இந்தியாவின் முன்னணி வாகன உற்பத்தியாளரான பஜாஜ் ஆட்டோ. அதன் உற்பத்தி ஆலையை, 650 கோடி ரூபாயில் மகாராஷ்டிராவில் நிறுவ உள்ளதாக தெரிவித்துள்ளது.
இது குறித்தான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இது குறித்து வெளியான அறிக்கையில் இந்தியாவின் முன்னணி இரு சக்கர மற்றும் மூன்று சக்கர வாகன உற்பத்தியாளரான பஜாஜ் ஆட்டோ நிறுவனம் செவ்வாய்கிழமையன்று மகாராஷ்டிரா அரசுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
எப்போது முதல் உற்பத்தி
இதன் மூலம் 2023ம் ஆண்டு முதல் உற்பத்தியினை தொடங்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது என, பங்கு சந்தைக்கு தாக்கல் செய்துள்ள அறிக்கையில் இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த உற்பத்தி ஆலையில் கேடிஎம் (KTM), ஹஸ்குவர்ணா (Husqvarna) மற்றும் ட்ரையம்ப் (Triumph) மோட்டார் சைக்கிள்கள் உற்பத்தி தொடங்கப்படலாம் என்றும் கூறியுள்ளது.
மகாராஷ்டிரா அரசு உதவி
இது தவிர மின்சார வாகன உற்பத்திக்கும் இந்த ஆலை பயன்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் இந்த ஆலை அமைக்க தேவையான அனுமதிகள், பதிவுகள், ஒப்புதல்கள், நிதி சலுகைகள் போன்றவற்றை பெறுவதற்கு மகாரஷ்டிரா அரசு உதவி புரியும் என்றும் கூறப்பட்டுள்ளது. பஜாஜ் ஆட்டோவின் இந்த முதலீட்டு முன்மொழிதலை இது இன்னும் வலுப்படுத்தும் என்றும் கூறப்பட்டுள்ளது.
விற்பனை நிலவரம்
பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தனது 75 வயதை கொண்டாடும் இந்த ஆண்டில் தான், இந்த திட்டமானது வந்துள்ளது என இந்த நிறுவனம் தனது அறிக்கையில் கூறியுள்ளது. பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தனது விற்பனை கடந்த ஆண்டோடு ஒப்பிடும்போது நவம்பரில் 5% அதிகரித்து மொத்த விற்பனை 4,22,240 வாகனங்களாக விற்பனை செய்யப்பட்டுள்ளதாக கூறியது.
மோட்டார் சைக்கிள் விற்பனை
இதில் உள்நாட்டு வாகன விற்பனையானது கடந்த ஆண்டை காட்டிலும் 4% சரிந்து, 1,98,933 வாகனங்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டில் 2,07,775 வாகனங்கள் விற்பனை செய்திருந்தது. மொத்த மோட்டார் சைக்கிள் விற்பனையானது நவம்பரில் கடந்த ஆண்டை காட்டிலும் 12 சதவீதம் அதிகரித்து, 3,84,993 வாகனங்களாகவும், இது கடந்த ஆண்டில் 3,43,446 வாகனங்களாகவும் இருந்தது.
வர்த்தக வாகன விற்பனை
மொத்த வர்த்தக வாகன விற்பனையானது 38 சதவீதம் குறைந்து, 37,247 ஆக இருந்தது. கடந்த ஆண்டில் இதே மாதத்தில் 59,777 வாகனங்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது வாகன வாகன ஏற்றுமதியானது 2,23,307 வாகனங்களாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டு இதே மாதத்தில் 1,95,448 வாகனங்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது.