தனி நபர் வருமானத்தில் விரைவில் இந்தியாவை விட வங்க தேசம் முந்திச் செல்ல வாய்ப்புள்ளதாக சர்வதேச நாணய நிதியம் கணித்துள்ளது.
நாட்டில் கொரோனாவின் தாக்கம் மிக வேகமாக பரவி வரும் நிலையில், இந்தியாவின் பொருளாதாரம் மிக மோசமான வீழ்ச்சியினை கண்டு வருகிறது. முதல் காலாண்டிலேயே 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிந்தது.
கடந்த மார்ச் மாதம் தொடங்கி நாடு தழுவிய லாக்டவுன் போடப்பட்ட நிலையில், சில மாதங்களுக்கு இந்தியாவே ஸ்தம்பித்து போனது என்று தான் கூற வேண்டும். இதனால் பல ஆயிரம் பேர் தங்கள் வேலையினை இழந்து, வாழ்வதாரத்தினை இழந்து தவித்து வருகின்றனர். இதற்கிடையில் அந்த சமயத்தில் கொரோனாவால் இந்தியாவின் பொருளாதாரம் குறித்தான நடவடிக்கைகளும் முற்றிலும் முடங்கி போயின.
இந்தியாவை முந்த வாய்ப்புண்டு
இப்படி ஒரு நெருக்கடியான நிலையில் தான், சர்வதேச நாணய நிதியம் உலக நாடுகள் குறித்த பொருளாதார வளர்ச்சி அறிக்கையை கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியிட்டது. அந்த அறிக்கையில் நடப்பு ஆண்டில் இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் தனி நபர் வருவாயினை, அண்டை நாடான பங்களாதேஷ் இந்தியாவை முந்த வாய்ப்புள்ளதாக கூறியது.
தனிநபர் வருவாய்
மேலும் நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் தனி நபர் வருமானம் 10.3 சதவீதம் குறைந்து, 1,877 டாலராக குறையும் என்றும் மதிப்பிட்டுள்ளது. இதே காலகட்டத்தில் அண்டை நாடான பங்களாதேஷின் தனி நபர் வருமானம் 4 சதவீதம் அதிகரித்து, 1,888 டாலராக அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் ஐஎம்எஃப் கூறியது.
இனி பொருளாதார வளர்ச்சி
பொருளாதாரத்தினை கருத்தில் கொண்டு லாக்டவுனில் படிப்படியாக பல தளர்வுகள் அளிக்கப்பட்டிருந்தாலும், தற்போது வரையில் முழுமையாக பொருளாதார வளர்ச்சி குறித்தான அறிகுறிகள் காணப்படவில்லை. முதல் காலாண்டினை போல் இல்லாவிட்டாலும், நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் ஜிடிபி விகிதம் நிச்சயம் பாதிக்கப்படும் என்றே பல நிபுணர்களும் கூறி வருகின்றனர்.
இந்தியா தான் டாப்
இந்தியாவின் தனி நபர் வருவாயானது, சில ஆண்டுகளுக்கு முன்பு வரையில், பங்களாதேஷை விட கணிசமாக அளவு அதிகமாக இருந்து வருகின்றது. ஆனால் வேகமாக அதிகரித்து வரும் ஏற்றுமதி வளர்ச்சியினால் இந்த இடைவெளியானது குறைந்து வருகிறது. இதற்கிடையில் தான் ஐஎம்எஃப் அறிக்கை வெளியாகியுள்ளது.
இந்தியாவுக்கு முன்னால் இருக்கும் நாடுகள்
இந்த இடைப்பட்ட காலத்தில் இந்தியாவின் சேமிப்பு மற்றும் முதலீடுகள் மந்தமாக உள்ளது. ஆனால் இந்த காலத்தில் பங்களாதேஷின் மேற்கண்ட விகிதங்கள் கணிசமாக உயர்வைக் கண்டன. இந்தியா, பாகிஸ்தான், நேபாளை விட முன்னிலையில் இருக்கலாம். ஆனால் பங்களாதேஷ், பூட்டான், இலங்கை மற்றும் மாலத்தீவுகள், இந்தியாவினை விட அதிகமாக இருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராகுல் காந்தி சாடல்
சர்வதேச நாணயத்தின் இந்த அறிக்கையை சுட்டி காட்டி, பாஜகவை விமர்சித்துள்ள ராகுல் காந்தி, தனது ட்விட்டர் பக்கத்தில், பாஜக-வின் 6 ஆண்டு சாதனை, பங்களாதேஷ் இந்தியாவை முந்தப் போகிறது என்று கடுமையாக சாடியுள்ளார்.
உண்மையில் கொரோனா முதலாக தோன்றிய சீனா வளர்ச்சி பாதையை நோக்கி சென்று கொண்டுள்ளது. ஆனால் இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகள், பின்னடைவை சந்தித்துக் கொண்டுள்ளது.