டெல்லி: பஜாஜ் பைனான்ஸ் நிறுவனம் கடந்த டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த மூன்றாவது காலாண்டில், அதன் மொத்த நிகரலாபம் 30% வீழ்ச்சி கண்டு, 1,049 கோடி ரூபாயாக குறைந்துள்ளது..
முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் நிகரலாபம் 1,488 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதே இந்த நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகரலாபம் 29% குறைந்து, 1,146 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் 1,614 கோடி ரூபாயாக இருந்துள்ளது.
வட்டி வருவாய் சரிவு
வங்கி அல்லாத இந்த நிதி நிறுவனத்தின் நிகர வட்டி வருவாய், கடந்த ஆண்டை விட 9 சதவீதம் குறைந்து, 4,973 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் 5,486 கோடி ரூபாயாக இருந்தது. இதே இந்த நிறுவனத்தின் மொத்த வருவாய் 5% குறைந்து, 6,658 கோடி ரூபாயாகவும், இது முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் 7,024 கோடி ரூபாயாகவும் இருந்துள்ளது.
வாராக்கடன் சரிவு
இதே இந்த நிறுவனத்தின் நிர்வாக மேலாண்மையின் கீழ் உள்ள சொத்துக்களின் மதிப்பு (assets under management) 1,43,550 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் 1,45,092 கோடி ரூபாயாகவும் இருந்துள்ளது. அதே போல பஜாஜ் பைனான்ஸின் மொத்த வாராக்கடன் விகிதம் 0.55% ஆகவும், இது முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் 1.61% ஆகவும் இருந்துள்ளது.
லாபத்தில் தான் சரிவு
இதே நிகர வாராக்கடன் மதிப்பானது மூன்றாவது காலாண்டில் 0.19% ஆகவும், இதே முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் 0.70% ஆகவும் இருந்தது. தற்போது நாட்டில் பரவி வரும் இந்த பெருந்தொற்றின் காரணமாக இந்த நிறுவனம் லாபத்தில் வீழ்ச்சி கண்டுள்ளதாக தெரிவித்துள்ளது. எனினும் இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில் இந்த நிறுவனத்தின் வாராக்கடன் விகிதமானது குறைந்துள்ளது.
நல்ல ஏற்றத்தில் பங்கு விலை
இதற்கிடையில் இந்த நிறுவனம் காலாண்டு முடிவுகளை அறிவித்த பின்னர், அதன் பங்கு விலையானது நல்ல ஏற்றம் கண்டு, 4,960.85 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இது முந்தைய அமர்வின் முடிவில் 4,713.6 ரூபாயாகவும் இருந்தது.
அதோடு இந்த பங்கின் விலையானது இண்டிராடேவில் 4994 ரூபாய் என்ற உச்சத்தினையும், 4752.35 என்ற குறைந்தபட்ச விலையினையும் தொட்டுள்ளது.
இது நல்ல அறிகுறியே
இது ஒரு நல்ல அறிகுறியே. ஏனெனில் ஒரு வங்கியோ அல்லது நிதி நிறுவனமோ வாரக்கடன் அதிகரித்து வருவதாக தொடர்ந்து காட்டுகிறது என்றால், அந்த நிறுவனம் பின்னடை சந்தித்து கொண்டுள்ளதாக கூறலாம். ஆனால் இந்த நெருக்கடியான காலகட்டத்திலும் வாராக்கடன் விகிதம் குறைந்துள்ளது என்பது நல்ல அறிகுறியே. இது வளர்ச்சிக்கான அறிகுறியே.