தனி நபர் வருவாயில் பங்களாதேஷ், இந்தியாவுக்கு நெருக்கமாக வந்துவிட்டது என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியம் உலக நாடுகள் குறித்த பொருளாதார வளர்ச்சி அறிக்கையை இன்று வெளியிட்டது.
அந்த அறிக்கையில் நடப்பு ஆண்டில் இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் தனி நபர் வருவாயினை, அண்டை நாடான பங்களாதேஷ் இந்தியாவை முந்த வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
தனிநபர் வருவாய் குறையும்
2021ம் நிதியாண்டில் இந்தியாவின் தனி நபர் வருமானம்10.3 சதவீதம் குறைந்து, 1,877 டாலாராக குறையும் என்றும், இதே காலகட்டத்தில் பங்களாதேஷின் தனி நபர் வருமானம் 4 சதவீதம் அதிகரித்து, 1,888 டாலராக அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் ஐஎம்எஃப் தெரிவித்துள்ளது.
முதல் காலாண்டு ஜிடிபி வீழ்ச்சி
கொரோனா பரவலைக் கருத்தில் கொண்டு கடந்த மார்ச் இறுதியில் இருந்து, நாடு தழுவிய லாக்டவுன் போடப்பட்டது. இதன் காரணமாக முதல் காலாண்டிலேயே 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்திய பொருளாதாரம் வீழ்ச்சி கண்டது. இந்த நிலையில் இரண்டாவது காலாண்டில் எந்த அளவுக்கு வீழ்ச்சி காணுமோ தெரியவில்லை.
பொருளாதார வளர்ச்சி
ஏனெனில் பொருளாதாரத்தினை கருத்தில் கொண்டு லாக்டவுனில் தளர்வுகள் அளிக்கப்பட்டிருந்தாலும், தற்போது வரையில் முழுமையாக பொருளாதார வளர்ச்சி குறித்தான அறிகுறிகள் காணப்படவில்லை. இந்த நிலையில், நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் ஜிடிபி விகிதம் மோசமான வீழ்ச்சி காணும் என்றே பல நிபுணர்களும் கூறி வருகின்றனர்.
இந்தியாவை முந்தும் பங்களாதேஷ்
அந்த வகையில் சர்வதேச நாணய நிதியமும் நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் ஜிடிபி விகிதம் 10.3% வீழ்ச்சி காணலாம் என மதிப்பிட்டுள்ளது.
பங்களாதேஷை விட இந்தியாவின் தனி நபர் வருவாயானது, சில ஆண்டுகளுக்கு முன்பு வரையில் கணிசமாக அதிகமாக இருந்து வருகின்றது. ஆனால் வேகமாக அதிகரித்து வரும் ஏற்றுமதி வளர்ச்சியினால் இந்த இடைவெளியானது குறைந்து வருகிறது.
என்ன காரணம்
இது தவிர இடைப்பட்ட காலத்தில் இந்தியாவின் சேமிப்பு மற்றும் முதலீடுகள் மந்தமாக உள்ளது. ஆனால் இந்த காலத்தில் பங்களாதேஷின் மேற்கண்ட விகிதங்கள் கணிசமாக உயர்வைக் கண்டது. இந்த நிலையில் இந்தியா, பாகிஸ்தான், நேபாளை விட முன்னிலையில் இருக்கலாம். ஆனால் பங்களாதேஷ், பூட்டான், இலங்கை மற்றும் மாலத்தீவுகள் இந்தியாவினை விட அதிகமாக இருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மிக மோசமான சரிவு
நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதாரம், கடந்த 1990 - 91 நெருக்கடிக்குப் பின்னர் இந்தியா பொருளாதாரம் மிக சரிவினைக் காணலாம் என்றும் கணித்துள்ளது. இலங்கைக்கு பிறகு தெற்காசியாவில் மிக மோசமாக பாதிப்புக்குள்ளான பொருளாதாரமாக இந்தியா இருக்கக்கூடும் என்றும் அது காட்டுகிறது.