இந்தியா ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் அடுத்தடுத்து தனது ஊழியர்களைக் கொத்துக் கொத்தாகப் பணிநீக்கம் செய்து வருவது பெரும் அதிர்ச்சி அளித்து வரும் நிலையில், பெங்களூரைச் சேர்ந்த டிஜிட்டல் ஹெல்த்கேர் சேவை நிறுவனமான Mfine மொத்த ஊழியர்கள் எண்ணிக்கையில் 75 சதவீத ஊழியர்களைப் பணிநீக்கம் செய்து அதிர்ச்சி அளித்துள்ளது.
புதிய முதலீடுகள் பெரிய அளவில் குறைந்துள்ள காரணத்தாலும், போட்டி அதிகரித்துள்ளதாலும், பண இருப்பு அதிகளவில் குறைந்துள்ளதாலும் பல முன்னணி நிறுவனங்கள் பணம் இல்லாமல் திவால் ஆகும் நிலையைத் தவிர்க்க ஊழியர்களைப் பணிநீக்கம் செய்து வருகின்றனர்.
Mfine நிறுவனம்
பெங்களூரை தலைமையிடமாகக் கொண்டு இந்தியாவின் பல மாநிலங்களில் ஆன்லைன் டாக்டர் கன்சல்டிங், வீட்டிலேயே மருத்துவப் பரிசோதனை, மருந்து பொருட்கள் ஹோம் டெலிவரி, ஸ்கேன் போன்ற சேவைகளை அளித்து வரும் டிஜிட்டல் ஹெல்த்கேர் சேவைகளைக் கொண்டு நிறுவனம் தான் Mfine.
கூகுள் மீட்
Mfine நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் கூகுள் மீட் வாயிலாகத் தங்களுக்குக் கீழ் பணியாற்றும் ஊழியர்களை அழைத்துப் பணிநீக்கம் குறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனால் மொத்த நிறுவனமும் தற்போது சோகத்தில் மூழ்கியுள்ளது.
600 ஊழியர்கள் பணிநீக்கம்
Mfine நிறுவனத்தில் தற்போது 800க்கும் அதிகமாக ஊழியர்கள் பணியாற்றி வரும் நிலையில் கிட்டதட்ட 500 முதல் 600 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளதாகத் தெரிகிறது. கொரோனா தொற்றில் இருந்து அனைத்து துறையும் அனைத்து நிறுவனங்களும் இயல்பு நிலைக்குத் திரும்பி வரும் நிலையில் ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் பணிநீக்கம் என்பது அதிர்ச்சி அளிக்கும் விஷயமாக உள்ளது.
97 மில்லியன் டாலர் முதலீடு
Mfine நிறுவனம் 2017ஆம் ஆண்டு மைந்த்ரா இணை நிறுவனர் அசுதோஷ் லாவானியா மற்றும் பிரசாத் கொம்பள்ளி ஆகியோர் இணைந்து உருவாக்கினர். கடந்த ஆண்டு மட்டும் Mfine நிறுவனம் சுமார் 68 மில்லியன் டாலர் அளவிலான முதலீட்டை திரட்டி மொத்தம் 97 மில்லியன் டாலரை மொத்தமாகத் திரட்டியுள்ளது.
75% ஊழியர்கள் பணிநீக்கம்
Mfine சேவை தளத்தில் 6000 மருத்துவர்கள், 30 லட்சம் வாடிக்கையாளர்கள், மாதம் 3 லட்சம் வர்த்தகப் பரிமாற்றங்கள் கொண்டு இயங்கி வரும் நிலையில் தற்போது அதிகப்படியான செலவுகள் மூலம் அதிகப்படியான பணத்தை இழந்து தற்போது 500க்கும் அதிகமாக ஊழியர்களை அதாவது மொத்த ஊழியர்களில் 75 சதவீத ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளது.
ஊழியர்கள் நிலை
மேலும் பணிநீக்கம் செய்யப்பட்ட 500 முதல் 600 ஊழியர்களுக்கு 20 நாள் சம்பளத்தை அதாவது இதுவரை பணியாற்றிய நாட்களுக்கான சம்பளத்தைக் கொடுக்கவும், மீதமுள்ள நாட்களுக்கும், நோட்டீஸ் காலம், வேலை நீக்க ஊதியம் (severance pay) ஆகியவற்றைக் கணக்கிட்டு அடுத்த 60 நாட்களுக்குள் பணத்தைச் செலுத்த முடிவு செய்துள்ளது.