தேசிய வங்கிகளில் ஒன்றான பாங்க் ஆப் இந்தியாவின் நிகர லாபம் 142 சதவீதம் அதிகரித்த போதிலும் அந்த வங்கியின் பங்குகள் பங்குச் சந்தையில் கடந்த ஒரு ஆண்டில் வீழ்ச்சியடைந்துள்ளது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.
இந்தியாவில் உள்ள தனியார் வங்கிகள் பெரும்பாலும் லாபத்தில் சென்று கொண்டிருக்கும் நிலையில் பல தேசிய வங்கிகள் நஷ்டத்தில் சென்று கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்கு பெரும்பாலும் வாராக் கடன்களே காரணம் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பாங்க் ஆப் இந்தியாவின் நிகர லாபம் கடந்த மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் 147 சதவீதம் அதிகரித்து உள்ளதாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளது.
நிகர லாபம்
கடந்த 2021 - 22 ஆம் நிதியாண்டின் இறுதி காலாண்டில் பேங்க் ஆப் இந்தியாவின் நிகர லாபம் 606 கோடி ரூபாய் என்றும் முந்தைய நிதி ஆண்டில் இதே காலகட்டத்தில் இந்த வங்கியின் நிகர லாபம் ரூ.250 கோடியாக மட்டுமே இருந்தது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
வங்கியின் மொத்த வருவாய்
இந்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில் பேங்க் ஆப் இந்தியாவின் மொத்த வருமானம் ரூபாய் 11,443.46 கோடியாக இருந்தது என்றும் முந்தைய ஆண்டில் இதே மாதங்களில் பெற்ற வருவாய் 11, 155.53 கோடி என்றும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வாராக்கடன்
மேலும் இந்த நான்காவது காலாண்டில் வாராக் கடன் விகிதம் 2.3 சதவீதமாக குறைந்துள்ளது என்றும் முந்தைய ஆண்டில் இதே காலாண்டில் வாராக்கடன் விகிதம் 3.35 சதவிகிதமாக இருந்தது என்றும் அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
பங்குச்சந்தை
பேங்க் ஆப் இந்தியா நல்ல லாபத்தில் இயங்கி கொண்டிருக்கும் அதே நேரத்தில் பேங்க் ஆப் இந்தியாவின் பங்குகள், பங்குச்சந்தையில் கடந்த ஆண்டு மே மாதத்தில் ரூ.77 என்று இருந்த நிலையில் தற்போது 45 ரூபாயாக குறைந்து வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு ஒட்டுமொத்த பங்கு சந்தை வீழ்ச்சி அடைந்தது தான் காரணம் என்றும் வங்கியின் செயல்பாடு குறைவினால் பங்குச் சந்தையின் விலை வீழ்ச்சி அடையவில்லை என்றும் பங்குச் சந்தை வல்லுனர்கள் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications