இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் பல கடந்த 2 வருடத்தில் போதுமான முதலீட்டையும் வர்த்தகத்தையும் பெற முடியாமல் தவித்து வருகிறது. சீனா முதலீடுகளுக்கு இன்னும் மத்திய அரசு அனுமதி அளிக்காத நிலையில் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்குப் போதுமான முதலீடுகள் கிடைக்காமல் உள்ளது.
இந்த நிலையில் பெங்களூரைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் முன்னணி பர்னிச்சர் ரென்டல் ஸ்டார்ட்அப் நிறுவனமான Furlenco தனது ஊழியர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பெங்களூர் Furlenco
பெங்களூரில் பல லட்சம் பேரை வாடிக்கையாளர்களாகக் கொண்டு இருக்கும் பர்னிச்சர் ஸ்டார்ட்அப் நிறுவனமான Furlenco நிர்வாக மறு சீரமைப்பு நடவடிக்கையை கையில் எடுத்துள்ளது. இந்த நடவடிக்கையின் கீழ் சுமார் 180-200 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
200 ஊழியர்கள் பணிநீக்கம்
Furlenco தற்போது அறிவித்துள்ள 200 ஊழியர்கள் பணிநீக்க முடிவில் அதிகப்படியான ஊழியர்களை, வாடிக்கையாளர் சேவை பிரிவில் இருந்து குறிப்பாகக் குறைகளை நிர்வகித்தல், திட்டமிடுதல் மற்றும் பிற செயல்பாடுகளில் பணியாற்றி வரும் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய முடிவு செய்யப்பட உள்ளது.
பணிநீக்கம்
புனே, கொல்கத்தா, அகமதாபாத் ஆகிய பகுதிகளில் இருக்கும் Furlenco நிறுவனம் தனது வர்த்தக சேவைகளைப் படிப்படியாகக் குறைக்க முடிவு செய்துள்ள நிலையில், தற்போது ஊழியர்கள் பணிநீக்கத்தை அறிவித்துள்ளது. Furlenco நிறுவனம் இதுவரையில் சுமார் 60 மில்லியன் டாலர் அளவிலான முதலீட்டைத் திரட்டியுள்ளது.
3ஆம் தரப்பு நிறுவனம்
இதோடு சொத்து மேலாண்மை, பழுது நீக்கம், மெயின்டனன்ஸ், சொத்துத் திரும்பப் பெறுதல் போன்ற முக்கியமான சேவைகளுக்குப் புதிதாக 3ஆம் தரப்பு நிறுவனத்தையும் நியமித்துள்ளது. இதன் மூலம் இனி Furlenco நிறுவனம் நிர்வாகப் பணிகளை மட்டுமே செய்ய முடிவு செய்துள்ளது, இதனால் ஊழியர்கள் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது.
அஜித் மோகன் கரிம்பனா
2012ல் கோல்டுமேன் சாச்சஸ், மோர்கன் ஸ்டான்லி போன்ற முன்னணி நிறுவனத்தில் பணியாற்றிய அஜித் மோகன் கரிம்பனா பர்னிச்சர் வாடகை சேவையை அளிக்கும் Furlenco நிறுவனத்தைத் துவங்கினார். வேகமாக இயங்கும் வாழ்க்கை முறையில் இத்தகைய சேவை இளம் தலைமுறையினர் மத்தியில் அதிகளவில் வரவேற்பு பெற்றது.