இந்தியாவின் தவிர்க்க முடியாத தொழில் குடும்பங்களில் ஒன்று தான் பஜாஜ். 1926-ம் ஆண்டு தொடங்கப்பட்ட பஜாஜ் குழுமத்தை மூன்றாவது தலைமுறையாக வெற்றிகரமாக வழி நடத்தியவர் தான் ராகுல் பஜாஜ்.
இவர் தற்போது பஜாஜ் ஃபைனான்ஸ் கம்பெனியின் தலைவராக இருக்கிறார். இந்த பதவியில் இருந்து, இந்த மாத இறுதியில் விலகிக் கொள்கிறாராம். இதை கம்பெனியே உறுதி செய்து இருக்கிறது. 1987-ம் ஆண்டு பஜாஜ் ஃபைனான்ஸ் தொடங்கப்பட்டதில் இருந்து, ராகுல் பாஜாஜ் தான் தலைவராக இருந்து வருகிறார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
தலைவர் பதவியில் இருந்து விலகினாலும், ராகுல் பஜாஜ், பஜாஜ் ஃபைனான்ஸ் இயக்குநர் குழுவில் non-executive non independent director-ஆக தொடர இருப்பதாகவும் பஜாஜ் ஃபைனான்ஸ் தெரிவித்து இருக்கிறது.
இந்த அறிவிப்பு வெளியானதால், பஜாஜ் ஃபைனான்ஸ் கம்பெனி பங்கு விலை நான்கு சதவிகிதம் வரை சரிந்து இருக்கிறது. நேற்று 3,441.50 ரூபாய்க்கு நிறைவடைந்த பங்கு விலை இன்று 3,304 ரூபாய்க்கு வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது.
ஏற்கனவே ஜூன் 2020 காலாண்டு முடிவுகள் அத்தனை சிறப்பாக இல்லை. இந்த கம்பெனியின் நிகர லாபம் 19.40 சதவிகிதம் சரிந்து இருக்கிறது. அதற்கு கொரோன வைரஸ் மற்றும் கொரோனாவைக் கட்டுப்படுத்த விதிக்கப்பட்ட லாக் டவுன்களைக் காரணமாகச் சொன்னது. எனவே புதிதாக வியாபாரங்களைப் பிடிக்க முடியவில்லை. கொடுத்த கடன்களுக்கான வட்டிகளையும் வசூலிக்க முடியவில்லை எனக் காரணம் சொன்னார்கள். இந்த காரணங்களை எல்லாம் சந்தை கேட்டுக் கொள்வதாகத் தெரியவில்லை. பங்கு விலை தடுமாறிக் கொண்டே தான் இருந்தது.
தற்போது ராகுல் பஜாஜ் பதவியில் இருந்து விலகும் செய்தி வெளியான உடன் மொத்தமாக சரிந்து இருக்கிறது.
ஆகஸ்ட் 01, 2020 முதல், ராகுல் பஜாஜின் மகன், சஞ்ஜீவ் பஜாஜ், இந்த நிறுவனத்தின் தலைவராக பொறுப்பேற்று நடத்த இருக்கிறாராம். தற்போது சஞ்ஜீவ் தான் பஜாஜ் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் துணைத் தலைவராக இருக்கிறார். அதோடு பஜாஜ் அலையான்ஸ் லைஃப் இன்சூரன்ஸ் கம்பெனி மற்றும் பஜாஜ் அலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் கம்பெனிகளின் தலைவராகவும் செயல்பட்டு வருகிறார்.
அதோடு, சஞ்ஜீவ் தான், பஜாஜ் ஹோல்டிங்ஸ் & இன்வெஸ்ட்மெண்ட்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராகவும் செயல்பட்டு வருகிறார் சஞ்ஜீவ் பஜாஜ்.