நாட்டில் நிலவி வரும் நெருக்கடியான நிலையில், இருக்கும் வேலையாவது நிலைக்குமா? இல்லை அதுவும் போய்விடுமா? முழு சம்பளமும் வருமா? எவ்வளவு குறைப்பார்களோ? என பய உணர்வு ஊழியர்கள் மத்தியில் இருந்து வருகிறது.
ஆனால் இதற்கெல்லாம் விதிவிலக்கல்ல, வங்கி ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்குவதற்கான ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.
பொதுத்துறை வங்கி ஊழியர்களுக்கு 15% சம்பள உயர்வு வழங்குவதற்கான ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.
தீவிர பேச்சு வார்த்தை
கடந்த சில வருடங்களாகவே பொதுத்துறை வங்கி ஊழியர்களின் சம்பளத்தை, உயர்த்தித் தர வேண்டுமென ஊழியர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதற்காக வங்கி ஊழியர் சங்கங்கள் இந்திய வங்கிகள் சங்கத்துடன் கடந்த மூன்று ஆண்டுகளாக தீவிர பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வந்தன.
சம்பள உயர்வு
இந்த நிலையில் ஒவ்வொரு ஆண்டும் வங்கி ஊழியர்களுக்கு 15% ஊதிய உயர்வு வழங்க இந்திய வங்கிகள் சங்கம் ஒப்புக் கொண்டுள்ளது. இதனால், பொதுத்துறை வங்கிகளுக்கு ஆண்டுக்கு 7,898 கோடி ரூபாயாக கூடுதலாக செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த சம்பள உயர்வால் சுமார் 8.5 லட்சம் வங்கி ஊழியர்கள் பயனடைவார்கள் என்றும் கூறப்படுகிறது. .
90 நாட்களுக்குள் செயல்படுத்தப்படும்
மேலும் இந்த ஊதிய உயர்வு தொடர்பாக உடன்பாடு எட்டப்பட்டுள்ள நிலையில், இந்த ஊதிய உயர்வானது நவம்பர் 1, 2017 வரையில் அமல்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு இந்த ஒப்பந்தமானது 90 நாட்களுக்குள் செயல்படுத்தப்படும் என்றும் இந்திய வங்கிகள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
பெர்பார்மன்ஸ் அடிப்படையில் ஊக்கத்தொகை
மேலும் இந்த ஒப்பந்தத்தின் படி, பொதுத்துறை வங்கி ஊழியர்களின் திறனுக்கு (Performance) ஏற்ப ஊக்கத் தொகை வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. இது வங்கியின் செயல்பாட்டு லாபம் அல்லது நிகர லாபத்திற்கு ஏற்ப ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யார் யாருக்கு?
மேலும், அடிப்படை ஊதியம் அகவிலைப்படியுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதாக இந்திய வங்கிகள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்திய வங்கிகள் சங்கத்தின் ஒப்பந்தம் பொதுத்துறை, தனியார், வெளிநாட்டு வங்கிகள் என சுமார் 37 வங்கிகளுக்கு பொருந்தும். இந்த புதிய ஒப்பந்தத்தின் விளைவாக தேசிய பென்சன் திட்டத்திற்கு வங்கிகளின் பங்களிப்பு 14% உயரும் என்று கூறப்படுகிறது.