புகின்றனர். குறிப்பாக 40 சதவிகித ஊழியர்கள் வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமே அலுவலகம் வந்து பணிபுரிவதையே எதிர்பார்க்கின்றனர் எனினும் பெரும்பாலான ஊழியர்கள் அலுவலகத்திலிருந்து பணிபுரிவதையே விரும்புகின்றனர்.
படிப்படியாக அலுவலகங்கள் திறக்கலாம்
தற்போது கொரோனாவின் தாக்கம் குறைய தொடங்கி உள்ள நிலையில், உலகம் முழுவதும் உள்ள ஐடி நிறுவனங்கள் தங்களது அலுவலகங்களை திறக்க தொடங்கியுள்ளன. குறிப்பாக இந்தியாவில் பல ஐடி நிறுவனங்களும் அலுவலகங்களை திறக்க திட்டமிட்டு வருகின்றன. இதனால் இனிவரும் மாதங்களில் படிப்படியாக ஊழியர்கள் அலுவலகங்களுக்கு திரும்பலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
கலப்பின மாடல் பணி
இதற்கிடையில் தொழில்நுட்பத்துறை அமைப்பான நாஸ்காம், ஊழியர்களும், முதலாளிகளும் அலுவலகங்களுக்கு திரும்புவதை சமமாகவே ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால் 40% ஊழியர்கள் அலுவலக வளாகத்தில் இருந்து வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமே வேலை செய்ய எதிர்பார்க்கின்றனர். இது தான் வேலை செய்வதற்கான மிக சிறந்த வழியாகவும் நினைக்கின்றனர்.
நிறுவனங்களின் கவலை என்ன?
நிறுவனங்கள் வீட்டிலிருந்து வேலை செய்வது என்பது உற்பத்தித் திறனை பாதிக்கின்றது என நினைக்கின்றன. ஆனால் ஊழியர்கள் பெரும்பாலும் அலுவலகம் மற்றும் வீட்டில் இருந்து பணிபுரியும் நெகிழ்வுதன்மையை, பெரும்பகுதி தொழிலாளர்கள் தற்போது எதிர்பார்க்கின்றனர். சமீபத்திய ஆய்வின்படி, 70% சதவிகிதத்திற்கும் அதிகமான நிறுவனங்களின் விருப்பம் கலப்பின வேலை மாதிரியாக உள்ளது.
ஊழியர்களின் கவலை
வீட்டிலிருந்து பணிபுரிவது என்பது ஊழியர்களுக்கு பயண நேரம் மற்றும் செலவுகளை சேமிக்க உதவுகிறது. மேலும் பலர் தங்கள் பெற்றோருடன் வசிக்க பெருநகரங்களில் இருந்து. தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று உள்ளதால் வாடகையும் மிச்சமாகும் என நினைக்கின்றனர்.
அலுவலகங்களுக்கு திரும்புவது எப்படி உதவும்
முக்கியமான வணிக செயல்பாடுகள் மற்றும் நிறுவன கலாச்சாரத்தை பராமரிக்கவும், டேட்டா பாதுகாப்பு உள்ளிட்ட பலவும் நிறுவனங்களுக்கு சாதகமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில் தான் நிறுவனங்கள் ஊழியர்கள் அலுவலகங்களுக்கு திரும்புவதில் ஆர்வம் காட்டி வருகின்றன.
கூகுளின் திட்டம்
சர்வதேச அளவில் முன்னணி ஐடி நிறுவனமான கூகுள் நிறுவனம், வீட்டில் இருந்து வேலை செய்ய விரும்பும் ஊழியர்களுக்கு 25% சம்பள குறைப்பை அறிவித்துள்ளது. இது மீண்டும் அனைத்து தொழிலாளர்களையும் அலுவலகத்திற்கு வர எடுக்கப்பட்ட நடவடிக்கையாகவும் பார்க்கப்படுகிறது.
அட்ரிஷன் விகிதம் குறையும்
தற்போதைய காலகட்டத்தில் ஐடி நிறுவனங்கள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால் அட்ரிஷன் விகிதம். ஊழியர்கள் அலுவலகத்திற்கு திரும்பினால் இதுவும் குறையும் என நிறுவனங்கள் எதிர்பார்க்கின்றன. ஏனெனில் ஊழியர்கள் அலுவலகத்திற்கு வரும் பட்சத்தில், அவர்கள் இண்டர்வியூ செல்வது குறையும். இதனால் அவர்கள் வேலை மாறுவது கடினமான ஒன்றாக இருக்கும் என நினைக்கின்றன. தற்போது ஐடி துறையில் 30% வரையில் அட்ரிஷன் விகிதம் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
இந்திய நிறுவனங்களின் நிலை
டிசிஎஸ் ஊழியர்கள் நவம்பர் 15-க்குள் அலுவலகங்களுக்கு திரும்பலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதே இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் உயர் அதிகாரிகள் வாரத்தில் ஒரு முறை அலுவலகத்திற்கு திரும்பலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதே ஹெச்.சி.எல் நிறுவனத்தின் ஊழியர்களில் 5 - 6% அலுவலகம் திரும்பியுள்ளனர்.
விப்ரோ நிறுவனத்தின் இரண்டு தடுப்பூசி போட்டுக் கொண்ட உயர் அதிகாரிகள், வாரத்திற்கு இருமுறை வேலைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.