கொரோனா வைரஸ் தொற்று, லாக்டவுன் அறிவிப்பால் ஏற்பட்ட பொருளாதாரச் சரிவில் இருந்து மீண்டு வர மத்திய அரசு பல்வேறு வளர்ச்சி திட்டங்களை அறிவித்திருந்த நிலையில், இந்தியச் சந்தை பணப்புழக்கத்தை அதிகரிக்க ரிசர்வ் வங்கி 2020ஆம் ஆண்டில் மட்டும் ரெப்போ விகிதத்தில் 115 அடிப்படை புள்ளிகளைக் குறைத்துள்ளது.
இந்நிலையில் இன்று நடந்து முடிந்த இருமாத நாணய கொள்கை கூட்டத்தின் முடிவில் நாட்டின் வளர்ச்சிக்கு போதுமான தளர்வுகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட உள்ள காரணத்தால் ரிசர்வ் வங்கி எவ்விதமான வட்டி விகிதத்தையும் மாற்றம் செய்யவில்லை.
ரெப்போ விகிதம்
இதன் மூலம் ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை எவ்விதமான மாற்றமும் செய்யாமல் 4 சதவீத வட்டி விகிதம் தொடரும் என அறிவித்துள்ளார். இதேபோல் ரிசர்வ் வங்கியின் ரிவர்ஸ் ரெப்போ விகிதம் 3.35 சதவீதமாகவே அடுத்த இரண்டு மாதங்களுக்கும் தொடரும் என இன்று தெரிவித்துள்ளார்.
ரெப்போ விகிதம், ரிவர்ஸ் ரெப்போ விகிதம்
ரெப்போ விகிதம் என்பது வர்த்தக வங்கிகள் (தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகள்) தனக்கான நிதி தேவையைப் பூர்த்தி செய்ய ரிசர்வ் வங்கியிடம் இருந்து பெறும் கடனுக்கான வட்டி விகிதம் தான் இந்த ரெப்போ விகிதம். இதேபோல் ரிவர்ஸ் ரெப்போ விகிதம் என்றால் ரிசர்வ் வங்கிக்கு நிதி தேவை ஏற்படும் போது வர்த்தக வங்கிகளிடம் இருந்தும் பெறும் போது விதிக்கப்படும் வரி விதிப்பு.
தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகள்
இந்நிலையில் இந்தியாவில் செயல்படும் தனியார் வங்கி மற்றும் பொதுத்துறை வங்கிகள், ரிசர்வ் வங்கியின் ரெப்போ விகிதத்தை அடிப்படையாக வைத்துத் தான் வங்கியின் வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை நிர்ணயம் செய்கிறது.
வைப்பு நிதி
தற்போது ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தில் எவ்விதமான வட்டி உயர்வை அறிவிக்காத நிலையில், வங்கியின் டெபாசிட் திட்டத்திற்கான வட்டி விகிதம் உயர வாய்ப்பு இல்லை. வங்கி வைப்பு நிதி மூலம் கிடைக்கும் வருமானத்தை முக்கியமானதாகக் கொண்டிருக்கும் இருக்கும் பல கோடி பேருக்கு ரிசர்வ் வங்கியின் முடிவு பெரிய பின்னடைவாக உள்ளது.