சிறிய நிதி நிறுவனமாக தொடங்கப்பட்ட பந்தன் வங்கி, இன்று மிகப்பெரிய வங்கியாக உருவெடுத்துள்ளது. இது தற்போது அதன் கணிசமான பங்குகளை விற்பனை செய்ய உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இதன் காரணமாக அதன் பங்கு விலையானது 9.66 சதவீதம் வீழ்ச்சி கண்டு, 311.90 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. இது கிட்டதட்ட 33 ரூபாய் சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து வெளியான செய்தியொன்றில், ஆகஸ்ட் 3ம் தேதியன்று CNBC-TV18 அறிக்கையின் படி, பந்தன் வங்கியின் புரோமோட்டர் அதன் 20.9 சதவீதம் பங்குகளை விற்பனை செய்யலாம் என்றும் கூறப்பட்டது. இந்த மிகப்பெரிய ஒப்பந்தத்தின் மதிப்பு 10,500 கோடி ரூபாய் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த வங்கியின் பங்கு விலையானது 311.90 ரூபாயாக சரிந்து வர்த்தகமாகி வருகிறது.
பந்தன் வங்கியின் 10,482 கோடி ரூபாய் மதிப்புள்ள 33 கோடி பங்குகள் பிஎஸ்இ மற்றும் என்எஸ்இ-யில் வர்த்தகம் செய்யப்பட்டதாகவும், இதன் மூலம் சுமார் 20.6 சதவீதம் பங்குகள் கைமாறியதாகவும், இதன் சராசரி மதிப்பு 314 ரூபாய் என்ற விலையும் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இதன் ப்ளோர் விலை ஒரு பங்கிற்கு 311.1 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், ஒரு பங்கிற்கு 9.89 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது, கடந்த வெள்ளிக்கிழமையன்று பந்தன் வங்கியின் பங்கு விலையானது 345.25 ரூபாயாக முடிவடைந்தது.
முதலீட்டு வங்கிகளான கிரெடிட் சூயிஸ், ஜேபி மார்கன், கோல்டுமேன் சாச்ஸ் மற்றும் ஜே எம் பைனான்சியல் ஆகியவை பங்கு விற்பனை குறித்து பந்தன் பைனான்சியல் ஹோல்டிங்ஸூக்கு ஆலோசனை வழங்குவதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கியின் ஒழுங்குமுறை விதிமுறைகளை பூர்த்தி செய்வதற்காக கடன் வழங்குனர்கள், புரோமோட்டர்களின் பங்குகளை குறைப்பதற்காகவும், வங்கியின் ஒரு முயற்சியாக இந்த நடவடிக்கை உள்ளது.
ரிசர்வ் வங்கியின் புதிய வங்கி உரிம விதிமுறைகளின் பட, வணிகம் தொடங்கிய நாளிலிருந்து மூன்று ஆண்டுகளுக்குள், வங்கிகள் புரோமோட்டர்கள் வைத்திருப்பதை 40 சதவீதமாகக் குறைக்க வேண்டும்.
பந்தன் வங்கி தற்போது 60.95 சதவீத பங்குகளை கையில் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.