பெங்களூரு: பெங்களூரில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்புகளில் பெங்காலி மொழி பேசும் பணியாளர்களை தவிர்க்க ஆரம்பித்துள்ளனராம்.
வங்கதேசத்திலிருந்து சட்டவிரோதமாக ஊடுறுவிய பலர் பெங்களூரில் வசித்து வருவதாக கூறப்படுகிறது. இவர்களும் மேற்கு வங்க மாநிலத்தவரைப் போலவே இருப்பதால் இவர்களைக் கண்டறிவது சிக்கலாக உள்ளது.
இந்த நிலையில் பெங்காலி மொழி பேசும் சட்டவிரோத குடியேறிகள் குறித்து போலீஸார் நடவடிக்கை எடுத்து வருவதால், எதற்கு வம்பு என்று பெங்காலி மொழி பேசும் பணியாளர்களை வீட்டு வேலைகள், சமையல் வேலை தோட்ட வேலை என எதற்கும் பயன்படுத்தாமல் தவிர்க்க பல அடுக்குமாடிக் குடியிருப்பாளர்கள் முடிவு செய்துள்ளனராம்.
பல ஆயிரம் ஊழியர்களின் நிலை கேள்விக்குறி
பெங்களூரில் கிட்டத்தட்ட 20 ஆயிரம் முதல் 25 ஆயிரம் பேர் வரை பெங்காலி மொழி பேசுவோர் இருப்பதாக கூறப்படுகிறது. இவர்கள் கட்டுமானப் பணிகள், வீட்டு வேலைகள் உள்ளிட்ட கூலி வேலைகளைச் செய்து வருகின்றனர். இவர்களின் நிலை தற்போது கேள்விக்குறியாகி உள்ளது.
அடுக்குமாடி குடியிருப்பில் தகவல்
கோரமங்களா, எச்எஸ்ஆர் லேஅவுட், சோமசுந்தர பாளையா, பனத்தூர், சர்ஜாபூர் சாலை, குண்டலஹள்ளி, துபரஹள்ளி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு வீடுகளில் பெங்காலி மொழி பேசுவோரை பணியில் வைக்க வேண்டாம் என்று தங்களுக்குள் தகவல்களைப் பரிமாறிக் கொண்டு வருவதாக டெக்கான் ஹெரால்ட் செய்தி கூறுகிறது.
இது எந்த அளவுக்கு உண்மை?
இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. அதேசமயம், பெங்காலி மொழி பேசுவோரை வேலையில் சேர்க்க குடியிருப்பாளர்களிடையே அச்சம் நிலவுவது உண்மைதான் என்று கூறப்படுகிறது. அவர்களை வேலைக்குச் சேர்த்து போலீஸ் விசாரணை அது இது என்று தேவையில்லாத தலைவலியை விலை கொடுத்து வாங்க வேண்டாம் என்பதால்தான் இதுபோன்ற முடிவுகளை குடியிருப்பாளர்கள் எடுத்துள்ளதாக சொல்கிறாரக்ள்.
நெறிமுறைகள் வேண்டும்
அதேசமயம், பெங்காலி மொழி பேசுவரை வேலையில் அமர்த்துவது தொடர்பாக காவல்துறையும், அரசும் சில வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கினால் நல்லது என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. யாரை வேலைக்குச் சேர்க்கலாம், எப்படி அவர்களை அடையாளம் காண்பது உள்ளிட்டவற்றை அரசும், காவல்துறையும் வழிகாட்டினால் பல குழப்பங்களைத் தவிர்க்க முடியும் என்றும் குடியிருப்பாளர்கள் கருதுகின்றனர்.
பெண்களும் குழந்தைகளும் பாதிப்பு
இதற்கிடையே இதுபோன்ற குழப்பங்களால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான் என்று தேசிய மகளிர் கூட்டணி என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் தலைவர் ரூத் மனோரமா கூறியுள்ளார். அவர் கூறுகையில், இதுபோன்ற முடிவுகளால் அப்பாவி தொழிலாளர்கள் வேலை இழக்கின்றனர். இதனால் அதிகம் பாதிக்கப்படுவது ஆண்களை விட பெண்களும், குழந்தைகளும்தான். இதனால் சட்டவிரோத செயல்கள் அதிகரிக்கவே வாய்ப்புள்ளது. வேலையில்லாத பட்சத்தில் அவர்கள் தவறான பாதைக்குத் திரும்பும் அபாயமும் உள்ளது. இது மிகப் பெரிய சிக்கலான விஷயம். இதை உரியவர்கள் உரிய முறையில் தீர்வு காண முன்வர வேண்டும் என்றார்.