இந்தியாவின் முன்னணி இரு சக்கர வாகன தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனமான பஜாஜ் ஆட்டோ எல்க்டிரிக் வாகன தயாரிப்பில் இறங்குவதற்காக மிகப்பெரிய திட்டத்தைத் தீட்டி வருகிறது என அனைவருக்கும் தெரியும்.
ஏற்கனவே இத்துறையில் ஓலா, டிவிஎஸ் என பல நிறுவனங்கள் இறங்கியுள்ளதால் இத்துறை வர்த்தகத்தைச் சிறப்பான முறையில் நிர்வாகம் செய்து வரும் காலத்தில் மிகப்பெரிய வர்த்தக பிரிவாக உருவாக்க வேண்டும் என திட்டமிட்டுள்ளது.
பஜாஜ் ஆட்டோ நிறுவனம்
பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் இந்த கனவு திட்டத்தைச் செயல்படுத்த முதல் கட்டமாக எலக்ட்ரிக் வாகன பிரிவுக்காகத் தனியாக ஒரு நிறுவனத்தைத் துவங்கியுள்ளது. இப்புதிய நிறுவனத்தின் வாயிலாக தான் எலக்ட்ரிக் இரு சக்கர வாகன பிரிவின் அனைத்து விதமான வர்த்தகத்தையும் நிர்வாகம் செய்ய உள்ளது.
பஜாஜ் எலக்ட்ரிக்
பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தில் எலக்ட்ரிக் வாகன வர்த்தகத்திற்காகத் தனியொரு நிறுவனத்தை உருவாக்குவதற்காக இந்நிறுவனத்தின் நிர்வாக குழு முழுமையான ஒப்புதல் அளித்துள்ளதாக மும்பை பங்குச்சந்தைக்குச் சமர்ப்பித்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
எலக்ட்ரிக் மற்றும் ஹைபிரிட் வாகனங்கள்
பங்குச்சந்தைக்கு சமர்ப்பித்துள்ள அறிக்கையில் பஜாஜ் ஆட்டோ, எலக்ட்ரிக் வாகன பிரிவுக்கு தனி நிறுவனத்தை உருவாக்கியதன் மூலம் அதன் வளர்ச்சி வாய்ப்புகள் மிகவும் சிறப்பாக இருக்கும். இதேபோல் இந்த நிறுவனம் எலக்ட்ரிக் மற்றும் ஹைபிரிட் இரண்டு, மூன்று மற்றும் நான்கு சக்கர வாகனங்களை தயாரிக்கவும் வர்த்தகப்படுத்தவும் பெரும் உதவியாக இருக்கும் என தெரிவித்துள்ளது.
முதலீடு, கூட்டணி ஈசி
இதேபோல் தனி நிறுவனம் என்பதால் புதிய முதலீட்டை ஈர்க்கவும், கூட்டணி அமைக்கவும், வர்த்தகத்தை வெளிநாடுகளுக்கு விரிவாக்கம் செய்யவும் எளிதாக இருக்கும். மேலும் புதிதா உருவாக்கப்பட்டு உள்ள நிறுவனம் 100 கோடி ரூபாய் முதலீட்டில் துவங்கப்பட்டு உள்ளது.
ஓலா, டிவிஎஸ்
ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மற்றும் டிவிஎஸ் நிறுவனம் ஐ கியூப் ஸ்கூட்டருக்கு போட்டியாக பஜாஜ் ஆட்டோ நிறுவனம் ஏற்கனவே தனது வெற்றி பிராண்டான சீடாக் பெயரில் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்து விற்பனை செய்து வருகிறது.
பஜாஜ் ஆட்டோ எதிர்கால திட்டம்
மேலும் பஜாஜ் ஆட்டோ விரைவில் 3 மற்றும் 4 சக்கர வாகனங்களையும் எலக்ட்ரிக் வாகன பிரிவில் தயாரித்து வெளியிடத் திட்டமிட்டுள்ளது. இதேபோல் பஜாஜ் நிறுவனம் விற்பனை செய்யும் கேடிஎம் பைக் பிரிவிலும் எலக்ட்ரிக் பைக் தயாரிக்கும் பணிகள் துவங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.