இந்தியாவில் 100-ல் 95 பேருக்குத் தெரிந்த மிக எளிமையான முதலீடு என்றால், அது வங்கியில் பணத்தை டெபாசிட் செய்வது தான்.
கடந்த சில வருடங்களாக, வங்கியின் வட்டி விகிதங்களைத் தொடர்ந்து குறைத்துக் கொண்டு வருவதால், வங்கிகள் டெபாசிட்டுகளுக்கு கொடுக்கும் வட்டி விகிதங்களும் கணிசமாக குறைந்து இருக்கிறது.
இருப்பினும் இன்று வரை தங்கள் டெபாசிட் பணத்தில் இருந்து வரும் வட்டி வருமானத்தை வைத்து வாழ்ந்து கொண்டு இருப்பவர்களை நாம் பார்க்க முடியும். அந்த அளவுக்கு வங்கி டெபாசிட்கள், மக்கள் மனதில் தனி இடம் பிடித்து இருக்கிறது.
வங்கி டெபாசிட் பாதுகாப்பு
பொதுவாக வங்கிகளை நம்பி பணத்தை வங்கி டெபாசிட்டில் முதலீடு செய்பவர்களுக்கு ஒரு சின்ன பாதுகாப்பு இருக்கிறது என்பது எத்தனை பேருக்குத் தெரியும். நாம் ஃபிக்ஸட் டெபாசிட்டில் போடும் பணம் எவ்வளவாக இருந்தாலும், ஒரு லட்சம் ரூபாய்க்கு கேரண்டி கொடுப்பார்கள்.
எதற்கு ஒரு லட்சம்
வங்கி ஏதாவது சிக்கலுக்கு உள்ளாகி, சரியாக இயங்க முடியாமல், கையில் பணம் இல்லாமல் போனால், வங்கியை நம்பி தங்கள் பணத்தை டெபாசிட் செய்தவர்களுக்கு, அதிகபட்சமாக ஒரு லட்சம் ரூபாய் பணத்தைக் கொடுப்பார்கள். இதை depositors insurance credit guarantee corporation என்கிற ஆர்பிஐயின் துணை நிறுவனம் தான் கொடுக்கும்.
எந்த டெபாசிட்டுகளுக்கு உண்டு
இந்தியாவில் இருக்கும் பெரும்பாலான வங்கிகளுக்கு இந்த DICGC-ன் இன்சூரன்ஸ் திட்டத்தில் இணைந்து இருக்கிறார்களாம். இந்த திட்டத்தின் கீழ் இணைந்து இருக்கும் வங்கிகளில்
1. ஃபிக்ஸட் டெபாசிட்
2. சேமிப்புக் கணக்கு டெபாசிட்
3. நடப்புக் கணக்கு டெபாசிட்
4. ஆர் டி கணக்கு டெபாசிட் போன்றவைகளுக்கு இந்த DICGC இன்சூரன்ஸ் கேரண்டி கொடுக்கிறார்கள்.
5 லட்சம்
இந்த 2020 - 21 பட்ஜெட்டில், ஒரு டெபாசிட்டர், ஒரு வங்கியில் தன் பணத்தை டெபாசிட்டாகப் போட்டு இருக்கிறார் என வைத்துக் கொள்வோம். அந்த வங்கி ஏதாவது சிக்கலுக்கு உள்ளாகி செயல்படாமல் போனால், இனி DICGC - depositors insurance credit guarantee corporation நிறுவனம், அதிகபட்சமாக 5 லட்சம் ரூபாய் கொடுக்கும் என அறிவித்து இருந்தார்கள்.
நடைமுறை
பட்ஜெட் அறிவிப்புகளை நடைமுறைப்படுத்தத் தொடங்கும் விதமாக, முதலில் DICGC-ன் வங்கி டெபாசிட்டுகளுக்கான இன்சூரன்ஸ் தொகையை 5 லட்சமாக உயர்த்த, நிதி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் நிதி சேவைகள் துறை அனுமதி கொடுத்து இருக்கிறார்களாம். இதை நிதி அமைச்சகத்தின் செயலர் ராஜிவ் குமாரே சொல்லி இருக்கிறார்.
நம்பிக்கை அதிகரிக்கும்
DICGC-ன் வலைதள தகவல்கள் படி, 1993-ம் ஆண்டுக்குப் பின், வங்கியில் பணத்தை டெபாசிட் செய்பவர்களுக்கு 1 லட்சம் ரூபாய் தான் இன்சூரன்ஸ் கொடுத்து வருகிறார்களாம். சுமாராக 25 ஆண்டுகள் கழித்து இப்போது, வங்கியில் டெபாசிட் செய்பவர்களுக்கு 1 லட்சம் ரூபாயில் இருந்து 5 லட்சம் ரூபாயாக இன்சூரன்ஸ் கவரேஜை அதிகரித்து இருக்கிறார்கள். இந்த நடவடிக்கையால், வங்கியை நம்பி, மக்கள் மேலும் தங்கள் பணத்தை டெபாசிட் செய்யவார்கள் என எதிர்பார்க்கலாம்.