டெல்லி: பொதுவாக வாகன துறைக்கு இது மோசமான காலம் என்றாலும், இரு சக்கர வாகன விற்பனையானது அவ்வளவாக பாதிக்கப்படவில்லை என்றே கூறலாம்.
எனினும் இரு சக்கர வாகன விற்பனையும் அவ்வப்போது வீழ்ச்சி கண்டு தான் வருகிறது.
விற்பனை வீழ்ச்சி
அந்த வகையில் முன்னணி வாகன விற்பனையாளரான பஜாஜ் ஆட்டோ கடந்த டிசம்பரில் உள்நாட்டு விற்பனையானது, கடந்த ஆண்டோடு ஒப்பிடும்போது 21 சதவிகிதம் வீழ்ச்சி கண்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த நிலையில் டிசம்பரில் 1,24,125 மோட்டார் சைக்கிள்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது. இதுவே கடந்த ஆண்டு இதே காலத்தில் 1,57,252 வாகனங்களை விற்பனை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ஏற்றுமதி அதிகரிப்பு
இந்தியாவின் இரு சக்கர ஆட்டோமொபைல் ஜாம்பாவான் ஆன பஜாஜ் ஆட்டோ உள்நாட்டு விற்பனை குறைந்துள்ள நிலையிலும், ஏற்றுமதி 13 சதவிகிதம் அதிகரிப்பைக் கண்டுள்ளது.
பஜாஜ் ஆட்டோவின் ஏற்றுமதி டிசம்பர் மாததில் 1,60,677 யூனிட்களாக ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் இது முந்தைய ஆண்டு இதே காலத்தில் 1,41,603 யூனிட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. ஆக மொத்தத்தில் டிசம்பர் மாதத்தில் மோட்டார் சைக்கிள் விற்பனையானது 5 சதவிகிதம் குறைந்துள்ளது.
வணிக வாகன விற்பனை அதிகரிப்பு
எனினும் பஜாஜ் ஆட்டோவின் வணிக வாகன ஏற்றுமதியானது வீழ்ச்சி கண்டுள்ளது. ஆனால் உள்நாட்டு விற்பனை அதிகரித்துள்ளது. இதே போல் உள்நாட்டு வணிக வாகனங்கள் டிசம்பரில் 26 சதவிகிதம் உயர்ந்து 29,038 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது கடந்த டிசம்பர் 2018ல் 24,245 வாகனங்களை விற்பனை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
லாபம் அதிகரிப்பு
பஜாஜ் ஆட்டோ செப்டம்பர் காலாண்டில் மோட்டார் சைக்கிள் மற்றும் வணிக வாகனங்களின் ஏற்றுமதி மூன்று மாத காலத்திற்கு மிக உயர்ந்து உள்ளதாகவும் அறிவித்துள்ளது.
இதுவே செப்டம்பர் காலாண்டில் பஜாஜ் ஆட்டோ 21.69 சதவிகிதம் நிகரலாபம் அதிகரித்து 1,402,.42 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாக அறிவித்தது. இதுவே முந்தைய ஆண்டில் இதே காலாண்டில் 1,152.48 கோடி ரூபாய் நிகரலாபம் கண்டுள்ளதாகவும் அறிவித்துள்ளது. இந்த நிலையில் வரவிருக்கும் காலாண்டில் எப்படி இருக்கும் என்றும் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
பங்கு விலை
இந்த நிலையில் இந்த நிறுவனத்தின் பங்கு விலையானது 22 ரூபாய் குறைந்து 3,124 ரூபாயாக வர்த்தகமாகியும் வருகிறது.